Wednesday 26 May 2010

மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!





இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.




தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.



எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன்முதன்மைப் பணி.



கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.



ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.



_____________________________________________



இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு!



1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.



1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.



உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.



ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.



________________________________________________



கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு!



இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.



தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.



பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.



இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.



அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.



இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.



கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.



அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.



மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.



இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.



______________________________________________________________



விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!



தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம் தெரியாது.



பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் கிடைக்கும் பொருளை வாங்குவது நுகர்வோர் வழக்கம். அதன்படி தமது பானங்களை மட்டுமே கடைக்காரர் விற்க வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தமது வர்த்தகக் கொள்கையாக வைத்திருக்கின்றன. கடைக்காரருக்கு குளிர்பதன பெட்டியை மலிவு விலையில் அல்லது இலவசமாய் வழங்குவார்கள். முதல் மிச்சம் என கடைக்காரர் நினைப்பார். ஆனால் கோக் அல்லது பெப்சி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், அதை விற்றே கடன் அடைக்க வேண்டும், அதனால் அதிகமாக அந்த பானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்ற சுழலில் தாம் சிக்குவோம் என்பதை அவர் அறியமாட்டார். மேலும் பெயர்ப் பலகைகள், சுவர்க்கடிகாரம், பனியன், தொப்பி என்ற பரிசுப் பொருட்கள், முதல் கொள்முதல் இலவசம் போன்ற சலுகைகளாலும் கடைக்காரர்களை அவர்களை அறியாமலே விலை போக வைத்துவிட்டனர்.



தமது பானங்கள் போகாத புதிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு தாதா ஏஜெண்டுகளை வைத்திருக்கின்றனர். தாதாக்கள் அப்பகுதியைப் பழக்கிய பிறகு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சந்தையைத் தொடருவர். உணவகங்கள், பெரும் அங்காடிகள், திரையரங்குகள் போன்ற பெரிய விற்பனையாளர்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து தமது குளிர்பானங்களை மட்டும் விற்க வைக்கின்றனர்.



புது தில்லியில் பி.வி.ஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கிற்கு 60 இலட்சமும், பம்பாயின் ஸ்டெர்லிங் திரையரங்கிற்கு 30 இலட்சமும் கொடுத்த பெப்சி சமீபத்தில் மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிற்கும் ஒருபெரும் தொகை கொடுத்து தனது பாட்டில்களை மட்டும் விற்க வைத்திருக்கிறது. கோக், பெப்சி இரண்டும் இதற்காக மட்டும் வருடந்தோறும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றன.



குளிர்பான விற்பனையில் பாட்டில்கள் சுழற்சி அதாவது பாட்டில் தொழிற்சாலை – கடை – மீண்டும் தொழிற்சாலை என இடையறாமல் பயணம் செய்வது முக்கியம். ஒரு வருடத்தில் ஒருபாட்டில் 10 முறையாவது விற்கப்பட்டால்தான் லாபம். இதில் 30 சதவீதம் பாட்டில்கள் உடைபடும். மீதி சுற்றிவரும். அப்படி சுற்றி வரும் தனது எதிர் நிறுவன பாட்டில்களை முடக்குவதற்கு இந்நிறுவனங்கள் ஏராளமான சதி வேலைகள் செய்கின்றன.



அடுத்து குளிர்பானத் தயாரிப்பு – விற்பனைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக இந்நிறுவனங்கள் பாதியை மட்டும் முதலீடு செய்கின்றன. மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலம் முதலீடு செய்ய வைக்கின்றன. பெப்சி – கோக்கின் ரசாயன கரைசல் கூழ் (எசன்ஸ்) மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும். கூழை நீரில் கலந்து பாட்டிலில் விற்பதற்கென்றே உலகம் முழுவதும் பிராந்திய அளவில் ஏராளமான பாட்டில் தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் கோக்கிற்கு 60, பெப்சிக்கு 26 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கோக் மட்டும் பாதியை சொந்தமாகவும் மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வைத்திருக்கின்றது.



இத்தகைய பாட்டில் தொழிற்சாலைகளின் அதிபர்கள் கோக் கோருகின்ற அளவு முதலீடு செய்ய வேண்டும். கோக் பானங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒப்பந்த விதிகள். தற்போது இத்தொழிற்சாலைகளை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி வருகிறது கோக். சிலரை பாதி பங்குகளை தருமாறு கட்டளையிடுகிறது. கோக்கின் மிரட்டலை எதிர்த்து 23 அதிபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். “எங்களை அதிக முதலீடு செய்ய வைத்துவிட்டு, இப்போது ஒப்பந்தத்தை ரத்துசெய், அல்லது விற்றுவிடு” என்று கோக் மிரட்டுவதாக பூனா பாட்டிலிங் தொழிற்சாலை அதிபர் தனது வழக்கில் கூறியிருக்கிறார்.



அதே போன்று மொத்த வியாபாரிகளும் கோக்கினால் அச்சுறுத்தப்பபடுகின்றனர். தமிழக நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேஷ், “கோக்கின் அநீதியான வர்த்தகப்படி எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. எதிர்த்துக் கேட்டால் வேறு வணிகர்களை நியமனம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்” என்கிறார்.



இது போக பெப்சியும், கோக்கும் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். தனது நிர்வாகிகளை கோக் விலைக்கு வாங்குவதாக பெப்சி வழக்குத் தொடுத்திருக்கிறது. இதில் பெப்சிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் இன் அருண் ஜெட்லி, “2000 கோடி முதலீடு செய்திருக்கும் பெப்சிக்கு இழைக்கப்படும் அநீதி” என்று நீதிமன்றத்தில் உருகினார். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பபடி ஒரு ஊழியர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையை தடை செய்ய முடியாது” என்று கோக் திருப்பியடித்தது. பெப்சியும், கோக்கின் பானங்களைத் தயாரித்து வந்த குஜராத், கோவா பாட்டில் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கியிருக்கிறது. இப்படி இருவரும் தங்களது வியாபார மோசடிகளுக்காக இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.



இப்போது குடிநீர் என்றாலே ‘மினரல் வாட்டர்’ என்றாக்கி விட்டார்கள். இந்தியாவின் மினரல் குடிநீர் சந்தை மதிப்பு 1250 கோடி ரூபாயாகும். வருடந்தோறும் 100 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இத்துறையையும் அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.



இதற்கு மேல் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். ஆய்வகம், சரக்கு லாரி கட்டும் பனிமணை, பழரச உற்பத்தி, காய் – கனி பண்ணை, நொறுக்குத்தீனி, டப்பா உணவு ஏற்றுமதி என ஏராளமான திட்டங்களையும் வைத்திருக்கின்றன. இந்தியாவின் 15 கோடி நடுத்தவர வர்க்க மக்களைக் கொண்ட வலுவான சந்தையைக் கைப்பற்றுவதை தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பம் ஒருமாதம் பல நூறு ரூபாய்களை தங்களுக்கு மொய் எழுதவேண்டும் என்பதே அவர்களது இலக்கு.



கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்தைக் கள் ஊற்றி மதி மயங்க வைக்கும் வித்தைக்காக பல விளம்பர படைப்பாளிகள் பெப்சி – கோக்குக்காக உழைக்கின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு மட்டும் இரு நிறுவனங்களும் தலா 50 கோடியை கட்டணமாகக் கொடுக்கின்றன. இதுபோக வானொளி, ஏனைய விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஷாருக்கான், டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற நிழலுலக நட்சத்திரங்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.



“உலக அளவில் கொள்ளையடிக்க உள்ளுர்ககாரனாக வேடம் போடு” என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டும் செயல் திட்டம். அதற்கேற்ப தங்களது விளம்பரங்களுக்கு அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கோக் ஆந்திராவில் சிரஞ்சீவியையும், தமிழ்நாட்டில் விஜயையும், பெப்சி தமிழகத்தில் மாதவனையும், தெலுங்கில் கல்யானையும் விளம்பரங்களில் இறக்கியிருக்கின்றன. இனி இன்பத் தமிழிலும் சுந்தரத்தெலுங்கிலும் “என்ஜாய் கொக்கோ கோலா, ஏ தில் மாங்கே மோர் – ஆஹா”வும் கவிதையாய் பொழியும்.



இதுவும் போக டி ஷர்ட், தொப்பி, கிரிக்கெட், சினிமா ஸ்பான்சர், மூடி சேகரிப்பு, ஹாலிவுட் – மல்யுத்த நட்சததிரங்களின் ஸ்டிக்கர்கள், அறிமுக விலை தள்ளுபடி, சென்னையில் இட்லிக்கு கோக் இலவசம், மும்பையில் சப்பாத்திக்கு இலவசம், பெங்களூருவில் பிஸ்ஸா வாங்கினால் பெப்சி கேன் இலவசம் என மேட்டுக்குடியைக் கவர ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.







____________________________________________________________



இது அமெரிக்காவின் குளிர்பானக் கம்பெனிகள் இந்தியாவில் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு போர்!



3 ஷிப்ட்களில் 150 தொழிலாளிகள் வேலைபார்த்த காளிமார்க்கின் விருதுநகர் பாட்டில் தொழிற்சாலையில் இன்று இருபது பேர், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்கின்றனர். தென் மாவட்டங்களில் இன்று காளிமார்க்கை பரிதாபமான ஒரிரு பெட்டிக் கடைகளில் மட்டும் காணலாம். திருச்சியில் வின்சென்ட் குளிர்பான அலுவலகப் பெயர் பலகை பாழடைந்து சவக்களையுடன் காணப்படுகிறது. மதுரை மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானம் தமது திரையரங்குகளில் கூட விற்க முடியாத அவல நிலையில் இறந்து வருகிறது. காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற பன்னீர் சோடா நிறுவனங்களை இனி தொல்பொருள் ஆராய்ச்சியில்தான் தேட வேண்டும். மோரும், இளநீரும், போஞ்சியும், பானகமும் அருகி வருகின்றன. நீராகாரம் என்பது என்னவென்றே நகர்ப்புற இளைஞர்களுக்குத் தெரியாது.



10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்திய குளிர்பான நிறுவனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்திருக்கின்னர். நமது விவசாய பொருளாதார, தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமான மரபு வகை பானங்களை மறந்துவிட்டோம். அமெரிக்காவின் கார்பன் வாயு கலந்த ஆல கால விடத்தை குடிக்க பழக்கப்படுத்தப்படுகிறோம். பெப்சியும், கோக்கும் தமது எசன்ஸை மட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி, உள்ளூர் பாட்டில் தொழிலதிபர்களை வைத்து நீர் கலந்து, ஏஜெண்டுகளை வைத்து விநியோகித்து, விளம்ரங்களுக்கு நுகர்வோரிடமே பிடுங்கிக் கொண்டு, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் கொண்டு, டப்பா உணவு ஏற்றுமதி – கோலா விற்பனை இரண்டிலும் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.



இந்தியா மட்டுமல்ல முழு உலகும் இந்தக் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவுக்கு கீழே இருக்கும் மெக்சிகோ நம்மைப் போன்ற ஏழை நாடுதான். அங்கேயும் ஆண்டுக்கு ஒருவர் 500 பாட்டில்களை குடிக்கும் அளவுக்கு தனிநபர் நுகர்வை ஏற்றி விட்டார்கள். எங்கெல்லாம் அமெரிக்க இராணுவம் நுழைந்ததோ அங்கெல்லாம் பெப்சியும், கோக்கும் நுழைந்தன. பின்னர் இராணுவம் திரும்பினாலும் கோலாக்கள் திரும்பவில்லை.



ஜப்பான், கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து இங்கெல்லாம் கோலாக்கள் அம்மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டன. சிங்கப்பூரில் ஒரு ஓட்டலுக்கு சென்றால் முதலில் குடிநீர் வைக்கமாட்டார்கள். கோக்தான் தருவார்கள். இப்படி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு வருகிறது.



தொன்மையான புகழ் பெற்ற நாகரிகங்களெல்லாம் நதிக்கரையில் தோன்றின. மனித குலநாகரிகத்தில் நீரின் பங்கு அத்தகையது. இன்றும் நல்லநீர் கிடைக்காமல், மழை பெய்யாமல், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் ஏராளமான நாடுகள் உள்ளன. வருடா வருடம் ஒரிஸா, ராஜஸ்தான், குஜராத்தில் பிளந்து கிடக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் அந்த நீரின் அருமை தெரியும். தண்ணீர் நமது உடலில் இரண்டறக் கலந்தது. நமது பண்பாடு. விவசாயத்தின் உயிர். அத்தகைய நீரை நமது சிந்தனையில் இருந்து அழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம்?



பெப்சி – கோக்கின் ரசாயனக் கலவையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வியாபார ரகசியம் என்ற உரிமையால் பாதுகாக்கப்படும் அந்தக் கலவையின் தீங்கை மேற்குலகிலேயே பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். பெப்சி – கோக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘டயட்’ என்ற பானத்தில் (கலோரி இல்லாத இனிப்பு நீர்) உள்ள ‘ஆஸ்பார்ட்டாம்’ என்ற ரசாயனப்பொருள் உடலுக்கு நேரடித் தீங்கை விளைவிக்கக் கூடியது என அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் கிளம்பியிருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தைச் சரிகட்டி கோக் தொடர்ந்து அதை விற்கிறது.



பிரான்சில் மக்கள் அருந்தும் பானமும், ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒயின்தான். பிரெஞ்சு நாடு திராட்சை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. அந்த விவசாய பொருளாதாரத்தை வைத்து இந்த பானம் அவர்களிடையே மரபு வகை பழக்கமாக உள்ளது. கோக், பெப்சியின் வருகையால் பிரெஞ்சு விவசாயிகள் பாதிக்கப்பட்டு எதிர்த்துப் போராடுகின்றனர்.



இப்படி உலகம் முழுவதும் அந்தந்த மக்களது வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம் மூன்றும் அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நுகர்வுப் பண்பாட்டால் அழிக்கப்படுகின்றது. பிஸ்ஸா, பர்கர், எம்.டி.வி, ஹாலிவுட், துரித உணவகம், பேரங்காடி, டபிள்யூ. டபிள்யூ. எஃப், நைக், மெக்டோனால்டு போன்றவையே நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கற்றுக்கொடுக்கின்ற தேவன்களாக மாறிவிட்டன.



உழைப்பாளிகளின் பானமான தேநீரை நடுத்தர – மேட்டுக்குடி இளைஞர்களிடம் கொண்டு செல்ல நெஸ்லேயும் – கோக்கும், பெப்சியும் – இந்துஸ்தான் லீவரும் இணைந்து ஐஸ் டீ, ரெடிமேடு டீ போன்றவைகளைத் தர இருக்கிறார்கள். கோக், பெப்சி இரண்டும் உலகம் முழுவதும், ஏன் கழிப்பறைகளில் கூட கிடைக்க வேண்டும் என்பது வரை போய்விட்டன. சமீபத்தில் போன் செய்தால் கோக் டின் கொட்டும் ‘டயல் எ கோக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கொள்ளையடிக்கும் உத்திக்கு முடிவு கிடையாது.



இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.

Friday 21 May 2010

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்


ஆர்.எஸ்.நாராயணன்




உணவு உற்பத்திக்கு அடிப்படையானது விவசாயம். விவசாயத்திற்கு அடிப்படையானது மண். மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம். மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல. அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள். அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது. அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.



ஆரோக்கியமான மண்ணிலிருந்து விளையும் உணவும் ஆரோக்கியமானது. விவசாயத்தின் முதல்பணி, மண்ணை மக்கு உரமாக மாற்றுவதுதான். ”வேளாண்மை உயில்” என்ற காவியத்தைப் படைத்த ஆல்பெர்ட் ஹாவொர்ட், இந்தூரில் நீடிக்க முடிந்ததா? மண்ணை வளப்படுத்த கம்போஸ்ட் போதும் என்று போதித்த ஹாவொர்டுக்கு எதிர்ப்பு வந்தது. புசாவை விட்டு வெளியேறிய ஹாவொர்ட் மத்திய இந்தியாவுக்கு வந்தார். முதலில் பருத்திக் கமிட்டி ஆதரவை நல்கினாலும் கூட, ஹாவொர்ட் தன் சொந்த பலத்தை நம்பினார்.



மண் வளமைக்கும் மகசூலுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வே ஹோர்வார்டின் குறிக்கோள். 1924-31 காலகட்டத்தில் இந்தூரில் ”பயிர்தொழில் நிறுவனம்” அதாவது ”The Institute of Plant & Industry” ஐ நிறுவ இவர் தன் நண்பர்களிடம் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது. அரசின் செலவில் செய்யவில்லை. ஒரு வேளாண்மை ஆலோசகர் என்ற முறையில் இந்தியாவில் விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் ’ராயல் கமிஷன் ஆஃப் அக்ரிகல்ச்சர்’ சார்பாக லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆல்பர்ட் ஹாவொர்ட், எந்தவிதத்திலும் கடமை தவறவில்லை. உற்பத்தியை உயர்த்த ரசாயனம் தேவையில்லை என்பதுடன் ரசாயன உரத்தைவிட இயற்கை வழி விவசாயத்தின் கூடுதல் மகசூல் பெற முடியும் என்பதை நிரூபித்துக்காட்டவே இந்தூர் பயிர்த்தொழில் நிறுவனம் உருவானது. மத்திய இந்தியா - இந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருத்தி முக்கிய வணிகப்பயிர். நல்ல விளைச்சலுக்கு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்பதே அவர் கருத்து. அந்தக் கருத்தில்தான் “Indore Process Of Humus Production” உருவானது மட்டுமல்ல, அதே பெயரில் இந்த “இந்தூர் ப்ராஸஸ்” எவ்வாறு இங்கிலாந்திலும் பின்னர் அமெரிக்காவில் பென்ஸில்வேனியாவிலும் பரவியது என்பதை இக்கட்டுரையில் கவனிப்போம்.



நாம் ஏற்கனவேயே விவரித்தப்படி 1 மடங்கு கால்நடைக்கழிவான சாணம்+மூத்திரத்துடன், 3 மடங்கு அறுவடைக் கழிவுகளான கட்டைப்புல், வைக்கோல், துவரை, கடலை, உளுந்து போன்ற கொடிகள், மரத்தூள் போன்ற கார்பன் பொருள்களுடன் மக்கவைத்து வழங்கும் முறைதான் ”இந்தூர் ப்ராசஸ்” இம்முறையில் இவர் தயாரித்து வழங்கிய்தைப் பயன்படுத்திய பருத்திப் பயிருக்கு மும்மடங்கு விளைச்சல் உயர்ந்தது. இவ்வாறு இயற்கை உரம் வழங்கும் போது எப்போதுமே விளைநிலத்திலுள்ள மண்ணைப் பாதுகாக்கும் அளவில் மண்ணில் கரிம விழுதுகளை உருவாக்கும் கரிமப்பொருள்கள்+தழைச்சத்துப் பொருள்களான கால்நடைக்கழிவுப் பொருள் கலந்த கலவையை மக்கவைக்கும் பணியை நிகழ்த்துவது. இரண்டாவதாக மண்ணுக்குச் சற்று ஒய்வுதந்து பயிர் எழுப்புதல்.



பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் உள்ள இந்தூரை மையமாகக் கொண்டு இந்தூர்ப் பயிர்த்தொழில் நிறுவனத்தில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளை ”Waste Products of Agricultrue : Their Utilisation as Humus” என்ற பெயரில் இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை மேலை விவசாய விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்தது. தமிழில் ”வேளாண்மைக் கழிவுப் பொருள்கள்: வேரின் கரிம விழுதுகளாகப் பயன்பெறுதல்” எனலாம். ஹாவொர்ட் பிரிட்டிஷ் அரசின் வேளாண்மை ஆலோசகர் என்ற முறையில் தான் எழுதிய மேற்படி ஆய்வுக் கட்டுரையை நூல் வடிவமாக்கி பருத்திப் பயிர் விஞ்ஞானிகளுக்கு வழங்கினார். எதிர்ப்பு அலை உருவானது. ரசாயன உர நிறுவனங்களும், ரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவே செயல்பட்ட விவசாய விஞ்ஞானிகளும் ”இந்தூர் ப்ராசஸ்” ஒத்துவராது என்று புறந்தள்ளினர். அவர்களின் கருத்துப்படி, ”பருத்தியில் இனப்பெருக்க ஆய்வின் மூலமே விளைச்சலை உயர்த்த முடியும், நோயுற்ற பருத்திப் பயிரில் பூச்சி மருந்து அடித்தால்தான் உற்பத்தி உயரும்” என்று மறுத்துப் பேசினர். உண்மையில் உகந்தவாறு ஹாவொர்ட் முன்மொழிந்துள்ள இந்தூர் முறை கம்போஸ்டிங்கைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்திருந்தால் மண்ணும் பாதுகாப்பைப் பெற்று மகசூலிலும் புதிய எல்லைகளைத் தொட்டிருக்க முடியும். ஆனால் ரசாயன உர நிறுவனங்களுக்கு அடிவருடிகளாகச் செயலாற்றும் விவசாய விஞ்ஞானிகள், ”மண்ணுக்கு ஓய்வு தேவை” என்ற கூற்றை மட்டும் பெரிதாக எடுத்துக் கொண்டு, மண்ணை ஓய விட்டால் உற்பத்தி குறையும் என்று மடக்கிவிட்டனர்.



1935-இல் ஹாவொர்ட் இங்கிலாந்து - அவருடைய தாய் நாட்டுக்குத் திரும்பியதும், கேம்பிரிட்ஜ் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அவரைப் பேச அழைத்தது. அவரது பயிற்சி முறைகளையும், ஆய்வு முறைகளையும் அறிய ஆவலாயிருந்தவர்கள் கல்லூரி மாணவர்களே தவிர ஆசிரியர்கள் அல்லர். வேளாண்மைப் பேராசிரியர்கள் இவரது இந்தூர் கம்போஸ்ட் மூலம் மண்ணில் கரிம விழுதுகளை உருவாக்கும் நல்வழிக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதில் முனைப்பாயிருந்தனர். இயற்கை விவசாயத்திற்கு எந்த ஊக்கமும் வழங்கக்கூடாது என்பதில் வேளாண்மைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஒத்த கருத்துடையவர்களாயிருந்தனர். ஏனெனில் அவர்கள் ரசாயன உரநிறுவனங்களுக்கு விலை போய்விட்டனர். இயற்கை வழியில் உற்பத்தியை உயர்த்தலாம் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர்.



எனினும் விவசாயிகள் சங்கம் அவருடைய யோசனைகளில் ஆர்வம் காண்பித்தது. அதேசமயம் உர நிறுவனப் பிரதிநிதிகள், ”மகசூலுடன் மண்வள மீட்பு” என்ற கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த போது, சர் பெர்னார்டு கிரின்வெல் என்பவர் தனது நிலம் முழுவதிலும் ஹோவார்டின் யோசனையைப் பின்பற்றினர். இரண்டாண்டுக்குப் பிறகு அவர் எதிர்பார்த்ததற்கு மேலாகவே மண்வள மீட்புடன் பயிர் விளைச்சலும் ஏகபோகமாக இருந்தது. ஒரு பக்கம் வேளாண்மைத்துறை இயற்கை விவசாயத்திற்கு ஊக்கம் வழங்க மறுத்தாலும், மறுபக்கத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேரவை இவருடைய பணிகளை கவுரவித்து, ”வீரப்பதக்க விருது” (KNIGHTHOOD) வழங்கியது. இன்றைய தமிழ்நாட்டில் என்ன நிகழ்கிறதோ அதுபோலவே அன்றைய இங்கிலாந்தில் நிகழ்ந்தது.
                                                        ஈவா பெல்ஃபோர்




நல்ல புத்தியுள்ள சில விவசாயிகள் மட்டும் ஹாவொர்ட் எடுத்துக்காட்டும் இயற்கை விவசாயத்தில் கால்பதித்தனர். அவர்களில் ஒருவர் ஈவா பெல்ஃபோர் (Eve Belfour) சிறுவயதிலிருந்தே இந்த அம்மையாருக்கு ஜலதோஷமும் வாதநோயும் இருந்தது. உடல்வலி தாங்கமுடியாமல் அவதிப்பட்டார். இவர் சஃபோக் அருகில் உள்ள ஹாலே என்ற இடத்தில் உள்ள தன்னுடைய நிலத்தை இயற்கைக்கு மாற்றினார். ஹாவொர்ட்கூறிய ”இந்தூர் ப்ராசஸ்” இவருக்கு நன்கு கைகொடுத்தது. இவ்வாறு இயற்கை வழியில் தன்னுடைய நிலத்தில் விளைந்ததை உகந்த முறையில் பக்குவப்படுத்தி உண்டு நோய்களிலிருந்து விடுதலை பெற்றார். இயற்கை விவசாயத்தின் மூலம் பெறக்கூடிய நஞ்சில்லா நல்லுணவு நோயாற்றும் பண்புடையது என்பதைத் தன் அனுபவத்தால் புரிந்துகொண்டார். இரண்டாவதாக ரசாயன உரமிட்ட மண்ணில் நுண்ணுயிர்கள் இன்மையால் பூச்சி மருந்தைப் பயன்படுத்தியும் கூட நோய் மீண்டும் தோன்றுகிறது. தன்னைத்தானே காப்பாற்றும் ஆற்றல் இல்லை. ஆனால் மண்ணில் கரிமவிழுது-கரிம உயிர்ச்சத்துள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு நோய்வந்தாலும் தனக்குத்தானே குணமாக்கிக் கொள்ளும் மூன்றாவதாக இயற்கைவழியில் விளைந்த உணவை உட்கொள்ளும் மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் நோய் வருவது இல்லை.



இரண்டாவது உலகப்போர் காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தில் வெற்றிவாகை சூடிய லேடி ஈவா பெல்ஃபோர் ”உயிர்மண்” (LIVING SOIL) என்ற நூலையும் வெளியிட்டார். அந்த நூலில் ஆல்பெர்ட் ஹாவொர்ட் மற்றும் மருத்துவர் மெக்கரிசன் ஆகிய இருவரின் ஆதாரப் பூர்வமான வெளிப்பாடுகள் - குறிப்பாக மண்ணுக்கும் மனித ஆயுள், மனித நலவாழ்வு, கால்நடை நலவாழ்வுக்கும் உள்ள தொடர்பு - அதாவது உயிர் மண்ணில் (Humus) விளைந்த உணவின் மருத்துவகுணம், நோயாற்றும் சக்தி எல்லாம் இடம் பெற்றிருந்தன.



ஹாவொர்டுக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் மறக்கமுடியாதவர் ஃபிரண்ட் சைக்ஸ் (Friend Sykes) , ஹோவார்டின் பேச்சால் மிகவும் கவரப்பட்டார். மண்ணின் வலிமை மண்ணில் உள்ள கரிமவிழுதுகள், அதாவது கரிம மக்குப்பொருள்,அதுவே உயிர்மண். மண்ணில் உயிர் உள்ளதால் அந்த உயிர் உள்ளவரை தனக்குத் தானே சத்துக்குறைப்பாட்டை நீக்கிக்கொள்ளும், மண்ணுக்கும் அம்மண்மீது நலம் எழுப்பும் பயிர்களுக்கும் இடையேயான உயிர்ம வேதியியல் மாற்றங்கள் சிறப்பானது ஆகிய இயற்கை விவசாயக் கருத்து வேரைப் புரிந்து கொண்ட ஃபிரண்ட் சைக்ஸ் இவை குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி இருக்கிறார். ஒரு கட்டுரைக்குச் சுட்டியை அடிக்குறிப்பில் [1] காணலாம். இவர் குதிரை வளர்ப்பதில் வல்லவர். ஹோவார்டால் கவரப்பட்டு, ”இந்தூர் ப்ராசஸின்” அனுபவங்களைத் தன் நிலத்தில் பரிசோதிக்க விரும்பினார். ஒன்றுக்கும் உதவாது என்று புறக்கணிக்கப்பட்ட ஒரு கரட்டுநிலம் -750 ஏக்கர் பண்ணை வில்ட்ஷைரில் (Wilshine) விலைக்குவந்தது. அது வளமான சாலிஸ்பரி பள்ளத்தாக்கை ஒட்டி 1000அடி உயரத்தில் இருந்தது. அப்படிப்பட்ட நிலத்தை சைகிஸ் வாங்கினார். நிலத்தை வாங்கியபின்னர் தன் நிலத்தில் மண் பரிசோதனை செய்தார். அந்த நிலத்தில் சுண்ணாம்பு+பாஸ்வரம்+பொட்டாசியம் போதுமான அளவில் இல்லை என்று அப்பரிசோதனை தெரிவித்தது. சாதாரணமாக விவசாயம் செய்பவர்கள் மண்ணைப் பரிசோதனை செய்வார்கள். மண்ணில் உள்ள குறைப்பாட்டை நீக்க உப்பு வடிவில் ரசாயன உரம் இடச் செய்வார்கள். இப்படிச் செய்யும் போது மண் மீண்டும் சுரண்டப்படுவதுடன், அதன் சமநிலை இழந்து மீண்டும் புதிய குறைப்பாட்டை ஏற்படுத்தும். மண் பரிசோதனை செய்வது மண்வளத்தை மீட்பதற்கு அல்ல. மண்பாதுகாப்புத் தத்துவத்திற்கு முரணானது. ஃபிரன்ட் சைக்ஸ் என்ன செய்தார்? அம்மண்ணில் பரிசோதனைப்படி கூறப்பட்ட குறைப்பாட்டை அவர் ஏற்கவில்லை. ரசாயன உரம் எதுவும் இடாமல் சற்று அடிமண்ணைப் புரட்டிப்போட்டு உழுது ஓட்ஸ் விதைத்தார். ஏக்கருக்கு 92 புஷல் ஓட்ஸ் அறுத்ததும் அதன் காய்ந்த தாள்களைப் பரப்பி உழுது கோதுமை விதைத்தார். கோதுமையிலும் நல்ல விளைச்சல். பீன்ஸை கோடை உழவு செய்து அம்மண்ணைப் பரிசோதனை செய்தார். இரண்டாவது மண் பரிசோதனையில் அவர் மண்ணில் உள்ள பொட்டாசியக் குறைபாடும், சுண்ணாம்புக் குறைபாடும் நீங்கிவிட்டது. ரசாயனஉரம் இடாமலேயே குறை நீங்கியது எப்படி?


                                            ஃப்ரண்ட் சைக்ஸின் உழவுமுறை



இயற்கை நலம் பற்றிக் கவனம் கொண்டு, என்ன தேவை என்று புரிந்து கொண்டால் போதும். வீண்செலவு வேண்டாம். எனினும் உங்கள் மண்ணில் பொட்டாசியம் குறைபாடு இன்னமும் உள்ளது என்று சைக்சுக்கு இரண்டாம் மண் பரிசோதனை தெரியப்படுத்தியது. கோதுமைப் புற்களை மண்ணில் பரப்பி மீண்டும் கோதுமையையே பயிர் செய்தார். முன்பைவிட அதிகமாகவே கோதுமை விளைந்தது. மூன்றாவது மண் பரிசோதனையில் பொட்டாசியக் குறைபாடும் நீங்கிவிட்டது. மண்ணில் மக்கும் பொருள் ஹாவொர்ட் எடுத்துக்காட்டிய விகிதத்தில் இருந்தால் போதுமானது. அறுவடைக் கழிவும் குதிரைச் சாணமும் உருவாக்கப்பட்ட கம்போஸ்டிங் மண்ணுக்கு வேண்டிய சத்துக்கள் - அதாவது அதிகபட்ச மகசூல் தரும் வழியில் திருத்தம் பெற்று மண்ணைச் சுரண்டாத வழியில் மகசூலும் கிட்டியது மண்ணும் பாதுகாக்கப்பட்டது. இவர் ஒரு வித்தியாசமான உழவுக் கருவியையும் தயார் செய்து அடிமண்ணை மேலே புரட்டும்படி செய்தார். எல்லாநிலத்திலும் ரை, குளோவர் போன்ற தீவனப்பயிர்களை விதைப்பர். ஏக்கருக்கு சுமார் 2 1/2 டன்கள் வரை பசுந்தீவனம் குதிரைகளுக்குக் கிடைத்தது. பலமுறை அறுத்தும் கூட சிம்பு வெடித்து குதிரைகளுக்குத் தேவையான இயற்கைத் தீவனம் கிடைத்தால் குதிரை - பசுக்கள் நோயின்றி உழைப்புத்திறனையும், பாலையும் வழங்கிற்று. முறையே ஓட்ஸ், கோதுமை இரண்டையும் ஒரு பக்க நிலத்தில் மாற்றி மாற்றி விதைத்து 100 புஷல் வரை பெற்றார். அதாவது 1 ஏக்கருக்கு ஏறத்தாழ 3 டன்கள்.



இரண்டாம் உலக்போர் காலக்கட்டத்தில் போர் எவ்வாறு அமைதியைக் கெடுத்ததோ அவ்வாறே விவசாயத்தில் புகுந்த ரசாயனம் மண்ணைச் சுரண்டியதுடன் மனித நலவாழ்வுக்கு உலை வைத்தது. மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ரசாயன விவசாயம் விஷம்போல் பரவியபோது இந்தியாவிலிருந்தும் கீழை நாடுகளிலிருந்தும் பெற்ற வேளாண்மை நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ரசாயன விவசாயத்தையும், வீரியரக விதைகளை எதிர்த்தும் ஒரு அறப்போரை ஹோவார்டின் சிஷ்யர்கள் இங்கிலாந்தில் தொடங்கினர். ஈவா பெல்ஃபோர், ”ஹிட்லரைப் போல் ஒரு கொடிய சர்வாதிகாரியை எவ்வாறு எதிர்த்துப் போராட உலகமக்கள் ஒன்று திரடண்டுள்ளனரோ அவ்வாறே இன்று ரசாயனங்களை எதிர்த்து இயற்கையை வாழவைக்க விவசாயிகள் ஒன்று திரளவேண்டிய கட்டாயம் உள்ளது…” என்று கூறினார்.



அப்போது ஹிட்லர் பிரான்சை வென்று முன்னேறிக்கொண்டிருந்தான். ஃபிரண்ட் சைக்சும், ஈவா பெல்ஃபோரும் இன்னும் வேறு பல இயற்கை விவசாயிகளும் மண் மக்கள் குழு என்று (Soil Association) தொடங்கி உலகளாவியதாகப் பல நாடுகளில் உறுப்பினர்களைச் சேர்த்தனர். அது மட்டுமல்ல சஃப்போக்கில் (SUFFOLK) மண்பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு இயற்கை விவசாயிகள் சங்கம் நிலம் ஒதுக்கியது. சமகாலத்தில் இவர்களோடு இணைந்த ஜே.ஐ. ரோடேல் பென்சில்வேனியாவில் அப்போது, நலவாழ்வுக்குரிய நல்வழிகள் என்ற பொருளில் HEALTH FINDER என்ற பெயரில் ஒரு கையேட்டை வெளியிட்டார். நலவாழ்வுக்கும் நல்ல மண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றின ஹாவொர்ட் வழங்கிய விவரம் ரோடேலுக்குப் புதுமையாக இருந்தது. ”இதுவரை மண்ணுக்கும் மனிதநலவாழ்வுக்கும் உள்ள நல்லுறவை இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கவில்லை” என்று கூறிய ஜே. ஐ. ரோடேல் முதல் வேலையாக ஹோவார்ட் எழுதியுள்ள ”வேளாண்மை உயில்” என்ற நூலில் அமெரிக்காவில் வெளியிட்டார். நல்ல மண்ணில் இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவில் அதிக அளவு ஊட்டச் சத்து உள்ள உண்மையை ஆய்வுப்பூர்வமாக அவருடைய முக்கியப் பத்திரிகையான ”இயற்கைத் தோட்டம் - பண்ணை”யிலும் வெளியிட்டதுடன், ஈவா பெல்ஃபோரின் அனுபவத்தில் நல்ல மண்ணில் விளைந்த இயற்கை நல்லுணவுக்கு நோயாற்றும் பண்பு உள்ளது என்ற செய்தியால் கவரப்பட்ட டாக்டர் ஜே. நிக்கல்ஸின் இதயநோய் நீங்கியதை முன்னர் கவனித்தோம்.



















இதன் பின்னணியில் 1942-இல் ஜே.ஐ.ரோடேல் பென்சில்வேனியாவில் எம்மாவுஸ் (EMMAUS) பண்ணையை வாங்கினார். அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தை ஆழமாக வேர்விட வைத்து மண்ணைக் காப்பாற்றிய பெருமை ஜே. ஐ. ரோடேலுக்கும் அவர் மகன் ஜே. ராபர்ட் ரேடலுக்கும் உண்டு. இவருடைய ”ஹெல்த் ஃபைன்டர்” என்ற கையேட்டுக்குத் தடைவிதிக்கும் அளவுக்கும் ஜே.ஐ ரோடர் பிரபலமானார். ”ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ரசாயன விவசாயத்தைத் தவிர்க்க வேண்டும். பாரம்பர்ய விதைகளைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லாத உணவை நல்ல மண்ணில் விளைவித்து உண்டால் மரணபயம் எதுவுமில்லை.” என்ற கருத்து ஆளும் வர்க்கத்திற்கு எரிச்சல் மூட்டியது. யு.எஸ்.பெடரல் டிரேட் கமிஷன் இவர் மீது வழக்குத் தொடர்ந்தது. ரசாயன உணவைப் புறக்கணித்துவிட்டு நலமாக வாழுங்கள் என்று கூறுவது குற்றமா? என்ற கேள்வியுடன் ஜே. ஐ. ரோடேல் இந்த வழக்கை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். இதனால் இவர் நடத்திய பத்திரிகை ”இயற்கைத் தோட்டம் - இயற்கைப் பண்ணை” - அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி 9 லட்சம் சந்தாதாரர்கள் உருவானார்கள். எனினும் யு.எஸ். ஃபெடரல் கமிஷனை எதிர்த்து வழக்கு நடத்தியதில் இவருடைய நீதிமன்றச் செலவு 4 லட்சம் டாலர். இந்த இழப்புத் தொகையை வழங்க அரசு முன்வரவில்லை. ஏராளமாக நிதி குவிந்தது. நலிவுற்ற பிரிவினர் நலவழ்வு பெறவும் மண்ணைப் போற்றி மண்ணை நஞ்சில்லாமல் காப்பாற்றவும் ரோடேல் தொண்டு நிறுவனம் இன்றளவும் பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1971-இல் ஜே.ஐ. ரோடேல் ஒரு விபத்தில் மரணமுற்றாலும் அவர் புத்திரர் ஜே. ராபர்ட் ரோடேல் தந்தையைவிடத் தீவிரமாக மண்ணைக் காப்பாற்றுவதில் பாடுபட்டார். ரோடேல் நிறுவனம் மண்ணில் உயிர் உண்டு. உயிர் மண் தொடர்பாக நிகழ்ந்த அனைத்து ஆய்வு நூல்களையும் ஷாட்ஸ் உட்பட வெளியிட்டது. ஜப்பான் விஞ்ஞானி மாசநபு ஃபுக்கோக்காவின் ஒற்றை வைக்கோல் புரட்சியைப் பல மொழிகளில் வெளியிட்டார்கள். Reason இன்னமும் இயற்கை விவசாய நுட்பங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆகவே இன்று உலகம் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பரப்பியதில் முதல் பெயர் ரேடேல் அன்ட் சன்ஸ் என்பது மிகையில்லை.



மண்ணைப் போற்றிய ஜே.ஐ.ரோடேல் ஆங்கிலமொழியில் மண் என்ற சொல்லுக்கு அழுக்கு, சுத்தமின்மை என்று மண்ணை வெறுக்கத்தக்கதாயுள்ள பொருள் உள்ளதையும் எதிர்த்து மண்ணுக்குப் புதிய பொருள் வழங்கினார். மண் என்பது பல்வகை உயிர்கள் என்னும் தூய்மையுள்ளது என்றும் அர்த்தம் வழங்கினார். மண்ணை நாம் தவறாகப் புரிந்து கொண்டதால் தமிழ் மொழியில் கூட நல்லமண், கெட்டமண் என்று கூறிப் புரியவைக்க வேண்டியுள்ளது. ”நன்னிலம்” என்ற சொல்லாட்சி உள்ளது. ‘நல்லமண்’ என்ற சொல்லாட்சிதான் இனி மண்ணைக் காப்பாற்றும்.



மண் என்று எடுத்துக்கொண்டால், மண்ணின் கீழ் உள்ள உயிரிகளையும் கணக்கிட்டுப் பொருள் கொள்ள வேண்டும் என்பது ரோடேலின் கருத்து.



மண்ணுக்கு அடியில் மண்புழுக்கள் உள்ளன. மண்புழுவை இலத்தீன் மொழியில் ”அன்னலிடா” (ANNELIDA) என்பார்கள். இதன் பொருள் ”வளையங்கள்”. மண்புழுவின் உடல் ஏராளமான வளையங்களைக் கொண்டுள்ளது. சாதாரணமாக ஆப்பிரிக்கா அல்லது இந்தியவகை நாட்டுப்புழுவில் 100முதல் 200 வளையங்கள் உள்ளன. ஒவ்வொரு வளையமும் தனித்து இயங்கும். இந்த வளையங்களின் இயக்கத்தால் மண்ணுக்குள் ஆறு அடி அல்லது ஏழு அடி வரை துளைத்து உள்ளே சென்று கீழ் மண்ணை மேலே புரட்டிக்கொடுக்கும். மண்ணைத் துளைத்துக் கீழ்ப்பகுதிக்குச் சென்றாலும், மீண்டும் மேல் மட்டத்திற்கு வந்தாலும் மண்ணை உட்கொண்டு கழிக்கிறது. இந்தக் கழிவுகளே அருமையான மேல்மண் (TopSoil) இந்த மேல் மண்ணே உற்பத்தியைப் பெருக்கும். ஆகவேதான் அரிஸ்டாடில் மண்புழுவை ”மண்ணின் குடல்கள்” என்று வர்ணிக்கிறார். இவ்வாறு மண்புழுக்களால் மண்ணை வளமாக்க மண்ணில் முக்கிய தொழுஉரம் இட்டு மண்புழுக்கள் அடங்கிய மண்ணைப் பரிசோதித்தால் ஒரு கிராம் மண்ணில் 2.9கோடி நுண்ணுயிரிகள் இருக்கும். இந்த நுண்ணுயிரிகள் மடிவதும் பின்னர் தோன்றிப் பன்மடங்கு விரிவாவதுமாக ஒரு இயக்கத்தை மண்புழுக்கள் செய்யும். மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் கலந்த வேர் மண்ணில் கால்மடங்கு வரை கரிமவேர் விழுதுகள் அதாவது ஹூமஸ் உருவாகிறது. 1டன் மண்புழு மக்கு உரத்தில் 1/4டன் கரிமச்சத்து+ தழைச்சத்துள்ள ஆரோக்கியமான, நல்லுணவு வழங்கக்கூடிய மண் விழுதுகள் உண்டு. இவற்றைப் போற்றி வளர்த்த அரிஸ்டாட்டிலிருந்து ரேடேல் வரை, இயற்கை விவசாயத்திற்காகப் போராடும் இன்றைய விவசாயிகள் வரை மண்ணைப் போற்றும் மாமனிதர்கள் வாழ்ந்து வருவது இந்த உலகம் செய்த தவப்பயன் என்றால் மிகையில்லை.



___________________________________________________________________

Thursday 20 May 2010

டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்

டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்


ஆர்.எஸ்.நாராயணன்


உலகிலேயே அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடு அமெரிக்கா என்பதை நாமறிவோம். அமெரிக்க விவசாயத்திற்கு வளமான வரலாறு கிடையாது. 15-ம் நூற்றாண்டில் கொலம்பஸ் பயணத்தின் உதவியால் இதர கண்டங்களுக்குத் தெரிய வந்த புதிய கண்டத்தில், தென்னமெரிக்காவில் பெரு-ஆண்டீஸ்-அமேசான் பள்ளத்தாக்கில் நிலவிய விவசாய நாகரிகம் மிஸ்ஸிபி-மிசெளரியில் ஏற்படவில்லை. இங்கு நாம் அமெரிக்கா என்று பொதுவாகக் குறிப்பிடுவது யு.எஸ்.ஏ வை மட்டுமே. ஐரோப்பியக் குடியேற்றம், கெளபாய் துப்பாக்கிக் கலாச்சாரம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் - விடுதலை - உள்நாட்டுப் போர் மத்தியில் நிகழ்ந்த விவசாயம் நாடோடி விவசாயமே. டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஐந்து தலைமுறைகளை அவதானித்தால் ”நாடோடி விவசாயத்தின்” பொருள் புரியும்.

முதலாவது நிக்கல்ஸ் ஆங்கிலப் பாரம்பர்யமுள்ளவர். நிக்கல்ஸின் முன்னோர் ஏன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா வந்தார் என்று தெரியவில்லை. 19-ம் நூற்றாண்டுத் தொடக்கம் - அல்லது 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உள்ள அமெரிக்கச் சூழ்நிலையில் நிக்கல்ஸ் தெற்குக் கரோலினா மாநிலத்தில் நல்ல வளமான கன்னிநிலம் 500 ஏக்கர் வாங்கி பருத்தி, புகையிலை, மக்காச்சோளம் சாகுபடி செய்தார். எல்லாமே நன்கு விளைந்தது. வீடு வாசல் வாங்கி மனைவி மக்களைப் பெற்றுச் செல்வந்தர் ஆனார். ஆனால் செல்வ வளம் நீடிக்கவில்லை. நிலத்தில் படிப்படியாக விளைச்சல் குறைந்தது. வறுமையுற்றார். நிக்கோலஸ் மகன் நிக்கோலஸ் II வளர்ந்து பெரியவனானார்.

தெற்குக் கரோலினாவை விட்டு டென்னசியில் 2000 ஏக்கர் நிலம் வாங்கி அப்பாவைப்போல் இவரும் பருத்தி, புகையிலை, மக்காச்சோளம் பயிர் செய்து பணம் சம்பாதித்தார். இவரும் வீடு வாசல் வாங்கினார். பிள்ளைகளைப் படிக்க வைத்தார். இவருக்கும் செல்வம் நீடிக்கவில்லை. விவசாயத்தில் நஷ்டம் வந்தது. படிப்படியாக விளைச்சல் குறைந்தது. மூன்றாவது நிக்கல்ஸ் தலையெடுத்தான். நிக்கல்ஸ் III டென்னசி நிலத்தால் ஒரு பயனும் இல்லை என்று அலபாமா மாநிலத்திற்குக் குடியேறினார். மாரங்கோ நகர் அருகில் ஹார்ஸ் கிரீக்கில் 2000 ஏக்கர் வாங்கினார். நிக்கலஸ் II என்ன செய்தாரோ அதையும் இவரும் செய்தார். முதலில் லாபம் வந்தது. பின்னர் இருவருக்கும் நஷ்டமே. நிக்கல்ஸ் IV பெரியவனான். இவர் ஹார்ஸ்கிரீக்கை விட்ட கன்று ஆர்க்கன்ஸா வந்தார். பார்க்டேல் என்ற ஊரில் பேவா என்ற இடத்தைத் தேர்வு செய்து 2000 ஏக்கர் வாங்கினார். அப்போது முதல் உலகப்போர் காலகட்டம். பேவாவில் நிக்கல்ஸ் நல்ல லாபகரமாக விவசாயம் செய்தார். கிடைத்த லாபத்தில் வீடு வாசலுடன் மக்காச்சோள மாவு அரைவை ஆலை, மரம் அறுவை ஆலை, பெரிய மளிகைக்கடை என்று ஏக தடபுடல். அந்தக் கால கட்டத்தில் ரசாயன உரம் அறிமுகமானது. கேட்க வேண்டுமா? ஏகபோக விளைச்சல்தான். நிக்கல்ஸ் IV வாழ்விடமே நிக்கல்ஸ் வில்லா என்ற பெயர் பெற்றது.

நிக்கல்ஸ்கள் தலைமுறை தலைமுறையாக ஊர்விட்டு ஊர் மாறிவந்த சூழ்நிலை ஏன்? அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மண்ணைச்சுரண்டி லாபம் பார்த்தனரே தவிர மண்ணுக்கு வழங்கவேண்டிய இயற்கை வளப்பொருள் எதையுமே வழங்கவில்லை. இதனால் ஆண்டுக்கு ஆண்டு குறையும் மகசூல் விதி அல்லது Law of Diminishing Returns ஏற்பட்டாலும் அமெரிக்காவில் அதை ஈடுசெய்ய புதிய நிலம் வாங்கி வருமானத்தை உயர்த்தும் அணுகுமுறை செயல்படுவதற்கேற்ப நடந்து கொண்டனர். பரந்த நாடான அமெரிக்காவில் புதிது புதிதாக விளைநிலம் கிடைத்தது. மண்ணுக்கு எதையும் வழங்காமல் மண்விழுதுகளான ஹூமசை 20,30 ஆண்டுகள் வரை தொடர்ந்து சுரண்டி எடுத்தபிறகு வேறு இடம் தேடி புதிய ஊரில் விவசாயம் செய்து வாழும் ஒரு ”நாடோடி விவசாய மரபை” ஒரு நிக்கல்ஸ் குடும்பம் மட்டும் செய்யவிலலை. 19-ம் நூற்றாண்டு அமெரிக்காவில் இப்படி ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் கதைகளும் நிக்கல்ஸ் குடும்பம் போலவே ஒரு விதமான நாடோடி விவசாயம் செய்தன. ஆக, அமெரிக்க விவசாய வரலாறு அவ்வளவு சிறப்பானது அல்ல.

ரசாயன உரம் அதாவது என்.பி.கே. பேக்கேஜை கடைப்பிடிக்க அமெரிக்கா உத்தரவிட்டது. நாலாவது நிக்கல்ஸைப் போல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நல்ல பலன் பெற்றார்கள். இனி இந்த நாடோடி விவசாயம் வேண்டாம். ஒரே ஊரில் தங்கி உருப்படியாக வாழலாம் என்றும் கனவு கண்டார்கள். எல்லாம் கனவுதான். நாலாவது நிக்கல்ஸ் ஏகமாகக் கொழித்தார். உயர்நிலையை அடைந்தார். எல்லாம் சில ஆண்டுகளுக்குத்தான்.

ரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கலஸின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கல்ஸ். இவரும் தனது பங்குக்கு டெக்சஸ் மாநிலத்தில் 1000 ஏக்கர் நிலம் வாங்கினார். ஆனால் விவசாயம் செய்யவில்லை. மருத்துவம் படிக்க விரும்பி ஒரு புகழ்பெற்ற மருத்துவராக டெக்சஸ் நகரில் தொழில் புரிந்தார். எனினும் 35 வயதில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதய நோயாளி ஆனார். மருத்துவத் தொழிலைச் சரியாகச் செய்ய முடியாமல் வருந்தினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜோ தனது மேஜை மீது கிடந்த சில பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டு அவற்றில் ஒன்றை எடுத்துப்படித்த போது ஒரு வித்தியாசமான செய்தி அவர் கவனத்தை கவர்ந்தது. அச்செய்தி இதுவே ”இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு நல்ல வளமான நஞ்சில்லாத மண்ணிலிருந்து பெறப்படுவதால் அத்தகைய உணவை உண்டால் இதய நோய் மனிதனை அணுகாது”. அப்போது அவருக்கிருந்த மன நிலையில் இது ஒரு நகைச்சுவையாகப் பட்டது. ‘எனக்குத் தெரியாத இயற்கை உணவா. நான் நாலுபேருக்கு யோசனை சொல்வேனே’’ என்று எண்ணினார். இதய நோயாளிகளுக்கு வெள்ளை ரொட்டி, பீன்ஸ், பட்டாணி, ஹேம், பார்பக்யு இறைச்சி (சுட்ட அப்பளாம் மாதிரி சுட்ட இறைச்சி) போன்றவற்றை ஜோ சிபாரிசு செய்வதுடன் அவரே அதை உண்பார். ஒரு முறை இந்த ஹேம் (சுட்ட பன்றிக்காய்?) உணவை உட்கொண்ட சில நிமிடங்களில் மயங்கிவிழுந்துவிட்டார். அருகில் இருந்தவர்களின் உதவியால் உயிர் பிழைத்தார் மெள்ள மெள்ள எழுந்து நடமாடினார். இவரைப் பரிசோதித்த இதய மருத்துவர்கள், எந்த நிமிஷமும் மரணம் நிகழலாம். அதுவரை உயிரைக் காப்பாற்ற ‘நைட்ரோகிளிசரின்’ தான் மருந்து என்று கைவிரித்துவிட்டனர். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று அப்பழைய விவசாயப் பத்திரிகை நினைவுக்கு வந்தது.

அது என்ன பத்திரிகை? என்ன விலாசம்? என்று அப்பத்திரிகையை மீண்டும் தேடினார்.

‘எப்படியும் சாகத்தான் போகிறோம். இவர்கள் கூறும் இயற்கை உணவு உற்பத்திக்கு வழி உள்ளதா என்று முயற்சி செய்யலாமே,’என்ற சிந்தனையுடன் தேடியதில், அப்பத்திரிகையின் பெயர் ”இயற்கைத் தோட்டம் மற்றும் பண்ணை” (Organic Gardening and Farming) என்பதும், அதை வெளியிட்டவர் ஜே.ஐ.ரோடேல் என்றும் புரிந்து கொண்டார். அமெரிக்காவுக்கு இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்தவர் ஜே.ஐ.ரோடேல் என்றும், பென்ஸில்வேனியா மாநிலத்தில் உள்ள எம்மாஸ் நகரிலிருந்து ரோடேல் பிரஸ் முலம் அப்பத்திரிகை வெளிவந்துள்ளது என்றும் விவரம் கிட்டின. இவர் அங்கு நேரில் சென்று அவர்களுடைய எல்லா வெளியீடுகளையும் வாங்கிப் பயின்றபோது அவரை மிகவும் கவர்ந்த நூல், ஆல்பர்ட் ஹாவர்டின் ‘வேளாண்மை உயில்’, ஹாவர்டின் ஆலோசனைப்படி டெக்சஸில் உள்ள தனது 1000 ஏக்கர் பண்ணையை இயற்கை விவசாயத்துக்கு மாற்றினார். ஹாவர்டு முன்மொழிந்த ”இந்தூர் கம்போஸ்டிங்” முறையைப் பின்பற்றினார். இந்தியாவில் ஹாவர்டுக்கு ஏற்பட்ட சோதனை, ரசாயனங்களை மண்ணில் இடுவதற்கு அவர் எழுப்பிய கண்டனக்குரல் காரணமாக, புசாவில் பணிபுரிந்த ஹாவர்டு ஒருங்கிணைந்த வடக்கு ராஜதானியிலிருந்து (United Provinces) 1920 காலகட்டத்தில் வெளியேறி, மத்திய ராஜதானியில் (Central Provinces) இந்தூர் சமஸ்தானம் வழங்கிய 100 ஏக்கர் நிலத்தில் தனது ஹூமஸ் ஆய்வைத் தொடர்ந்து உருவாக்கிய ஒரு தொழில்நுட்பம் ”இந்தூர் கம்போஸ்டிங்.”


ஹாவர்டு மேற்கொண்ட இந்தூர் கம்போஸ்டிங் அணுகுமுறையையும், கருத்தையும் கவனித்தால் 10-ம் நூற்றாண்டில் சுரபாலர் எழுதிய விருட்ச ஆயுர்வேதம் வெண்பாப் பாட்டுக்கு இவர் உரை எழுதியதைப் போல் தோன்றும். மிகவும் ஆரோக்கியமான மண் விழுதாகிய ஹூமஸ் பெற குறிப்பிட்ட சதவீதம் தாவரக்கழிவுடன் ஹூமஸ் பெற குறிப்பிட்ட சதவீதம் தாவரக்கழிவுடன் குறிப்பிட்ட அளவு மிருகங்களின் கழிவும் கலந்த கம்போஸ்ட்தான் இந்தூர் கம்போஸ்டிங். சுரபாலரின் விருட்சாயுர் வேதத்தில் இதுவே குணபரசம்.


இந்தூர் சமஸ்தான மாட்டுப் பண்ணையில் கீழே தரையில் சிமெண்ட்டுப் பூச்சு இல்லை. மண் தரையில் மாடுகளைக் கட்டுவதற்கு முன் மாடுகளுக்குப் படுக்கை போடச் சொல்கிறார். அறுவடைக் கழிவுகள் - உலர்ந்தவை வைக்கோல் - தட்டைப்புல் - துவரைச்செடி என்று எதையும் பரப்பி அதன் மீது மரத்தூளைக் கொட்டச் சொல்கிறார். இரவில் மாடு கழிக்கும் சாணம், முத்திரம் எல்லாம் கலந்து கார்பன்: நைட்ரஜன் விகிதம் 33:1 என்பது கம்போஸ்டிங் முறையில் மக்கியவுடன் 10:1 என்று குறைந்த நல்ல மண் விழுதாக மாறும் என்கிறார். இந்தூர் கம்போஸ்டிங் முறையை ஹாவர்டு பக்கம் பக்கமாக விவரித்துள்ளதை நான் இங்கு சில வாக்கியங்களில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஜோ.நிக்கல்ஸுக்கு ஹாவர்டு எழுதிய ”வேளாண்மை உயில்”- உயிர் மூச்சானது.


ஹாவர்டின் புத்தகத்தை முழுமையாகக் கற்று அதன்படி தன்னுடைய 1000 ஏக்கர் பண்ணையையும் இயற்கைக்கு மாற்றியதுடன் அங்கு விளைந்த ஆரோக்கியமான உணவை உண்டு நிஜமாகவே தனது இதயநோய் உபாதைகளிலிருந்து மீண்டார். புத்தருக்கு ஞானோதயம் போதிமரத்தின் கீழ் அமர்ந்து ஏற்பட்டதைப் போல் டாக்டர் ஜோ. நிக்கல்ஸுக்கு ”ரோடேல் பிரஸ்” வழங்கிய இயற்கை விவசாய நூல்கைளப் படித்து ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையில்லை. அத்துடன் ஜோ. நிக்கல்ஸ் சும்மாவிடவில்லை. ரசாயன விஷங்கள் மண்ணில் தொடங்கி மனிதர்களுக்கு உணவாக வாயில் வந்து விழும் ரொட்டிவரை தொடர்வதைக் கண்டு, அதனால் பாதிப்புறும் மனித அவயங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றிய அவருடைய பார்வையில் கிட்டியவற்றை அடுத்த இதழில் கவனிக்கலாம். ஜோ. நிக்கலஸ் செய்ததை நாம் செய்தால் என்ன?


-o00o-


நல்லுணவும் நலவாழ்வும் பெற இயற்கை விவசாயத்தில் ஒரு பயிற்சியைக் கட்டுரை ஆசிரியர் - இயற்கை வேளாண்மை வல்லுனர் ஆர்.எஸ். நாராயணன் வழங்குகிறார்.


இந்தூர் கம்போஸ்டிங், மண்புழு வளர்ப்பு, மரம்வளர்ப்பு, பஞ்சகவ்யம், குணபரசம், உயிர்மூடாக்கு, உலர் மூடாக்கு - பல்லூயிர்ப்பெருக்க வேளாண்மை (Bio Diverse Agriculture) விருட்சாயுர்வேதம் மாடித்தோட்டம் - எல்லாம் கற்றுத்தரப்படும்.

இடம்: ஆதிலட்சுமி புரம். இயற்கைப் பண்ணை

நாள்: மாதங்களில் 2வது, 4வது ஞாயிற்றுக்கிழமை தோறும்.

நேரம்: காலை 10.30முதல் 4.00 வரை

வழி: திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலை - திண்டுக்கல்லிருந்து 12 கி.மீ

தூரத்தில் ஆதிலட்சுமிபுரம் உள்ளது.

பயிற்சி பெற விரும்புவோர் ரூ.150 கட்டணத்தை நேரில் கலந்து கொள்ளும் போது செலுத்தலாம். அதற்கு முன் தொலைபேசி/கை பேசியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மதிய உணவு, மாலை தேனீர், ஆதிலட்சுமிபுரம் - அம்பாத்துரை. 5கி.மீ. ஆட்டோ செலவு கவனிக்கப்படும்.

முகவரி

ஆர்.எஸ். நாராயணன்

5இ 47B சவுந்தரம் நகர்

அம்பாத்துறை

காந்திகிராமம் (வழி)

திண்டுக்கல் - 624302

தொலைபேசி 0451-2452365

கைபேசி 9442113588