Monday 8 July 2013

விவசாயத்தில் - திருவள்ளுவரும் கம்பரும்


 விவசாயத்தில் - திருவள்ளுவரும் கம்பரும்
வான்புகழ் கொண்ட வள்ளுவன் ‘’உழவே தலை’’ என்று முன் மொழிகின்றார். கம்பன் தன் படைப்புகளில் வழி மொழிந்து விளக்கம் கொடுக்கிறார். தமிழுக்கு ‘கதி’ இவர்கள் க-கம்பன், தி-திருவள்ளுவரும். தமிழுக்கு என்றால் தமிழனுக்கு, தமிழனுக்கு என்றால் அனைவருக்கும் உணவளிக்கும் உழவனுக்கு, உழவனுக்கு என்றால் மருத நில மக்களுக்கு ஏரும் போரும் எங்கள் தொழில் என்று உற்பத்தியும், காப்பும் கொண்டு மண்ணாண்ட மருதநில மக்களைத்தான் பெரிதும் குறிக்கும்.
வள்ளுவன் முன்மொழி
வள்ளுவன் உலகியல் மெய்யியல் அறிவர். உலகம் சுழல்கின்றது என்பதை அறிந்தவன். அப்படி சுழலும் உலகமும் ஏருக்குப் பின்னால் தான் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார். ஆனால் இன்று உழவன் யார் யார் பின்னால் செல்கின்றான் என்பதை பார்த்தால் வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.இதுதான் தமிழன் வீழ்ச்சியின் அடையாளம். அதை உணர்ந்து கொண்டால் உழவனை உலகத்தார் பின்பற்றுவார். அது தமிழின ஆட்சியில் நடைபெறும். அந்த ஆட்சி தான் உழவன் ஆட்சி, தமிழன் ஆட்சி, அதற்கு அன்றே அடிக்கல் நாட்டியவர் தான் வள்ளுவர்.
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (1031)
என்று பாடியுள்ளார்.
உழவே தலை என்பதை உணர்ந்துவிட்டால், உழவனே தலைவன். உழவன் தலைவன் ஆனால், ஆட்சியின் தலைவன் உழவன் உயிர் வளர்க்கும் உழவன் வழங்கும் உழவன் உயிர்க்காக்கும் தலைவன் என்ற நிலையில் தான் தமிழின ஆட்சி தனிச்சிறப்பு பெறும். அதுவே தமிழன் ஆட்சி, அதுவே தமிழனின் தலைமை.

உழவனின் தனிச்சிறப்பு

வள்ளுவர் காலத்திலேயே உழவர் ஆளப்படும் நிலையைக் கண்டவர். ஆள வேண்டியவன் ஆளப்படுகிறான். வள்ளுவர் நெஞ்சம் வருந்துகிறது. உலக வாழ்விற்கு அச்சாணிப் போன்று திகழ்கின்றார்கள் உழவர்கள். ஆனால் அடையாளம் தெரியாமல் உள்ளார்கள் என்று வெந்து வெதும்பி உழவனை அடையாப்படுத்துகிறார்.
அதனால் தான்
உழுவார் உலகக்தாருக்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொருத்து (1032)
என்று பாடியுள்ளார். தேரின் புறத்தோற்றம் பாராட்டப்படுகிறது. தேரின் காட்சிப் போற்றப்படுகிறது. எல்லோரும் தேரின் இயக்கத்திற்கு ஆணி யார் என்று எண்ணாமல் இயங்குக் கொண்டுள்ளனர். வள்ளுவர் நெஞ்சில் பட்டதைப் பாடினார். உழுவார் தேரின் அச்சாணி, எழுவார் தேரின் மற்றப்பகுதிகள். உழுவார் மருதநில மக்கள் எழுவார் மற்றநில மக்கள். இரண்டும் சேர்ந்தது தான் தேர். இருவரும் சேர்ந்தது தான் உலகம். இருவருமே தேரின் பகுதிகள். ஆனால் தேரோட வேண்டியது அச்சாணி போன்றவர்கள் ஆள்கின்ற நாள் தான் தமிழின ஆட்சி நாள். ’’ஊர் கூடி தேர் இழுப்போம்’’ விரைவில் !!!
கம்பன் காலத்தில் உழவர் நிலை
வள்ளுவர் முடியாட்சிக் காலத்தின் சிறந்த நிலையில் வாழ்ந்தவர். கம்பன் முடியாட்சி காலத்தின் சரிவில் வாழ்ந்தவர். கம்பன் காலத்திலும் உழவன் நிலை சமுதாயத்தில் எடுப்பாக இல்லை. ஆனால் உழவன் தான் உலகிற்கு அடிப்படை என்பதை உணர்ந்திருந்தார். பக்திக் காலத்தில் வாழ்ந்ததால் இராமாயணம் படைத்தார் என்றாலும் தன் படைப்புகளில் மருதநிலத்தையும், மன்னரையும், உழவரையும், மறக்காமல் பதிவுகள் செய்துள்ளார்.   உழவனின் சிறப்பை உலகத்திற்கு வெளிப்படுத்த ‘’ஏர் எழுபது’’ என்ற படைப்பை படைத்து ஏருக்கு ஏற்றம் சேர்த்துள்ளார். வள்ளுவன் முன் மொழிந்ததை கம்பனின் வழி மொழிந்து விளக்கம் கொடுத்துள்ளான் என்று தான் பார்க்க வேண்டும். உழவுக்கு வள்ளுவன் பத்து குறள் படைத்தார். கம்பன் எழுபது பாட்டுகள் படைத்து ஏற்றிப்போற்றியுள்ளார். இந்த கடமையை கம்பன் காலத்தில் செய்துள்ளான். கம்பனின் இறைப்பார்வையை ஒதுக்கிவிட்டு, உழவுப்பார்வையைப் பார்த்தால் மருதநில மக்களுக்கு, உழவர்களுக்கு ‘’’கதி’’ கம்பனும் வள்ளுவரும் தான் என்று தெரியும்.
கம்பன் காலத்தில் ஆரியம்.

கம்பன் காலத்தில் ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிய காலம். மனுதர்மம் மண்ணை ஆண்ட காலம். உழவன் மண்புழுவாய் மத்தித்தக்காலம். உழவுத்தொழில் பாவத்தொழிலாக வேதம் அறிவித்தக் காலம். கம்பன் நெஞ்சு பொறுக்கவில்லை. வள்ளுவன் முன்மொழிந்தது கம்பன் நெஞ்சில் கனலாய் பொங்கிக் கொண்டு இருந்தது. ஏடு எடுத்து எழுதினான் ஏர் எழுபது.  அவன் தான் உழவனின் பாதுகாவலன். எங்கு எப்பொழுது ஒர் இனத்திற்கு இழிவும் இடரும் ஏற்படுகிறதோ அப்பொழுது தன் உள்ள கிடக்கையை உலகிற்கு வெளிப்படையாக படைப்பவன் உண்மைப்படைப்பாளி சமுதாயப் படைப்பாளி. காலத்திற்கு தேவையான ஒரு படைப்பைப் படைக்கிறான். அது இனத்திற்கான படைப்பு. தமிழின படைப்பு. அது தான் ஏர் எழுபது. உழவனை எழுப்பப் படைக்கப்பட்ட படைப்பு. கம்பனுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருந்தால் அக்காலத்தில் அப்படி ஒரு படைப்பு படைத்திருப்பான்.
கோதில் குலம்
தன் படைப்பின் முதல் பாட்டு ‘’ வேளாண்குலச் சிறப்பு’’ என்ற பாட்டு.
‘’ வேதியர்தம் உயர்குலமும்
    விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய
   நிதிவணிகர் தம்குலமும்
சாதிவளம் படைத்துடைய
   தாயனையை காராளர்
கோதிங்குலந் தனக்குகர்
  உண்டாகிற் கூறீரே!!’’

நான்கு குலத்தைக் காட்டுகிறார் கம்பர். வேதியர் குலம், வேந்தர் குலம், நிதியர் குலம், கோதில் குலம்- என்று பெயர் சூட்டுகிறார். கோதில் குலம்- தாயனயை காராளர் என்கிறார். அனைத்து குலத்திற்கு தாய்க்குலம் எது காராளர் குலம். அதாவது உழவர் குலம். உழவர் குலத்தை கோதில் குலம் என்கிறார். குற்றமில்லாத குலம் என்கிறார். மற்ற குலம் கோதுடைய குலம் என்பதை சொல்லாமல் சொல்கிறார். எண்ணிப் பாருங்கள் இன்று தாயனைய குலம். கோதில் குலம் எந்த நிலையில் இருக்கிறது. உணவளிக்கும் குலம் தாய்க்குலம் தான். ஒவ்வொரு மனிதனுக்கும் அற உணர்வும், ஆளுமைத் தன்மையும் நேர்மைப்பண்பும், உழைப்பும், அடிப்படைக் குணங்கள். இதில் உழைப்பு உயிர் போன்றது. மற்றவை உடல் உறுப்புகள் போன்றவை. உழைப்பையே மூலதனமாகக் கொண்ட உழவன், மருதன், மன்னன், ஆனால் காலப்போக்கில் ஆரியத்தால் , ஆவணத்தால் வீழ்ந்தான். உழவர்கள் வள்ளுவரால், கம்பரால் எழுதுவார்கள். தாயாவான், தலைவன் ஆவான். ஆளும் தலைமுறைத் தோன்றும். அவர்களுக்கு ‘கதி’ கம்பனும், வள்ளுவனும் என்பது தான் காலம் காட்டும் உண்மை. கோதில் குலம், கோவந்தன்  ஆக வேண்டும்.





0 கருத்துரைகள்: