Friday 31 December 2010

விவசாயத்தின் எதிர்காலம்

விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்து விட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையின் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 199394ல் 25 சதவீதமாக இருந்த வேளாண் உற்பத்தி, 200506ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோல் 200102 ல் 76.89 இலட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 200405ல் 61.40 இலட்சம் டன்னாக குறைந்துள்ளது. ஏன் இந்த அவலநிலை என்று பார்த்தால் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் போன்ற பல காரணங்கள் நம்முன் தெரிகின்றன. விவசாய நிலங்களை அரசு எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆர்ஜிதம் செய்யலாம் என்ற சட்டங்கள் விவசாயிகள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் ஏர் இந்தியா மகாராஜா சின்னத்தைப் போன்று கையைக் கட்டிக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து "உனக்கு என்ன தேவை? அதை செய்ய காத்திருக்கிறேன்' என்ற நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கவும், நம்நாட்டு விவசாயிகள் செத்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் நடந்து கொள்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

விண்ணப்பம் பெறப்பட்ட 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 148 வரை ஏற்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானவை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகும். புதிய தகவல் தொழில்நுட்ப பிரிவுகள், சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பத்தாண்டுகளுக்கு வரிச்சலுகை பெறலாம்.

சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள் பறைசாற்றப் பட்டதிலிருந்து ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஏற்பளிப்பு அளிக்கப்படும் என்று “கொள்கையளவில்'' ஒப்புக் கொள்ளப் பட்டிருப்பதாகவம் கூறப்படுவதானதுசட்டம் இயற்றப்படும் சமயத்தில் அரசு தெரிவித்த கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் பல ஆபத்தான எதிர்விளைவுகள் ஏற்படும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான உச்சவரம்பை உயர்த்தியதை நியாயப்படுத்துவதற்கு, மேலும் ஒரு காரணத்தைக் கூறி இருக்கிறது அரசு. "சந்தை சக்திகள் அவற்றின் போக்கிற்கு ஏற்ப இயங்கிட வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு உச்சவரம்பை நிர்ணயிப்பது, ஒரு விதமான "உரிம ராஜ்ஜியம்'' உருவாவதற்கே வழிகோலும். எனவே தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு உச்சவரம்பு எதுவும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வர்த்தகத் துறை கருதுகிறது'' (தற்பொழுது இதில் மாற்றம் செய்ய அரசு எண்ணியுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது) என்று அரசின் குறிப்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இது ஆபத்தாக முடியும். "சந்தை சக்திகள்'' சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அளவினைத் தீர்மானிக்க அனுமதி அளித்தால், நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் யாருக்கு சேவை செய்யும்?

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று ஒரு காலத்தில் உரிமைக் குரல் கொடுத்தோம். இன்று உழுபவனுடைய நிலமெல்லாம் அன்னிய உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் பொருளாதார சாம்ராஜ்யங்களாகத் திகழ்கின்றன.

ஒரிசாவில் போஸிகே என்ற அன்னிய உருக்குக் கம்பெனி மகாநதி தீரத்தில் ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்க அனுமதித்தனர். அந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதிக்குத் தனியாகத் துறைமுகம் அமைத்துக் கொள்ளவும் அனுமதித்திருக்கின்றனர். வெட்கக்கேடான இந்த வேதனையை எங்கே போய்ச் சொல்ல?

சிறப்புப் பொருளாதார, மண்டலங்கள் துணை நகரங்களை உருவாக்குதல், சிறிய வியாபாரிகள் பாதிக்கக்கூடிய அளவில் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது, நாடு முழுவதும் சங்கிலி தொடராக அந்த நிறுவனங்கள் வானத்தைத் தொடுகின்ற வகையில் வணிக வளாகங்களை அமைக்கவும் பன்னாட்டு நிறுவனத்தின் மேலாண்øயை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாயிகளை மட்டும் விரட்டாமல் இலட்சோப லட்சம் சிறிய வியாபாரிகளையும் கோடிக்கணக்கான ஊழியர்களையும் துரத்துகின்றது.

நாட்டின் நலன் கருதி பொது மக்களின் தேவைக்காக முன்பு அவசர, அவசியமான நிலைகளில் அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது. இன்றைய மத்திய அரசு எதைப் பற்றியும் சிந்திக்காமல் ‘எந்த நிலத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க' என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இம்மாதிரி மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டுப் பெரு முதலாளிகளைக் கூவிக்கூவி அழைக்கின்றன. பிளாட்பார்மில் விலையைக் கூவி விற்பதைப் போல ஆட்சியாளர்கள் வாவா என்று அழைத்து நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைப் படிப்படியாக பாழாக்கி வருகின்றனர். இந்திய மண் விவசாய மண். அந்த மண் வாசனையை உலக வங்கியிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அடகு வைப்பது தாயை அடகு வைப்பதற்கு ஒப்பாகும். இந்தியாவின் முக்கியமான காரணிகளாக விவசாயமும் விவசாயிகளும் திகழ்கின்றனர். இன்றைக்கு அதற்கே சோதனை ஏற்பட்டதற்குக் காரணம் 1991லிருந்து மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்கள் தான். இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இவர்களிடம் நியாயம் கேட்க வேண்டும்.

விவசாயிகளே உங்கள் நிலங்களைத் திமிங்கலங்களுக்கு கொடுத்து விட்டு அவைகள் கொடுப்பதை வாங்கிக் கொள் என்கிறது மத்திய அரசு, மண்டலாபதிபதிகளே, நீங்கள் விரும்பிய அனைத்தையும் வாங்கித் தருகிறோம். ஆணையிடுங்கள் என்கிறது மத்திய அரசு, இது தான். சிறப்புப் பொருளாதார மண்டலம்.

மேற்கு வங்கத்தைப் போன்று மும்பைக்கு வெகு அருகில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அமையவிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு 35000 ஏக்கர்களுக்கு மேல் விளை நிலங்களை கையகப்படுத்த விவசாயிகளுக்குத் தாக்கீது வழங்கப்பட்டுள்ளது. இரண்டு போகம் விளையும் இவ்விளை நிலங்களுக்கு, இன்னும் ஓரிரு மாதங்களில் ஹேட்டாவேன் அணை கட்டிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் வர கால்வாய் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது. அரசும், அம்பானியும் இந்த நிலங்கள் தரிசு நிலங்கள் தான் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கின்றனர். மும்பைக்கு அருகில் உள்ள இப்பகுதியில் எல்லா வசதிகளோடும் ஒரு சாட்டிலைட் நகரம் அமைப்பது தான் ரிலையன்ஸின் திட்டம்.

அணைகள் கட்டுவதற்காக, மும்பை-புனே விரைவு வழிப் போக்குவதிற்காக என்று தங்களின் நிலத்தை இழந்த மஹாராஷ்டிர விவசாயிகள், எஞ்சிய நிலங்களையும் ஏய்த்துப் பறிக்கும் அரசின் போக்கைக் கண்டித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

விவசாய நீர்நிலைகளுக்கும் பேராபத்து

முன்பு மாதக்கணக்கில் தொடர்மழை பெய்யுமாம். ஆனால் தற்போது நாள் கணக்கில் தான் மழை பெய்கிறது. முன்பைவிட மழை அளவு குறைந்துள்ளது. முன்பைவிட அதிகமாய் வெள்ளப் பாதிப்புகளும் ஏற்படுகிறது. விவசாயிகளுக்குக் கிடைக்கும் விளைச்சல் பாதித்துப் பொருளிழப்பு ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கத்தின் பணம் செலவழிக்கப்பட்டு வீணாகிறது. ஏனெனில் நகர்ப்புறங்களிலுள்ள ஏரி, குளங்களில், 60 விழுக்காடு அளவு ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் ஆகிவிட்டன. இன்று குடிக்க, குளிக்க எனத் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நிலை. பால் விலைக்கு ஈடாகத் தண்ணீர் விலை ஆகி விட்டது.

குடிநீருக்காகக் கால் கடுக்க நடக்கின்றகாத்துக் கிடக்கின்ற மற்றும் நீண்டதூரம் பயணம் செய்து நீர் எடுக்கின்ற நிலை ஒருபுறம். தேங்குவதற்கு வழியற்று எந்தப் பயனுமின்றி கடலோடு கலந்து தண்ணீர் காணாமல் போவது மறுபுறம். இதற்கு காரணம் நீர்நிலைகளைக் கைப்பற்றுபவர்கள்தான். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? ஆள் பலமும் அதிகார பலமும் எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்தவிடாமல் செய்து விடுகிறது. வீட்டுவசதி வாரியமும் குளங்களையும் நீர் நிலையங்களையும் அதிகாரப்பூர்வமான வீட்டுமனைகள் என்று அறிவித்து அதையும் பல இடங்களில் விற்பனை செய்தது தவறு மட்டுமல்லாமல் மாபெரும் குற்றமாகும்.

விவசாயிகளின் கல்லறைகளின் மீது எழுதப்படும் மாடமாளிகைகள் - மடியும் உழவர்கள்

இன்னொரு பக்கம் விவசாயிகள் கடன் தொல்லைகள். சென்ற ஆண்டில் உழவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காண்டேசு என்ற பகுதியில் கடந்த 8 மாதத்தில் 81 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்பு 74 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பட்ஜெட் 2006ல் நாடாளுமன்றத்தில் உழவர்கள் தற்கொலை குறித்த 6 மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டது. அது ஆந்திராவில் 1322, மராட்டியத்தில் 666, கர்நாடகாவில் 323, கேரளாவில் 136, ஒரிசாவில் 5 என்றும் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தற்கொலைகள் மூலம் வேளாண்மைத் தொழில் நெருக்கடியைக் குறித்த விழிப்புணர்வை, நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளன. வட்டி தள்ளுபடி மட்டும் விவசாயிகளுக்குத் தீர்வாகாது.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியப் பொருளாதாரத்தில், சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார சமச்சீரின்மை தொடரும் மோசமான சூழலில், நாட்டின் மொத்த ஜனத் தொøயில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இதைப் போக்காமல் ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி, பணக் காரர்களின் பைகளை நிரப்பும் இந்தத் திட்டத்தை எதிர்த்து நாடுதழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் கொண்டு வர வேண்டும். இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும்.
 
 
 
 

Saturday 25 December 2010

விவசாயதின் நிலமையை மாற்றுவோம்

விவசாயதின் நிலமையை மாற்றுவோம்




அனைவருக்கும் வருத்தங்கலந்த வணக்கம்





தங்கத்தின் விலை ஏற்றத்தை நாம் கண்டு கொள்வதில்லை

ஆனால் விவசாய விளை பொருள்கள் விலை உயர்ந்தால் மட்டும் நாம் அதை எதிர்க்கிறோம்.

ஒரு கிராம் தங்கம் 1750 ரூபாய்க்கு விற்க்கும் போது ஒரு கிலோ வெங்காயம் ஏன் 100 ரூபாய்க்கு விற்கக் கூடாது. இப்படி விற்கும் போது விவசாயிக்கு கிடைப்பது என்னவோ 25 – 30 ரூபாய் மட்டும் தான்.

60 – 80 % கிடைப்பது இடைத்தரகர்களுக்குத் தான். ஒருவரின் உழைப்பில் ஒரு ஊரே சாப்பிடுகிறது. ஆனால் உற்பத்தி செய்தவனோ சாப்பிட வழியின்றித் திண்டாடுகிறான்.

எப்போது விவசாயியும், விவசாயமும் முன்னேறுகிறானோ அப்போது தான் ஒரு நாட்டுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

இதனை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திப்போம்!

அந்த வழியிலே சென்று நாம் நமது விவசாயிகளையும், நாட்டையும், காப்பாற்றுவோம்.

இளைஞர்களே சிந்தியுங்கள் !



உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் : (கண்டிப்பாக பதில் எழுதவும்) நமக்காக அல்ல நமது விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக.

சு. ஆனந்தராஜ் BSC விவசாயம்

தமிழ் இயற்கை பண்ணை

செட்டி குளம் , பெம்பலூர் மாவட்டம்

தமிழ் நாடு - இந்தியா



அலை பேசி ; +91 9487269907

organicananth@gmail.com

வலை தளம் ; www.organicananth.blogspot.com



'' செய் அல்ல செய்வோம் ''

’’ஒன்று படுவோம்! உயர்வோம்! உயர்த்துவோம்!’’

Sunday 19 December 2010

விவசாய (வேளாண்மை) திருக்குறள்கள்

விவசாய (வேளாண்மை) திருக்குறள்கள்




உணவு உற்பத்தி செய்யும் பயிர்த் தொழில் உழவு அதன் சிறப்பும் செய்முறைவும்!!

எங்கு சுற்றிப் பார்த்தாலும் உலகம் ஏரின் பின்னால் நின்றாக வேண்டும். அதனால் துன்பம் தருவதாக இருந்தாலும் உழவே தழையானது. இப்போது குறளை படியுங்கள்.

’’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்


உழந்தும் உழவே தலை’’ – 1031.

உழவுத் தொழிலைச் செய்து அதனால் விளையும் பொருளை உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிறரை வணங்கி அவர் கொடுப்பதை உண்டு ஏவல் செய்து ப்ழைக்கும் அடிமைகள் ஆவார்கள். இப்போது குறளை படியுங்கள்.

’’உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்


தொழுது உண்டு பின்செல் பவர் ‘’ – 1033

உழவன் என்பவன் யார் ?? தன் கையால் உழைத்து உண்பவன், இவன் பிச்சை எடுத்து உண்ண மாட்டான், பிச்சை எடுப்பார்க்கு ஒளித்து வைக்காது கொடுப்பான். இப்போது குறளை படியுங்கள்.

’’இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவார் காவாது


கைசெய்தூண் மாலையவர்’’ – 1035

ஆசைபடுவதையும் துறந்துவிடும் துறவிக்கும் உடல் வேண்டும். உடலுக்கு உணவும் வேண்டும். உழவனது கை முடங்கிப் போகுமானால் துறவின் உணவுக்கும் வழியில்லை. அதாவது இல்லறத்தானுக்கும் வாழ்வு இல்லை, துறவறத்தானுக்கும் வாழ்வு இல்லை. இப்போது குறளை படியுங்கள்.

’’உழவினார் கை மடங்கின் இல்லை விழைவதூஉம்


விட்டேம் என்பார்க்கும் நிலை’’ – 1036

உழுது உண்டு வாழ்வது எவ்வளவு சிறப்புடையதாயினும் தண்ணிர் இல்லாமல் அது சாத்தியம் இல்லை. உணவை உற்பத்தி செய்யவும் உற்பத்தியானதை உணவாக்கவும் தண்ணிர் தேவை. அந்தத் தண்ணீரே ஊணவும் ஆகிறது. இப்போது குறளை படியுங்கள்.

’’துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்


துப்பாய தூஉம் மழை’’ – 12

உணவை உண்டாக்கித் தானே உணவும் ஆகின்ற தண்ணீரானது நமக்கு மழை வழியாகக் கிடைக்கிறது. மழை நீர் மண்ணுக்குள் அமிழ்வதால் பூமியில் உயிர் வாழ்க்கை நீடிக்கிறது. அதனால் நீர் அமிழ்தம் (சாவா மருந்து) என்று உணரப்படுகிறது. இப்போது குறளை படியுங்கள்.

’’வான் நின்று உலகம் வழங்கி வருவதால் தான் அமிழ்தம்


என்று உணாற் பாற்று’’ – 11

வானம் மழை பெய்யாது பொய்த்து போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இந்த உலகத்தில் மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். குறளை படியுங்கள்.

’’விண் நின்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து


உன் நின்று உடற்றும் பசி’’ – 13

மழைத்துளி விழாமல் பச்சைப் புல்லைக்கூடப் பார்க்க முடியாது. ஆடு, மாடு, மேயக்கூடிய புல்லைக்கூட பார்க்க முடியாது என்றால் மரம், செடி, கொடி எல்லாம் வளர்வது எப்படி? குறளை படியுங்கள்.

’’விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே


பசும்புல் தலை காண் பரிது’’ – 16



மழை பெய்யாது போனால் உழவர்கள் ஏர் பூட்ட மாட்டார்கள். உழவு நடக்காது. எனவே உணவும் கிடைக்காது. (இன்றைய இந்தியாவில் இதுவே நிலை) குறளை படியுங்கள்.

’’ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்


வாரி வளம் குன்றிக் கால்’’ - 14

நீரும் நிலமும் கிடைத்து கால்நடையும் கிடைத்து பயிற்சியும் கிடைத்தால் ஏர் பூட்டி உழவு செய்யலாம். ஆனால் பயிர்தொழில் எண்பது அது மட்டுமே இல்லை. ஏர் உழுத பிறகு எரு இட வேண்டும். விதை முளைத்து வரும் போது களையை கட்டுப்படுத்த வேண்டும். அதன் பிறகு மழை பெய்ய வேண்டும். அல்லது நீர் பாய்ச்ச வேண்டும். பயிரைப் பாதுகாக்கவும் வேண்டும். குறளை படியுங்கள்.

’ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்


நீரினும் நன்று அதன் காப்பு’ - 1038

உழவது முதல் அறுவடை செய்து வீடு சேர்ப்பது முடிய பல பணிகளையும் இடமும் காலமும் அறிந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்ய முடியுமானால் மாபெரும் வெற்றி நமக்குக் கை கூடும். குறளை படியுங்கள்.

’’ஞாலம் கருதினும் கைகூடும் காலம்


கருதி இடத்தால் செயின்’’- 484

பருவகாலம் அடிக்கடி மாறுபடுகிறது. மழைகாலம் குறுகியும், கோடைகாலம் நீண்டு கொண்டும் வருகிறது. பருவ மழை பொய்த்துப் போகலாம்., எந்த நேரத்திலும் புயலும், வெள்ளமும் வரலாம். பருவகாலத்திற்க்கு இசைவாக நடைமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும். நமது செல்வம் சிதைந்து போகாமல் காத்துக் கொள்வதற்கான் வழி இதுவேயாகும்.

குறளை படியுங்கள்.

’’பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்


தீராமை ஆர்க்கும் கயறு’’ – 482

கருவியும், காலமும் அறிந்து செயற்பட்டால் செய்ய முடியாதது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தே செய்து முடிக்க உதவுகிறது. குறளை படியுங்கள்.

’’அருவினை என்ப உளவோ கருவியால்


காலம் அறிந்து செயின்’’ – 483

கருவிகளிலெல்லாம் சிறந்த கருவி அறிவு. மனிதரைத் துன்பங்களில் இருந்து பாதுகாக்கும் கருவி அறிவு. அறிவானது அழிவுகளில் இருந்து காத்து நிற்க்கும் கோட்டை மதில் போன்றது. குறளை படியுங்கள்.

’’அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்


உன்னழிக்கல் ஆகா அரண்’’ – 421

செய்யக்கூடாததைச் செய்தாலும் கோடு வரும். செய்ய வேண்டியதைச் செய்ய மறுத்தாலும் கோடு வரும். (பச்சைப் பரட்சி, வெள்ளைப் புரட்சி, நீலப் புரட்சி கட்டங்களில் இப்படிதான் கேடு சூழ்ந்தது) குறளை படியுங்கள்.

‘’செய்தக்க அல்ல செய்க் கெடும் செய்தக்க


செய்யாமை யானும் கெடும்’’ – 466

நிலம் உடையவன் வேறாகவும் உழைப்பவன் வேறாகவும் இருக்க முடியாது. நிலம் என்னும் நல்லான் உழவனுக்கு வாழ்க்கைத் துணைவி. உடையவன் மகனை படிக்க வைக்க என்று பட்டணம் போகக் கூடாது. அப்படிச் சென்றால் நிலம் ஊடல் புரியும், நிலத்தால் கிடைக்கும் பயன் கிட்டாது போகும். மனைவி ஊடி விலகி இருந்தால் அதை இதை செய்து சரி செய்து விடலாம். விளைநிலம் ஊடினால் எதுவும் செய்ய முடியாது. குறளை படியுங்கள்.

’’செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து


இல்லாளின் ஊடி விடும்’’ – 1039

வாழ்வதற்கு ஆதரமான் தண்ணீரை வானம் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடி உள்ளார்கள். வானமே பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள் எதிர் நோக்குகிறார்கள். குறளை படியுங்கள்

’’வான் நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்


கோல் நோக்கி வாழும் குடி’’ – 542

தக்க நேரத்தில் களையை நீக்க வேண்டும் இல்லாது போனால் பயிர் வளர்ச்சி குன்றிப் போகும். அதைப் போல கொலைக்கு அஞ்சாத கொடியவர்களை வேந்தன் தண்டிக்க வேண்டும். இல்லையேல் குடிமக்கள் வாழ்க்கை நசித்துப் போகும். குறளை படியுங்கள்

’’கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்


களை கட்டத னோடு நேர்’’ – 550

களைகளில் எல்லாம் கொடிய களை முள் மரங்கள். அவற்றை சிறியதாயிருக்கும் போதே களைய வேண்டும். அவ்வாறு செய்யாது வளரவிட்டால் பின்பு அதை வெட்டுவேரின் கையை வருத்தும். குறளை படியுங்கள்

’’இளைதாக முள்மரம் கொல்க களையுனர்


கை கொல்லும் காழ்த்த இடத்து’’ – 879

நுலறிவும் தொழில் நுட்பமும் அறிந்திருந்தாலும் உலகத்து இயற்கை அறிந்து செயல் பட வேண்டியது அரசனின் கடமை. அரசு அப்படிச் செய்ய மறந்த போது மன்னனுக்கு உலகத்து இயற்கையை அறிவுறுத்த வேண்டியது அமைச்சரின் கடமை. குறளை படியுங்கள்

’’செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து


இயற்கை அறிந்து செயல்’’ – 637

அரசன் முறை தவறி நடந்து கொண்டான் ’’ஆ’’ பயன் குன்றும். ’’ஆ’’ என்பது பசு. பசு இனத்தால் மனிதர்க்குக் கிட்டும் பயன்கள் கிட்டாது போகும். ஏர் உழுதல், வண்டி இழுத்தல், நீர் இரைத்தல், நிலத்துக்கு எரு தருதல், பால், தயிர், நெய் தருவது நின்று விடும். நூலோர் ஆறு தொழிலையும் மறப்பார்கள். கல்வி கற்றல். பிறருக்கு கல்வி கற்பித்தல், பொதுநலத்துக்காக பெரு முயற்சி செய்தல், அத்தகைய முயற்சிகளுக்கு உதவி செய்தல், அத்தகைய நல்முயற்சிகாகக் கொடுத்தல், கொடுப்பதை வசூலித்தல் ஆகிய ஆறு தொழிலும் நின்று போகும்.. (ஓதல், ஓவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல், என்று குறிப்பது தழிழ் மரபு.) குறளை படியுங்கள்.

’’ஆபயன் குன்றும் ஆறுதொழிலோர் நூல் மறப்பர்


காவலன் காவான் எனின்’’ – 560

கல்லாரை கொண்டு நடைபெறும் கடுங்கோலாட்சி ஒன்றே பூமிக்குப் பாரமக அமையும். மற்றவர்கள் முன்பே பிணியால் மாய்ந்து போயிருப்பார்கள். குறளை படியுங்கள்

’’கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது


இல்லை நிலைக்குப் பொறை’’ – 570