Thursday 31 December 2009

கியூபாவில் இயற்கை வேளாண்மை

கியூபாவில் இயற்கை வேளாண்மை

சி. நெடுஞ்செழியன்


1959ல் ஏற்பட்ட கியூபா புரட்சியிலிருந்து 1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் கூடிய வணிக உறவுகள் முறிவடையும் வரை, கியூபாவில் வேளாண்மையானது மூலதனம் அதிகமான, அதிகளவில் ஓரின பயிர் வளர்க்கும் விதமாக இருந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் காரணமாக கியூபா வியாபாரத்தில் பெட்ரோலிய பொருட்கள், தொழிற் கருவிகள் மற்றும் வேளாண்மைக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி கொல்லி போன்ற இடு பொருட்களுக்காக சோசலீச நாடுகளை சார்ந்து இருந்தது.

1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் இருந்து வணிக உறவுகள் முறிந்தால் உணவு இறக்குமதி 50%க்கும், பூச்சிகொல்லிகள் 60%மும், உரம் 77%ம், வேளாண்மைக்குத் தேவையான பெட்ரோலிய பொருட்கள் 50% வீழ்ச்சியடைந்தன.இதனால் வேளாண் நிர்வாகம் இரண்டு விதமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. குறைந்த விவசாய உள்ளீடுகளை கொண்டு இருமடங்கு வரை உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று. அதே நேரத்தில் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் ஏற்றுமதி உணவு பயிர்களின் உற்பத்தி குறையாமல் இருக்க வேண்டியதாகியது.

இதன் விளைவாக கியூபாவில், அதிக உள்ளீடு விவசாயத்திலிருந்து, இயற்கை வேளாண்மைக்கு பெருமளவில் திரும்ப வேண்டயிதாயிற்று. பொதுவாக இவ்வாறு இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால் முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் பிடிக்கும். வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மட்டும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும். ஆனால், கியூபாவால் இந்த கால அவகாசத்திற்காக காத்திருக்க இயலாது. இதனால் கியூபாவின் அறிவியலறிஞர்களும், திட்டமிடுபவர்களும், புதிய வழிமுறைகளை, இயற்கை வேளாண்மையில் புகுத்தி இந்த கால அளவை குறைக்க முயன்றனர்.

கியூபா வேளாண்மையில் ஓரினப்பயிர் வளர்ப்பு முறைக்கு மாற்றாக பல்வகைப் பயிர் வளர்க்க முயன்றனர். வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும், வேதியல் பூச்சி கொல்லிகளுக்கு பதிலாக உயிரியல் பூச்சி கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. டிராக்டர்களுக்கு பதிலாக கால்நடைகளை கொண்டு உழுதனர். நீர் பாசனத்தை நம்பினால் பருவ காலங்களில் பெய்யும் மழையின் அளவை கணக்கில் கொண்டு அதற்கேற்ற வகையில் பயிர் செய்ய முற்பட்டனர். விவசாயத்தில் உள்ளூர் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டியதால், அவர்கள் நகரங்களுக்கு வெளியேறுவது வெகுவாக குறைந்தது.

நவீன வேளாண்மையால் உற்பத்தியான அளவை அடைய, பாரம்பரிய இயற்கை வேளாண்மை மூலம் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதற்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும், மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பொருட்களுக்கு நுகர்வோர்களும் கூடுதல் தொகை கொடுப்பவர். இந்த கால கட்டத்தில், மண் வளம் பாதுகாக்கப் படவேண்டும்.

மற்ற நாடுகளில், நவீன வேளாண்மையின்றி, பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்பது ஏதாவது, சில பகுதிகளில் நடக்கும். ஆனால் கியூபாவில் நாடு முழுவதுமே இயற்கை வேளாண்மைக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. பயிர் பாதுகாப்பிற்காக கியூபாவில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறை கடைபிடிக்கப்பட்டது. பூச்சிகளை கட்டுப்படுத்த பெருமளவில் உயிரியல் பூச்சி கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர் தேவைகளுக்காக மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும், அரசு பண்ணைகளும் இவற்றை உற்பத்தி செய்தன. மேலும் மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப்படுத்த நுண்ணியிரிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. களைகளை கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறை கடைபிடிக்கப்பட்டது.

இயற்கை வேளாண்மை வெற்றி பெறவேண்டுமானால் மண், நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும். கியூபாவில் நிலம் உப்புத்தன்மையாக மாறுவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் மண் அரிமானம், உயிரியல் பொருட்கள் குறைவது கட்டுப்படுத்தப்பட்டது. மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும், பயிர் சுழற்சி மூலம் கிடைக்கும் தாவர உரங்களை பயன்படுத்தியும், வீடுகளிலிருந்து பெறப்படும் கழிவுகளை கொண்டு கம்போஸ்ட் உரம் தயாரித்தும், மண் புழுவை உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரிக்க உபயோகப்படுத்தினர். கியூபாவில் பயன்படுத்திய இயற்கை உரங்கள் உலகத்திலேயே எங்கும் இல்லாத அளவிற்கு பயன்படுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் விளை நிலங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பயிர் வகைகள் ஊடுபயிராக செய்யப்பட்டன. பாரம்பரியமாக கியூபா விவசாயிகள் ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்துவருபவர்கள். எ.கா. சோளமும், பீன்சும், காபியுடன் வாழையும் பயிரிட்டனர்.

கியூபாவில் மண்வள மேம்படுத்தலில் காடு வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்பானியர்கள் கியூபாவிற்கு வந்த பொழுது, கியூபாவில் 80% காடுகளாக இரந்தது. 1959 புரட்சியின் போது, அந்நாட்டில் 18% தான் காடுகள் இருந்தது. ஆனால் புரட்சிக்கு பிறகு, காடு வளர்ப்பிற்கும், நில அரிப்பை தடுப்பதற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1970களில் சமூக மரக்கன்று, பண்ணைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. அதன் குறிக்கோள் என்னவெனில் விதைகளை சேகரித்து, நாற்றுகள் வளர்த்து, அவற்றை கிராமப்புறங்களில் நடுவது என்பதாகும். 1989 - 1990ல் 2,00,000 எக்டேர் நிலங்களில் காடுகள் வளர்க்கப்பட்டன. இன்று காடுகளின் அளவு 18% அதிகமாக உள்ளது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் காடுகளின் அளவு விரைவாக குறைந்து வருகிறது. கியூபா விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறையும் அவர்களது அறிவையும், தற்பொழுதுள்ள அரசு விவசாய தொழில் கலைஞர்களின் புதிய முறைகளையும் இணைத்தது, இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இதற்கான கியூபா பெரும் முயற்சி எடுததுக் கொண்டது.

லத்தீன் அமெரிக்க மக்கள் தொகையில் 2% முள்ள நாடு கியூபா, ஆனால் விஞ்ஞானிகளில் 11%மும் நல்ல ஆராய்ச்சி பின்புலமும் கொண்ட கியூபாவில் அரசு இதனை முனைப்புடன் நடத்தியது. இதற்காக 1982ல் மாற்று விவசாயம் என்பது இயக்கமாக மாறியது. இதனால் இந்நாள் வரை உபயோகிக்கப்படாத ஆராய்ச்சி முடிவுகள், உடனுக்குடன் விவசாயிகளை சென்றடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூர் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை நடைபெற்றது. இதனால் இதன் பயனை கியூபா மக்கள் 1989 - 1990ல் பெற முடிந்தது.

பாரம்பரிய முறை விவசாயம் செய்ய அதிக ஆட்கள் தேவை. இயந்திரங்களுக்கு பதிலாக கால்நடையை உபயோகிக்கும் போது, மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதற்காக கிராமப்புறங்களில் வேலை செய்ய விருப்பத்துடன் வரும் நகரமக்களுக்காக, தற்காலிக தொழிலாளர் குடில்கள் கட்டப்பட்டன. இவ்வாறு தற்காலிகமாக வருபவர்கள் 15 நாட்கள் வேலை செய்து விட்டு தங்கள் நகரங்களுக்கு திரும்பி விடுவார்கள். 1991ல் முதல் முறையாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது ஹவானா நகரத்தில் 1,46,000 பேர் கிராமப்புற வேலையில் பணிபுரிந்தனர்.

இரண்டு வருடம் வேலை செய்ய ஒரு தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் ஒவ்வொருநாளும் 12 மணி நேரம் வேலை செய்தனர். இவர்களை ஊக்குவிப்பதற்காக, ஆசிய விளையாட்டின் போது கட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம் போன்ற பெரிய வீட்டு வசதி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு வசிப்பவர்களுக்கு மருத்துவ வசதி, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வசதிகள் போன்ற வசதிகளும் அளிக்கப்பட்டன. இரண்டாண்டு வேலை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது.

அரசு நிலங்கள் சிறு, சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொழிலாளர் பொறுப்பில் அளிக்கப்பட்டது. இதில் அதிகமான விளைச்சலை பெறும் குழுக்களுக்கு ஊக்க பரிசு அளிக்கப்பட்டது. இதனால் விளைச்சல் இருமடங்காகியது. தற்பொழுது வாழை மற்றும் எலுமிச்சை பயிர்களில் இம்முறை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிபவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பதாகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும் டர்கிளோ திட்டம் எனும் முறையில், இராணுவ சேவை முடிந்தவுடன் எல்லா இளைஞர்களும் விவசாயத்தில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்பதாகும். இதன் மூலம் இளைஞர்களுக்கு கிராமப்புற சூழ்நிலையில் ஈர்க்கப்பட்டு அவர்கள் நகரப்புறங்களிலிருந்து வெளியேறி கிராமப் புறங்களில் தங்க வாய்ப்பு ஏற்படும்.

***********

உணவு பயிர்களுக்காக கியூபா வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று, எனவே உணவு தற்சார்புடைய 1989ல் தேசிய உணவு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி உணவுபயிர்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிக அளவில் பெருக்குவதற்கு முன்னுரிமை தரப்பட்டது. மேலும் ஹவானாவை சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களை சாராமல், தற்சார்புடையதாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது.

நகரங்கள் உணவுப் பொருட்களுக்காக கிராமப்புறங்களை சார்ந்திருந்ததால் அதிக செலவு ஏற்பட்டது. எ.கா. கிராப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, கனிகளை குளிர்பதனப்படுத்தவும், சேமித்து வைக்கவும், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்திற்கும் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இப்பிரச்சனையை சமாளிக்க நகரங்களிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு மனித வளமே தேவை, பெரிய இயந்திரங்கள் தேவையில்லை.

கியூபாவின் உணவில் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் குறைவாக இருப்பதால், நகரத்தில் உள்ள தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும். சிறிய தோட்டங்களில், பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுவதால், தாவர நோய்கள் மற்றும் நச்சு பூச்சிகள் வராமல் தடுக்க முடியும். கடைசியாக, நகர தோட்டங்களினால் உணவு பிரச்சனையை ஒரு தனிநபரே தீர்த்துக்கொள்ள முடியும். இதற்கு அரசாங்கத்தை எதிர்நோக்க தேவையில்லை.

நகர தோட்டங்கள் கியுபாவில் மூன்று வகைகளாக இருந்தன. முதல் தனியார் நிலத்தில் தனி நபர் அல்லது குடும்ப தோட்டம். இரண்டு அரசு நிலத்தில் கூட்டுறவு மூலம் பயிர்செய்வது மூன்று அரசு தோட்டங்கள். முதல் வகையான தோட்டத்தில், தனி நபர் அல்லது குடும்பம் பயிர் செய்வது அவர்களது உபயோகத்திற்கு போதுமானதாக இருக்கும். பயிர்செய்ய தேவையான இடு பொருட்களை அவர்களே தயாரித்துக் கொண்டனர். விதைகளை அரசு நிறுவனங்களிடமிருந்து பெற்றனர். இரண்டாவது வகையான தோட்டங்கள் என்பது, பொது நிலங்களில் மக்கள் அமைப்புகள் (பெண்கள் குழு, வட்டாரக் குழுக்கள்) பயிரிட்டன. பொது நிலங்கள் உபயோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பின் இக்குழுக்கள், என்ன பயிரிடுவது? எப்பொழுது பயிரிடுவது? என்பதை தீர்மானித்தனர். பயிர்செய்ய தேவையான இடுபொருட்களை இவர்களே தயாரித்துக் கொண்டனர். மூன்றாவது வகையான தோட்டங்கள், பள்ளிகள், தொழிற்கூடங்கள் போன்ற நிறுவனங்களினால் பயிர் செய்யப்பட்டன. இதில் பங்கேற்பவர்கள் வேலை நேரம் என்ன பயிரிடுவது? போன்ற பொறுப்புகளை தீர்மானித்துக் கொண்டனர். இதிலிருந்து உற்பத்தியாகும் விளைபொருட்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன. மற்ற வகைகளில் உற்பத்தியாகும் பொருட்களை அவர்களது வீட்டு உபயோகத்திற்காக எடுத்து சென்றனர்.

நகரத்தில் வசிப்பவர்களுக்கு கூட வேளாண்மை பற்றிய பொது அறிவு இருந்தது. ஏனெனில் கியூபா புரட்சியின் போது வேளாண் தொழில் மற்றும் உணவு உற்பத்தியுடன், மக்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். கியூபா தேசிய தலைவரான ஜோஸ் மார்ட்டியின் தத்துவப்படி, தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை பற்றி அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். எனவே கியூபா இளைஞர்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது, அவர்களது பாடதிட்டத்தின் ஒரு அம்சமாக, கிராமப்புரங்களுக்குச் சென்று, விவசாயத்தை ஒரு பாடமாக பயின்றனர். மேலும் அநேக கியூப மக்கள் ஆண்டிற்கு இரண்டு வாரம் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாய வேலையில் ஈடுபட்டனர். வாரத்திற்கு இருமுறை தொலைக்காட்சியில் இயற்கை வேளாண்மை பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டன.காகித தட்டுப்பாடு நிலவுவதால், தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதால் அது பலரை சென்றடைய உதவிகரமாக இருந்தது.

இவ்வாறு மிகப்பெரிய அளவில் கியூபாவில் இயற்கை வேளாண்மைக்கு மாறாமல் இருந்திருந்தால், சோமாலியாவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை நிலைதான் கியூபாவிலும் ஏற்பட்டிருக்கும். கியூப அரசாங்கத்தின் நீண்ட கால திட்டத்தினால் மனித வளமும் அதிகரித்து, அறிவியல் பூர்வமான விவசாயம் செய்யும் அறிவும் அதிகரித்ததால் மாற்று விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. கீழ் சமூகத்தில் திறம்பட ஒருங்கிணைந்து செயல்பட்டதால், குறைவான வளங்களை கொண்டு அதிக அளவு உணவு உற்பத்தி செய்ய முடிந்தது. இதனால் வெளியிலிருந்து உணவு இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.

இயற்கை விவசாயம் செய்யும் பொழுது, விவசாயி அல்லது தோட்டத்தை நிர்வகிப்பவர், நிலத்துடனான உறவு நெருக்கமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மண்ணின் ஒவ்வொரு தரம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எந்த இடத்தில் உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. எங்கு நில அமைப்பு மோசமாக உள்ளது, எப்பக்கத்திலிருந்து நச்சு பூச்சிகள் நுழையும், எங்கு எறும்பு புற்றுகள் உள்ளன என்பன போன்றவற்றை தெரிந்து இருக்க வேண்டும். சோசலிச பிளாக்குடன் கொண்டிருந்த வணிக உறவு முறிவுற்ற நிலையில், கியுப மக்கள் அதிக தொல்லைகளுக்கும், உணவு பற்றாக்குறைக்கும் ஆளாயினர். ஆனால் இயற்கை விவசாயத்திற்கு மாறியதன் மூலம் அவர்கள் இந்த சவாலை சமாளித்தனர். இத்தகைய மாற்றுவிவசாயம் அவர்களது முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகின் மற்ற பகுதிகளில் இயற்கை விவசாயம் கொள்கை அளவில் உள்ளது. இந்த இருபது ஆண்களில் இயற்கை விவசாயத்தில் கியூபா மக்கள் மேற்கொண்ட நடவடிக்கை பிரமிக்கும் படி உள்ளது. விவசாய பண்ணைகளில் விவசாயிகளின் குழந்தைகள் நச்சுத்தன்மையான பூச்சிகொல்லிகளுக்கும், வேதியல் உரங்களுக்கும் இடையில் உலாவிய நிலைமாறி இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.

பிடல்காஸ்ட்ரோயின் உழைப்பு (வியர்வை) மற்றும் அறிவின்மூலம் அற்புதம் நிகழ்த்துவோம் என்ற சூளுரைக்கேற்ப அவர்கள் உழைப்பது வரவேற்கத்தக்கது. அவர்களது செயல்பாடுகள் அவர்களது நாட்டில் பசியால் வாடும் மக்களுக்கு மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையால் வாடும் மற்ற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மானிட சரித்திரத்தில், நவீன நச்சு, பசுமை புரட்சி வேளாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. நாம் கீழ்மக்களின் வெற்றி, தோல்விகளிலிருந்து படிப்பினை மேற்கொண்டு, நாமும் இயற்கை வழி வேளாண்மைக்கு திரும்புவோம். இதன்மூலம் புதிய பொருளாதார அமைப்பு ஏற்படுத்துவோம்.

**********

2006ல் அனைவரும் சுற்றுச் சூழல் என்று ஏ.சி. அறையில் அமர்ந்து அதனை விவாதித்து புராஜக்ட்களாக மாற்றி கோடிகளாக உருமாற்றிக் கொண்டிருக்க, 20 வருடங்களுக்கு முன்பே அதனைப் பற்றியும் அதனை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடம் அவர்கள் மொழியில் பேசிக் கொண்டிருந்தவர்.

மனித உரிமை என்பதை இன்று மேல்தட்டு மனிதர்களுடையதாகவும், அதனை கருத்தரங்குகளில் பேசுவதற்கும், ரிப்போர்ட் அனுப்பி டாலரைப் பெறுவதற்கும் மட்டும் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்திய தலைவராக இருந்தாலும் மாட்டுவண்டி கட்டி குக்கிராம மக்களிடமும் சென்று மனித உரிமை பற்றி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர்.

உலகமயமாக்கல் இன்று அனைவரின் வாழ்வாதாரத்தையும் நெறித்துக் கொண்டிருக்க இருபது ஆண்டுகளுக்கு முன்பே அதுபற்றி மக்களை வெளியீடுகள் மூலம் வலியுறுத்தியவர். யாருக்கும் உபயோகமில்லாத கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டு விட்டாலே அதன்பின்பு தங்களுக்குள் நாயே பேயே என்று அடித்துக் கொண்டும் தங்களைத் தாங்களே திட்டிக் கொண்டும் அறிவுக் கொழுப்பெடுத்து மமதையில் பேசித் திரியும் தற்போதைய எழுத்தாளர்கள் மத்தியில், சுற்றுச் சூழல், உலகமயமாக்கல் வேளாண்மை என்று நூற்றுக்கணக்கான மக்களுக்கான புத்தகங்களை மொழி பெயர்த்தவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதவர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர்.

சி.நெடுஞ்செழியன் நமது விழிப்புணர்வு இதழின் முதல் வாசகனும், சரியாத விமர்சகரும், நம்மை விட இதழின் வளர்ச்சியில் தீவிர ஆர்வமும் உடையவர். மாணவர்களையும் விழிப்புணர்வு இதழின் ஒவ்வொரு பக்கத்தையும் செழுமைப் படுத்தியவர். ஆனால் அவர் இன்று நம்மிடம் இல்லை. அவரது நினைவுகளும், அவர் உருவாக்கித் தந்த தொடர்புகளும் மட்டுமே இன்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.

அவரது மரணத்தின் வெறுமை மாணவர்கள் அனைவருக்கும் தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.





முன்னோடி இயற்கை விவசாயிகள்

முன்னோடி விவசாயிகள்
╬ உயிர்ச் சுழல் வேளாண்மை ஆய்வு மற்றும் விரிவாக்கப் பணிகள்
" சட்டையில்லா " சாமியப்பன்
வாரணாசிபாளையம்
திருப்பூர்
94872-23890
╬ மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்
மது.ராம கிருஷ்ணன்
பொருளாளர்
கோவை மாவட்டம்
94424-16543
╬ முள் இல்லா மூங்கில்
பாலசுப்ரமணியன்
உடையார்கோவில்
தஞ்சாவூர்
94864-08384

╬ முன்னோடி இயற்கை விவசாயி மற்றும் பயிற்றுநர்
அரச்சலூர் செல்வம்
94436-63562
╬ முன்னோடி இயற்கை விவசாயி
பொன்னுசாமி
பவனமங்கலம்
திருக்காட்டுபள்ளி
தஞ்சாவூர்
98650-60630
╬ முன்னோடி இயற்கை விவசாயி
சிவசாமி
99947-98312
╬ வீட்டுத் தோட்ட ஆலோசகர்
இந்திர குமார்
ஹோம் எக்ஸ்னோரா
ஈரோடு
99410-07057
╬ அன்னாசி விவசாயி
ராஜ ரீகா
98655-82142
╬ வான்கோழி பண்ணையாளர்
ராஜாமணி
தேனி
99526-79788
╬ மூலிகை வீட்டுத்தோட்டம்
கண்ணம்மாள் ஜெகதீசன்
கே.கே.புதூர்
கோயமுத்தூர்
93658-44328
╬ பாகற்காய் மற்றும் முருங்கை
கலையரசி
ஓதியத்தூர்
சேலம்
93642-33264
╬ திருமதி.ராஜாரீகா
ராசி இயற்கை பண்ணை
முத்துப்பட்டி
கலசல், அ.சிறுவயல்
சிவகங்கை.
rajareega@rediffmail.com
09865582142
╬ டாக்டர் கே.நடராஜன்

தலைவர், கிராமப்புற சமுதாய செயல்மையம்,
ஆர்.எஸ். மருத்துவமனை வளாகம்,
கொடுமுடி
ஈரோடு-638 151
04204-222369, 222469
╬ கோவர்த்தன் அறக்கட்டளை

6, வடக்கு ஆஞ்சனேயர் கோவில் தெரு,
மாருதி நகர்,
ராஜகீழ்ப்பாக்கம்,
சோலையூர்,
சென்னை-600073
044-22272618.
╬ நீலசம்பத்

முகவரி: திருக்குறள் பண்ணை, 40, மேல் தெரு,
தக்கோலம் - 631 151
04177-246448
╬ கரும்பு விவசாயி
D. பரணி, கோத்தகுடி, கோமல், மயிலாடுதுறை

கருத்துகளை இங்கே கேட்கவும்
╬ கோக்கோ விவசாயி
சுரேஷ், திண்டுக்கல்
98421-25699
╬ பட்டு பூச்சி வளர்ப்பு
சந்திரன்,
எருமபட்டி,நாமக்கல்
94439-46667
╬ பட்டு பூச்சி வளர்ப்பு
நடராஜன்,
எருமபட்டி,நாமக்கல்
94865-40238

முன்னோடி இயற்கை விவசாயிகள்

முன்னோடி விவசாயிகள்
╬ உயிர்ச் சுழல் வேளாண்மை ஆய்வு மற்றும் விரிவாக்கப் பணிகள்
" சட்டையில்லா " சாமியப்பன்
வாரணாசிபாளையம்
திருப்பூர்
94872-23890
╬ மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்
மது.ராம கிருஷ்ணன்
பொருளாளர்
கோவை மாவட்டம்
94424-16543
╬ முள் இல்லா மூங்கில்
பாலசுப்ரமணியன்
உடையார்கோவில்
தஞ்சாவூர்
94864-08384

╬ முன்னோடி இயற்கை விவசாயி மற்றும் பயிற்றுநர்
அரச்சலூர் செல்வம்
94436-63562
╬ முன்னோடி இயற்கை விவசாயி
பொன்னுசாமி
பவனமங்கலம்
திருக்காட்டுபள்ளி
தஞ்சாவூர்
98650-60630
╬ முன்னோடி இயற்கை விவசாயி
சிவசாமி
99947-98312
╬ வீட்டுத் தோட்ட ஆலோசகர்
இந்திர குமார்
ஹோம் எக்ஸ்னோரா
ஈரோடு
99410-07057
╬ அன்னாசி விவசாயி
ராஜ ரீகா
98655-82142
╬ வான்கோழி பண்ணையாளர்
ராஜாமணி
தேனி
99526-79788
╬ மூலிகை வீட்டுத்தோட்டம்
கண்ணம்மாள் ஜெகதீசன்
கே.கே.புதூர்
கோயமுத்தூர்
93658-44328
╬ பாகற்காய் மற்றும் முருங்கை
கலையரசி
ஓதியத்தூர்
சேலம்
93642-33264
╬ திருமதி.ராஜாரீகா
ராசி இயற்கை பண்ணை
முத்துப்பட்டி
கலசல், அ.சிறுவயல்
சிவகங்கை.
rajareega@rediffmail.com
09865582142
╬ டாக்டர் கே.நடராஜன்

தலைவர், கிராமப்புற சமுதாய செயல்மையம்,
ஆர்.எஸ். மருத்துவமனை வளாகம்,
கொடுமுடி
ஈரோடு-638 151
04204-222369, 222469
╬ கோவர்த்தன் அறக்கட்டளை

6, வடக்கு ஆஞ்சனேயர் கோவில் தெரு,
மாருதி நகர்,
ராஜகீழ்ப்பாக்கம்,
சோலையூர்,
சென்னை-600073
044-22272618.
╬ நீலசம்பத்

முகவரி: திருக்குறள் பண்ணை, 40, மேல் தெரு,
தக்கோலம் - 631 151
04177-246448
╬ கரும்பு விவசாயி
D. பரணி, கோத்தகுடி, கோமல், மயிலாடுதுறை

கருத்துகளை இங்கே கேட்கவும்
╬ கோக்கோ விவசாயி
சுரேஷ், திண்டுக்கல்
98421-25699
╬ பட்டு பூச்சி வளர்ப்பு
சந்திரன்,
எருமபட்டி,நாமக்கல்
94439-46667
╬ பட்டு பூச்சி வளர்ப்பு
நடராஜன்,
எருமபட்டி,நாமக்கல்
94865-40238

ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!
உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!


தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் த ங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உல கின் பல பகுதி களில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட் டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்...

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்றுவிடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

விவசாயம்:இன்றையநிலை

இந்திய விவசாயம் இன்று ஒரு கடும் நெருக்கடியில்சிக்கித்தத்தளிக்கிறது. விசம்போல் ஏறிவரும் இடுபொருள்களின் விலை உயர்வு ஒருபுறம், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காதது மறுபுறம் ! உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காதது இன்னொருபுறம் என பல்முனை தாக்குதல் நடத்துவதால் அவன் தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறான்! கடந்த ஆண்டில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்பது பழமொழி! ஆனால் கடன் என்னும் வலையில் சிக்கி கால் பின்னி நீந்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறான் விவசாயி ! அவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது ? பசுமைப் புரட்சி அவனுக்கு இந்த பாதகத்தை தந்தது ! உற்பத்தியை பெருக்க இரசாயன உரங்களை போடுங்கள் என பிரசாரம் செய்தன விவசாய பல்கலைகழகங்கள் ! கடனை வாங்கி பல்கலை கழகங்கள் பரிந்துரைத்ததைக் காட்டிலும் கூடுதலாக கொட்டி பணிவைக் காட்டினான் விவசாயி ! ஆரம்பத்தில் விளைச்சல் அமோகமாக இருந்தது! காலம் செல்லச் செல்ல மண்ணின் உயிர் மெல்ல மெல்ல மறைந்தது ! விளைச்சல் குறைந்தது ! கடன் அவன் குரல்வளையை நெரித்தது ! மண்ணின் மைந்தன் மண்ணுக்கு உரமானான்!

எல்லோருக்கும் சோறு போடுமா இயற்கை விவசாயம்...?

எல்லோருக்கும் சோறு போடுமா இயற்கை விவசாயம்...?

இன்றைக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் 'இயற்கை விவசாயம்' என்பதற்கு ஆதரவான
குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. தமிழகத்தின் வேளாண்துறை செயலாளாராக இருக்கும்
சுர்ஜித் கே. சௌத்ரி கூட, ''அறிவியலும் இயற்கையும் இணைந்த வேளாண்மையே
வெற்றிக்கான வழி'' என்று வழிமொழிகிறார்.



ஆனால், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பல்கலைக்கழக தரப்பிலோ, ''பெருகிக்
கொண்டிருக்கும் மக்கள் தொகையின் உணவுத் தேவையை சமாளிக்க, இயற்கை விவசாயத்தால்
முடியாது. ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி ஆகியவற்றை பயன்படுத்தி அறிவியல்
பூர்வமாக செய்துவரும் விவசாயத்தின் மூலமும், மரபணு மாற்றுப்பயிர்களை
பயிரிடுவதன் மூலமும்தான் அது சாத்தியம். இயற்கை விவசாயம் என்பதும் ஒரு
தொழில்நுட்பம். அதைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை'' என்று அடித்துச்
சொல்கிறார்கள்.

இந்தச் சூழலில், 'உணவு உற்பத்தி என்பது போதுமான அளவுக்கு இருக்கிறது. ஆனால்,
அதை பங்கிட்டுக் கொடுப்பதற்கு மனதுதான் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு,
செயற்கையான ரசாயன விவசாயத்துக்கு பலரும் வால் பிடிக்கிறார்கள்' என்று
விளாசுகிறார் கட்டுரையாளர். அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் நிச்சயமாக யோசிக்க
வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை!

*பெருகி வரும் மக்கள் தொகையைச் சமாளித்து, இத்தனை மக்களுக்கும் எப்படி
சோறிடுவது...?'*

-இன்று உலகெங்கும் உள்ள விவசாய அறிஞர்கள், ஆட்சியா ளர்கள், அதிகாரிகள்,
அரசியல்வாதிகள், பொதுநலவாதிகள் மற்றும் உணவுத்துறை நிபுணர்கள் முன்பாக
விஸ்வரூபமெடுத்து நிற்கும் ஒரு கேள்வி இது.

புதிதாக விளைநிலங்கள் உருவாக்க இனி வழியில்லை. காடுகள் அழித்து கழனிகள்
ஆக்குவது இனி முடியாது. மாற்றத்தக்க நிலம் அனைத்தையும் கிட்டத்தட்ட
விளைநிலமாக்கி விட்டோம். ரசாயன உர பயன்பாடு காரணமாக இப்போது, விளைச்சலின்
அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருக்கிற விளைநிலங்களும் களர் மற்றும்
உவர் மண் பிரச்னைகளால் பாழ்பட்டு வருகின்றன. காடு அழித்தல், விளைநிலம்
கெடுத்தல் காரணமாக பாழ்நிலமாதலின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே
போகிறது. நமக்கு இருக்கும் ஒரே வழி, ஏற்கெனவே இருக்கின்ற விளைநிலத்தில் அதிகம்
விளைவிக்க வேண்டும் என்பதுதான்.

இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, ''உலகின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய
விவசாயத்தில் மேலும் புதிய தொழில்நுட் பங்களைப் பயன்படுத்த வேண்டும். மரபணு
மாற்றுத் தொழில்நுட் பம்தான் ஒரே வழி, இரண்டாவது பசுமைப் புரட்சி தான் ஒரே
தீர்வு'' என்கிறார்கள் 1960-களில் நிகழ்த்தப்பட்ட முதலாம் பசுமைப் புரட்சியின்
ஆதரவாளர்கள்.

ஆனால், இவர்களின் ஆதரவு, விதைக் கம்பெனிகளுக்கும் உரக் கம்பெனி களுக்கும்தான்
லாபத்தைக் கொடுக்கும் என்பதற்கு கடந்த நாற்பதாண்டு கால இந்திய விவசாயமே சான்று.
நிச்சயமாக விளைச்சல் அதிகரிக்கப் போவதில்லை. இப்போது இவர்கள் தூக்கிப் பிடிக்க
ஆரம்பித்திருக்கும் மரபணு மாற்றுப் பயிர்கள், விளைச்சலை அதிகரிக்க வந்தவையல்ல.
''புழு மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற மட்டுமே மரபணு
மாற்றுப்பயிர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விளைச்சலை அதிகப் படுத்தும் தந்திரம்
எதையும் அதற்குள் புகுத்த வில்லை'' என்று இவ்விதைகளை உருவாக்கிய கம்பெனிகளே
சொல்கின்றன.

அப்படியிருக்கும்போது, ''உலகப்பசியைப் போக்க, மரபணு மாற்று தொழில்நுட்பம்
மட்டுமே தீர்வு என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?'' என்றொரு கேள்வி
எழுகிறது.

உடனே, ''பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி உருவாக்கப்பட்ட ரசாயன விவசாயத்
தாலும், மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தாலும் கூட எல்லோருக்கும் சோறுபோட
முடியாது எனும்போது, அறிவியல் சார்ந்த ஆய்வுகளின்றி வழிவழியாக
பின்பற்றப்பட்டுவரும் இயற்கை விவசாயத்தால் எல்லோருக்கும் சோறு போட்டுவிட
முடியுமா?'' என்று எதிர்கேள்வி நிச்சயமாக எழும்.

*மண்ணைக் கெடுக்காதீர்கள்!*

எல்லோருக்கும் உணவு எனும்போது... நாட்டில் எவ்வளவு விளைநிலம் உள்ளது... அதன்
இன்றைய தரம் என்ன... எவ்வளவு விளைகிறது... எவ்வளவு அதிகம் விளைவிக்க முடியும்?
என்று பல்வேறு துணைக்கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டாகவேண்டும்.

விளைநிலத்தை அதிகரிக்க முடியாத நிலையில் தற்போதிருக்கும் ஒவ்வொரு சதுர அடி
நிலமும் மிக முக்கியமானதாகிறது. பூமிப்பரப்பில் சுமார் 2% மட்டுமே விளைநிலம்.
அதாவது, ஒரு ஆப்பிள் பழத்தை நமது பூமி உருண்டையாக நினைத்து அதை 100 சம
துண்டுகளாக்குவோம். அதில் 2 துண்டுப் பகுதிதான் விளைநிலம். விளைச்சலை முடிவு
செய்வது, அந்நிலத்தின் உயிரோட்டமுள்ள மேல்மண் பகுதியே. பொதுவாக இதன் அளவு அரை
அடி முதல் 1 அடி ஆழம் வரையே. இதிலிருந்துதான் உலகில் தற்போது வாழ்ந்து
கொண்டிருக்கும்... நாளைக்கு பிறந்து வாழப்போகும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும்
தேவையான உணவை விளைவிக்கவேண்டும்.

இவ்வளவு முக்கியமான மேல்மண்ணை இப்போது நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்? 10
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் விவசாயத்தில் சிதையாமல் இருந்த
விளைநிலத்தை, கடந்த 50 ஆண்டுகால பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயம் பெருமளவு
பாதித்துவிட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

கடந்த 35 ஆண்டு காலமாக 'உயர் விளைச்சல் உயிரியல் பண்ணை மாதிரி' என்பதை நடத்தி
வரும் ஜான் ஜீவன்ஸ் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி, இந்த மண்ணிலிருந்து நமக்குக்
கிடைக்கும் ஒவ்வொரு கிலோ உணவும் எப்படி வருகிறது என்பதை விளக்குகிறார்.

'அமெரிக்காவில் இயந்திரமய ரசாயன விவசா யத்தின் மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு
கிலோ உணவும் 6 கிலோ மண்ணின் உயிர்த் தன்மையை அழித்து விளைகிறது. அமெரிக் காவின்
மாதிரியைப் பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ 12 கிலோ மண்ணின் உயிர்த்தன்
மையை அழித்து 1 கிலோ உணவு பெறப்படுகிறது. அமெரிக்காவின் விவசாய முறையை அப்படியே
கடைப்பிடிக்கும் சீனத்தில் 18 கிலோ அழிக்கப்பட்டு 1 கிலோ விளைவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் இயந்திர வழி இயற்கை விவசாயத்தில் 3 முதல் 5.5 கிலோ மண்ணில் உள்ள
உயிர்த்தன்மை அழிக்கப் பட்டு 1 கிலோ உணவு பெறப்படுகிறது' என்கிறார்.

பயிர்களை விளைவிப்பதற்காக மேல் மண்ணின் உயிர்த்தன்மையை அழித்திடும் இத்தகைய
தொழில்நுட்பங்களை இனியும் தொடர்ந்தால்... விளைநிலங்கள் எல்லாமே பாழ்நிலங்களாகி,
வெறும் தூசுக் குவியல் மட்டுமே மிஞ்சும். பாழ் பட்ட நிலத்தில் எருக்கும்,
ஊமத்தையும், பாதாள மூளியும்தான் வளருமே ஒழிய பயிர்கள் வளர்வது கடினம். மண்ணின்
உயிர்த்தன்மையை அழிக்காத, மேல்மண்ணைத் தொடர்ந்து மேம்படுத்தும் பல வகை இயற்கை
விவசாய முறைகள் மட்டுமே இப்பூமிப் பந்தையும் அதிலுள்ள ஜீவராசிகளையும்
காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இத்தகைய முறைகள் இப்போது புழக்கத்தில் உள்ளன.

*'தழைச்சத்துக்கு எங்கு செல்வது... மணிச்சத்து எங்கே கிடைக்கும்?'*

'இயற்கை வழி விவசாயம்' என்றதுமே ஒரு சிலர் பெருத்தக் குரலில் கூப்பாடு
போடுகிறார்கள். ''தேவைப்படும் தழைச்சத்துக்கு எங்கு செல்வது... மணிச்சத்து
எங்கே கிடைக்கும்'' என்பது போன்ற வாதங்களையும் சர்ச்சைகளையும்
எழுப்புகிறார்கள். ஆனால், கடந்த பல ஆண்டு காலமாக இயற்கை வழி விவசாயத்தின் மூலம்
உயர்விளைச்சல் கண்டோரின் பட்டியல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ''இயற்கை வழி
விவசாயத்தில் அதிகம் விளைகிறது... தரமானதாக விளைகிறது'' என்று அந்த விவசாயிகள்
எல்லாம் உரக்கக் கூறுகிறார்கள். அதையெல்லாம் கண்கூடாகக் கண்ட பின்பும், இந்த
சர்ச்சையாளர்கள் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

'உள்ளூர் சரக்கு சரியானதாக இருக்குமா?' என்ற ஒரு வகைத் தாழ்வுணர்வு எப்போதும்
இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல... எதுவாக இருந்தாலும் படித்தவர்கள்
சொன்னால்தான் நம்பவேண்டும் என்ற பிடிவாத குணமும் மேலோங்கி நிற்கிறது. மேலை
நாட்டினர், வெள்ளைத் தோலுடையவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்ற அபத்தமும்
அதிகமாக இருக்கிறது. அத்தகையோருக்காக... இதோ மேலும் சில உதாரணங்கள்....

*வெள்ளைத்தோலே விளக்குகிறது...!*

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பலகாலமாக தீவிர இயற்கை விவசாயம் செய்பவர். ஐ.நா.
சபையின் உணவு மற்றும் உழவு அமைப்பின் ஆய்வை முன்னே வைக்கிறார். அவர் சொல்வது
இதுதான்-

* பொலிவியா நாட்டில் இயற்கை வழி விவசாயம் மூலம் ஹெக்டேருக்கு 15 டன்கள்
உருளைக்கிழங்கு விளைவித்துள்ளார்கள். அதற்கு முன்பு ஹெக்டருக்கு 4 டன்கள்
மட்டுமே கிடைத்து வந்தது.

* இயற்கை விவசாயத்தின் மூலம் கியூபாவில் காய்கறிகளின் விளைச்சல் இரு மடங்கானது.

* பஞ்சத்தில் சிக்கித் தவித்த எத்தியோப்பியாவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கின்
விளைச்சல் ஹெக்டருக்கு 6 டன்னிலிருந்து 30 டன் என்று உயர்ந்தது.

* கென்யாவில் மக்காச்சோள விளைச்சல் ஹெக்டருக்கு 2.25 டன்னிலிருந்து 9 டன் என்று
உயர்ந்தது.

* பாகிஸ்தானில் மாம்பழ விளைச்சல் 7.5 டன் என்பதில் இருந்து 22 டன் ஆக
உயர்ந்தது.

மேற்கண்ட எல்லா இடங்களிலும் ஏதோ 10%, 20% என விளைச்சல் உயரவில்லை 3 மடங்கு
முதல் 6 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டிய அம்சமாகும்.

இவ்வளவு ஏன், நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திராவில் நாகரத்தின நாயுடு ஒற்றை
நாற்று, இயற்கை விவசாயம் மூலம் ஏக்கருக்கு 6,900 கிலோ நெல் விளைவித்துள்ளார்.
இந்தச் சாதனைகளெல்லாம் இயற்கை விவசாயத்தின் மூலம் நடந்தவைதான்.

*அடித்துச் சொல்லும் ஆய்வுகள்!*

எதைச் சொன்னாலும், 'இது பற்றி ஆய்வுகள் நடந்துள்ளனவா... அறிவியல் அடிப்படை
இருக்கிறதா... அதற்கு என்ன ஆதாரம்?' என்ற கேள்விகளை வீசி மடக்கப்
பார்க்கின்றனர் இயற்கை வேளாண் மைக்கு மறுப்பும் எதிர்ப்பும் சொல்லும் கூட்டத்
தினர். அவர்களுக்கென்றே பல்வேறு ஆய்வு முடிவுகளையும் நம்மால் முன்
வைக்கமுடியும்.

*100 கோடி பேர் பட்டினி... 170 கோடி பேருக்கு உடல் பருமன் நோய்! *

மிக்சிகன் பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் குழு, 'உலகம் முழுவதும் இன்றே இயற்கை
விவசாயத்துக்குத் திரும்பினால், விளைச்சல் எப்படியிருக்கும்' என்று ஆராய்ந்து
இரு வகையான விவரங்களைக் கொடுத்துள்ளது. 1. வளர்ந்த நாடுகளில் இயற்கை வழி
விவசாயத்தின் மூலம் இப்போது பெறும் விளைச்சலில் 80% பெற முடியும். 2. வளரும்
நாடுகளில் இந்தியா உள்பட விளைச்சலின் அளவு 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயரும்.
ஆனால், இயற்கை விவசாயத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளன. போதுமான கால்நடைகள்,
ஆட்கள் என்று ஆரம்பக்கட்ட தேவைகளைப் பூர்த்திச் செய்வது முக்கியம் என்று
சொல்லியிருக்கிறது அந்தக் குழு.

சுவிட்சர்லாந்தில் உள்ள இயற்கை வழி விவசாய ஆய்வு நிலையம், கடந்த 21 ஆண்டுகளாக
வடஅமெரிக்கா, ஐரோப்பாவில் நடந்த இரண்டாயிரத்துக்கும் மேலான ஆய்வுகளை
ஆராய்ந்தது. 'உலக உணவு விருது' பெற்ற அமெரிக்கரான பெர் பின்ஸ்ட்ரப் ஆண்டர்சன்
தலைமையிலான குழு, தன்னுடைய ஆய்வின் முடிவில், ''ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்
உள்ள அனைத்து உழவர் களும் இயற்கை வழி விவசாயத்துக்குத் திரும்பினால்,
விளைச்சலின் அளவு இப்போது விளைவதில் 80% இருக்கும்'' என்று சொன்னது.

இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் ஜூலியஸ் பிரட்டி, ராச்சேல்
ஹின் ஆகியோர் வளரும் நாடுகளில் நடப்பில் இருக்கும் 200-க்கும் மேலான இயற்கை வழி
விவசாயத் திட்டங்களை அலசி ஆராய்ந்தனர். இத்திட்டங்கள் 90 இலட்சம் பண்ணைகளில்
7.2 கோடி ஏக்கரில் நடந்தவை. இவர்களது ஆய்வு, எல்லோரும் இயற்கை விவசாயத்துக்கு
மாறினால், இப்போது விளைவதில் 93% விளைச்சலை உலகம் உடனடியாகப் பெறும் என்கிறது.

மத்திய இந்தியாவில் 1,000 பண்ணைகளில் 7,750 ஏக்கரில் இயற்கை வழியில் பயிரிடப்
பட்ட பருத்தி, கோதுமை, மிளகாய், சோயா பீன்ஸ் பயிர்களின் விளைச்சல் ரசாயன
விவசாயத்தை விட 20% அதிகமிருந்ததாக அங்கு நடந்த 7 ஆண்டு ஆய்வுகளின் முடிவுகள்
தெரிவிக் கின்றன.

இந்த ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து, 'வேர்ல்டு வாட்ச் இன்ஸ்ட்டிடியூட்'
2006-ம் ஆண்டில் சில ஆய்வுகளை வெளியிட்டது. இந்த ஆய்வுகளின் ஒட்டுமொத் தமான
முடிவுகள் - 'உலக உழவர்கள் இன்றே இயற்கை வழி விவசாயத்துக்கு மாறினால் வளர்ந்த
நாடுகளில் விளைச்சல் இப்போது பெறுவதில் 80% இருக்கும். வளரும் நாடுகளில் 2.4
மடங்கும் இருக்கும்' என்பதுதான்.

''வளரும் நாடுகள் பரவாயில்லை. ஆனால், வளர்ந்த நாடுகளில் 20% விளைச்சல் குறைவு
ஏற்படும் என்கிறதே ஆய்வு முடிவுகள். இது உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்துமே?''
என்ற ஐயம் உடனே எழும். உலக மக்கள் தொகையில் அதிக மக்கள் வாழ்வது வளரும்
நாடுகளான மூன்றாம் உலக நாடுகளில்தான். பசியால் வாடுவதும் மாய்வதும் இந்த
நாடுகளில்தான். எனவே, இங்கு அதிகம் மகசூல் காண வேண்டும் என்பதே எல்லோரின்
ஆசையாக இருக்கிறது-சர்வதேச உணவு தானிய வியாபாரிகள் தவிர! எனவே, வளரும்
நாடுகளில் மீதமாகும் விளைபொருட்கள் வளர்ந்த நாடுகளின் பற்றாக்குறையையும்
போக்கும். ஏழை நாடுகளின் அன்னியச் செலவாணி பெருகும்.

*இன்னொரு கோர முகம்!*

உணவு உற்பத்தி குறைந்துவிட்டது... உணவுப் பஞ்சம் வரும்... பட்டினிச் சாவுகள்
ஏற்படும்... என்றெல்லாம் எப்போது பார்த்தாலும் சொல்லப் படுகிறது. ஏற்கெனவே
பட்டினிச்சாவு களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு உண்மையான
காரணம்... உணவு உற்பத்தி குறைவுதானா? என்றொரு கேள்வியை எழுப்பினால்,
பிரச்னையின் இன்னொரு கோரமுகம் உங்களைப் பார்த்து கோரைப் பற்களுடன் சிரிக்கும்
என்பதே உண்மை.

இந்தப் பூமியில் ஒவ்வொரு இரவும் ஏறத்தாழ 100 கோடி மக்கள் உணவின்றி பசித்த
வயிறுடன் உறங்குகின்றனர். இவர்களுக்கு வழங்கக்கூடிய அளவு உணவு இப்போது இங்கு
உண்மையில் விளையவில்லையா?

வறுமை மற்றும் பட்டினி ஆகியப் பிரச்னையை ஒட்டி, உலகை நம்ப வைப்பதற்காக பல்வேறு
கருத்துக்களை விஞ்ஞானிகளும் அரசியல்வாதி களும் எடுத்து வைக்கின்றனர்.
பெரும்பாலும் அவையெல்லாம் கட்டுக்கதைகள் என்பதே உண்மையாக இருக்கிறது. அவற்றில்
பன்னிரண்டு விஷயங்களைத் தொகுத்து '12 கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் ஒரு
ஆய்வறிக்கையை 1998-ல் வெளியிட்டிருக்கிறது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்சஸ்
மோரே லேப்பி தலைமை யிலான குழு. ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய்ந்து அத்தனையும்
பொய் என்று சொல்லியி ருக்கிறது அந்தக் குழு. அந்தப் பன்னிரண்டு
'கட்டுக்கதை'களில் முக்கியமானது, 'மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப போதுமான
உணவு உற்பத்தி இல்லை' என்பதுதான்.

இதைப்பற்றி அந்தக் குழு சொல்வது இதுதான்-

''உலகில் எல்லோரின் தேவைக்கும் அதிகமான தானியங்கள், காய்கறிகள் எல்லாமே விளை
கின்றன. மொத்த விளைச்சலை அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிரித்து வழங்கினால்,
ஒவ்வொருவருக்கும், தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயறு வகைகள், ஏறத்தாழ
அரை கிலோ காய்கறிகள், பழங்கள், கால் கிலோ மாமிசம், பால், முட்டை கிடைக்கும்.
இவற்றின் மூலம் ஒவ்வொருவரும் பெறக்கூடிய சக்தியின் அளவு 3,500 கலோரி. ஆனால்,
நன்கு வளர்ந் திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரி முதல் 2,500
கலோரிகள்தான். தினசரி 3,500 கிலோ கலோரி அளவு உணவு உட்கொண்டால், உலகத்தில் உள்ள
அத்தனை பேருக்கும் உடல் பருமன் ஒட்டிய நோய்கள் வந்து சேரும்.''

*பயங்கரவாத ஃபாஸ்ட் புட்!*

'துரித உணவு' எனப்படும் 'ஃபாஸ்ட்ஃபுட்' இந்தப் பல்லாயிரமாண்டு பண்பாட்டை
அழிக்கிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு 'ஒரே சுவை, ஒரே மணம், ஒரே
மாதிரியான தரம்' என்ற முழக்கங்கள் புடைசூழ வருகிற பதப்படுத் தப்பட்ட உணவு. இதை
எதிர்த்து, மக்களுடைய உணவுப் பண்பாட்டைக் காக்க இத்தாலியைத் தலைமையிடமாகக்
கொண்டு சுமார் 100 நாடுகளில் இயங்குகிறது 'ஸ்லோ ஃபுட்' என்ற இயக்கம். இதன்
தலைவரான கார்லோ பெர்ட்டினி, ''630 கோடி மக்கள் உள்ள இந்த உலகில், தினமும் 80
கோடிக்கும் மேலான மக்கள் பசியால் வாடுகின்றனர். ஆனால், இதே உலகில் 170 கோடி
மக்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக உணவு உற்பத்தியோ...
இன்றைய மக்கள் தொகையைப் போல இரண்டு மடங்கு பேருக்கு, அதாவது சுமார் 1,200 கோடி
பேருக்குத் தேவையான அளவு விளைவிக்கப்படுகிறது. என்ன பைத்தியக்கார உலகம் இது?''
என்று ஆதங்கப்படுகிறார்.

*ஒவ்வொரு நாளும்... ஒவ்வோர் ஆண்டும்! *

உலக அளவில் பட்டினியின் காரணமாக ஒவ்வொரு நாளும் 24,000 பேர் மடிகின்றனர்.
இவர்களில் 78% பேர் குழந்தைகளும், பெண்களும். 140 கோடிக்கும் அதிகமான மனிதர்கள்
நீண்ட காலம் பட்டினியில் உழல்பவர்கள். மொத்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 30
லட்சம் சகோதர, சகோதரிகளை பட்டினி அரக்கனுக்குக் காவு கொடுத்துக்
கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொர் இரவும் பசித்த வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லும் இந்தியச் சகோதர,
சகோதரிகள் 34 கோடி பேர். பட்டினி என்ற அரக்கனின் பிடியில் சிக்கி ஒவ்வொரு
நாளும் சுமார் 10,000 இந்திய சகோதரர்கள் உயிரை விடுகின்றனர். இதுவே ஓராண்டுக்கு
சுமார் 40 லட்சம் பேர்.

தனக்கு ஒரு பிரச்னை என்றதும் மனிதாபிமானம், மண்ணாங்கட்டி என்றெல்லாம்
வாய்ச்சவடால் விடும் பேர்வழிகளே... இப்போது சொல்லுங்கள் ஆண்டுதோறும் 1 கோடியே
30 லட்சம் பேர் இறந்து போவதற்கு காரணம்... போதிய விளைச் சலின்மையா... போதுமான
மனது இல்லாமையா?

ஹிட்லரின் இனவெறி காரணமாக நடத்தப்பட்ட 2-ம் உலக (வணிகப்) போரில் உலகெங்கும்
இறந்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் பேர். இன்று பட்டினியால் மடிபவர்கள்
ஆண்டுதோறும் 130 லட்சம் பேர். அதாவது, ஒவ்வொர் ஆண்டும் இரண்டு உலகப் போர்களை
நிகழ்த்திக் கொண்டி ருக்கிறான் பட்டினி அரக்கன் -செயற்கையாக!

ஆக, உலகில் பசி, பட்டினிக் கொடுமைகளுக்குக் காரணம், தேவையான அளவு விளையாதது
அல்ல. பசியில் வாடுவோரிடம் போதுமான வாங்கும் சக்தி இல்லை என்பதே உண்மை. இது
விவசாயம், விளைச்சல் சார்ந்த பிரச்னையில்லை. அரசியல், பொருளியல் சார்ந்த
பிரச்னை. இதைத் தீர்த்து வைப்பதற்கு இன்றைக்கு நமக்குத் தேவைப்படுவது... மரபணு
மாற்றுப் பயிர்கள் அல்ல. தேவைப்படும் சமூகப் பொருளாதார மாற்றங்களை செய்யக்கூடிய
அரசியல் சக்தி.

அப்படி தீர்வு காணப்பட்டால், மண்வளம் காத்து, இயற்கை வளம் பேணி, தரமான
சத்துக்கள் மிகுந்ததை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தின் மூலம்
இன்றுள்ள மக்கள் தொகையைப் போல 3-4 மடங்கு மக்களுக்கு அமுத அன்னம் படைக்க
முடியும். விவசாயிகளின் பொருளாதார நிலைமையும் மேம்படும்.

இவ்வளவு உண்மைகள், ஆதாரங்கள் இருக்கின்றன என்று எடுத்துக்காட்டிய பிறகும்,
'இயற்கை வழி விவசாயம் மூலம் எல்லோருக்கும் சோறு போட முடியுமா?' என்று கேள்வி
எழுப்பினால், அவர்களெல் லாம் கண் முன் உள்ள உண்மையை அலசிப் பார்க்க
முடியாதவர்கள் அல்லது ரசாயன விவசாயத் துக்குத் தாலி கட்டிக்கொண்டு, மண்ணை
மலடாக்கும் கம்பெனிகள் தந்த போலி அறிவியலை, கம்பெனி களை வாழ வைப்பதற்காக
இருப்பவர்கள் என்றுதானே பொருள்.

*'வறுமையே உலகின் மிகப் பெரிய வன்முறை' என்று சொல்லியிருக்கிறார் காந்தி- *

சிந்தியுங்கள் நண்பர்களே!

*ஸ்லோ ஃபுட்!*

'ஃபாஸ்ட் ஃபுட்' என்பது ஒரு வகை உணவோ அல்லது உணவகங்கள் சம்பந்தப்பட்டது
மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய புதுவித கலாச்சாரத்தின் முகம் அது.
அதாவது... விவசாயம், இயற்கைச்சூழல், இயற்கை ஆதாரங்கள் மீது உள்ளூர் மக்களுக்கு
உள்ள உரிமை, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வணிகம், விதை, உணவுத்
தொழில்நுட்பங்கள் என்று பலவற்றின் மீதும் பகாசுர கம்பெனிகள் செலுத்த
ஆரம்பித்திருக்கும் ஏகபோகத் தின் வெளித்தோற்றம்தான் ஃபாஸ்ட்ஃபுட்.

இதன் மூலம் உலக மக்களை அடிமையாக்குவதைத் தடுத்து நிறுத்தி, உலக மக்களை உணவுக்
கலாச் சாரம் மூலம் ஒன்றிணைக்க முயலும் அமைப்பே ஸ்லோ ஃபுட். உணவு என்பது அந்தந்த
வட்டாரக் கலாச்சாரத்துடன், இயற்கைச் சூழலுடன் பின்னிப் பிணைந்த ஒன்று. இத்தகைய
உணர்வைப் பரப்பும் அமைப்பே ஸ்லோ ஃபுட். இந்த அமைப்பின் அடையாளச் சின்னம் நத்தை.
1986-ம் ஆண்டு இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 104 நாடுகளில்
பரவியுள்ளது.



http://groups.google.com/group/muththamiz/msg/0151af1ff8fde928?

இயற்கை விவசாயம் அதிகரிக்கும்

இயற்கை விவசாயம் அதிகரிக்கும்


புது டெல்லி:, திங்கள், 25 மே 2009( 10:58 IST )






இயற்கையான முறையில் விவசாய செய்யும் பரப்பளவு 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும் என்று முகேஷ் குப்தா தெரிவித்தார்.

இரசாயண உரம், பூச்சி மருந்து போன்றவைகளை பயன்படுத்தாமல், பஞ்சகாவ்யம், வேம்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்டும் விவசாய முறை மீண்டும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் இயற்கை வேளாண்மைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இரசாயண பொருட்கள் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்கள், தேயிலே, காபி, உணவு தானியங்கள் உட்பட எல்லாவித பொருட்களுக்கு அதிக விலையும் கிடைக்கிறது. தற்போது இந்தியாவில் இருந்து இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை போன்றவை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இவைகள் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பும் உள்ளது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் இன்டர்நேஷனல் கான்பிடென்ஸ் சென்டர் பார் ஆர்கானிக் அக்ரிகல்சர் என்ற அமைப்பின் தலைவர் முகேஷ் குப்தா கூறுகையில், இந்தியாவில் 8 லட்சத்து 65 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் இயற்கை முறையிலான விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரப்பளவு 2012 ஆம் ஆண்டில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும் என்றார்.

இயற்கை வேளாண் பொருட்களுக்கு வரவேற்பு வருடத்திற்கு வருடம் இரு மடங்கு அதிகரித்துவருகிறது. அடுத்த சில வருடங்களில் இதன் விற்பனை 6 முதல் 7 மடங்காக அதிகரிக்கும். மக்களிடையே விழிப்புணர்ச்சி அதிகரிக்கும் போது, 2012 ஆம் ஆண்டில் இதன் வர்த்தகம் ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.

இந்தியாவில் 14 கோடியே 20 லட்சம் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள்

உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள்





சிறு வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது
அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில
நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது

பயிருக்கு
முக்கிய தேவையான உரங்களான தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்தை
பெரும்பாலும் வேதி உரங்கள் மூலம் தருவதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன்
சுற்று சூழ்நிலை சீர்கேடும் விளைகிறது.நம் மண்ணில் இச்சத்துக்களின் அளவு
குறைவாக இருப்பதால் பயிருக்கு எப்படியாவது நாம் இச்சத்துக்களை அளித்தே ஆக
வேண்டும்,சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் இந்த பிரச்சனையை
தீர்ப்பதெப்படி?

தீர்வின் ஒரு பகுதியாக உயிர் உரங்களை நாம் பயன் படுத்தலாம்.முதலில் உயிர் உரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் சில வகை நுண்ணியிரிகள் நன்மை செய்யும் நுண்ணியிரிகள்.
இவற்றில் சில வகை நுண்ணியிர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வளிமண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை.
சில நுண்ணியிரிகலோ மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன் படும் வகையில் மாற்றி கொடுக்கும்.
வேறு சில நுண்ணியிரிகலோ பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்


தழைசத்து(Nitrogen) கொடுக்கும் நுண்ணுயிர் உரம்
வளி
மண்டலத்தில் 78% தழை சத்து இருந்தாலும் பயிரால் வளைமண்டலத்தில் உள்ள தழை
சத்தை எடுத்து உபயோக படுத்த முடியாது. இந்திய மண்ணிலும் தழை சத்து மிக
குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய யூரியா போனற உரங்களை இடுகிறோம். மண்ணில்
வாழும் சில நுண்ணியிரிகள் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை நிலை படுத்தி
பயிருக்கு உரமாக தருகிறது.

இவற்றில் முக்கியமானது ரைசோபியம்.
இது பயிறு வகை செடிகளின் வேர்களின் உள்ளே முடிச்சி ஏற்படுத்தி அதனுள்
வழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணியிர் இரண்டும் பயனடைவர்.
நுண்ணியிரிக்கு உணவும் இருக்க இடமும் கிடைக்கின்றது. அதனுள் வாழும்
ரைசோபியம் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை உரமாக்கி பயிருக்கு
கிடைக்கிறது. இதனால் அந்த பயிர் மட்டுமன்றி அந்த பயிர் இறந்த பிறகு அதன்
வேரில் இருக்கும் தழை சத்தால் அடுத்து வரும் பயிர்கள் கூட பயனடைகிறது.
செஸ்பேனியா போன்ற தழை உரத்திற்காக வளர்க்க படும் செடிகளின் தண்டு
பகுதியில் கூட இவ்வகை உயிர்கள் உரத்தை சேமிக்கின்றன.

அசோஸ்பிரில்லம் என்ற
உயிர் பெரும்பாலான பயிகளின் வேருக்கு அருகில் வளர்ந்து வளி மண்டல தழை
சத்தை நிலை படுத்துவதுடன், வேர்களை நன்கு வளர செய்யும் ஊக்கிகளையும்
உற்பத்தி செய்கிறது.

அசிட்டோபேக்டர் என்ற நுண்ணியிர் கரும்பில் உள்ள சர்க்கரை சத்தை உணவாக உட்கொண்டு வளி மண்டல தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கொடுக்கும்.
நீலபச்சை
பாசி என்பது பாசி வகையை சேர்ந்தது. இது நெல் வளரும் இடங்களில் நீர் தேங்கி
இருப்பதால், அவ்வகை இடத்தில் தழைசத்து உரத்தை உருவாக்கி பயிருக்கு
கொடுக்கும்.
அசோல்லா என்பது நீரில் வளரும் ஒரு கசடு(fern) தாவரம். இது
அதிக அளவில் organic matter உருவாக்குவதுடன், இதன் இலையின் மேல் வளரும்
நீலபச்சை பாசி மூலம் தழை சத்து உரத்தையும் பயிருக்கு கொடுக்கும்

மணிசத்து(phosperous) கொடுக்கும் நுண்ணியிர் உரம்

மண்ணில்
மணிசத்து ஒரளவிற்கு இருந்தாலும் அவை பயிர்களால் எடுக்க முடியாத நிலையில்
உள்ளது. மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் சிலவகை அமிலவகைகளை உற்பத்தி
செய்து, மண்ணில் பயிருக்கு கிடைக்காத வகையில் உள்ள மணி சத்தை கரைத்து
பயிர்கள் உபயோக படுத்தும் வகையில் மாற்றி கொடுக்கிறது.

பாஸ்போபேக்டீரியா என்ற நுண்ணியிர் உரம் அனைத்து பயிர் வளரும் சூழ்நிலையிலும் வளர்ந்து மணி சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கும்.
VAM எனப்படும்
பூஞ்சை வகை உயிர் பயிர்களின் வேரில் புகுந்து நீண்ட தூரம் இழை விட்டு
வளர்ந்து வேர் வளரும் இடத்தை விட அதிக இடம் வளர்ந்து பயிருக்கு தேவையான
மணிசத்து மற்றும் பயிருக்கு குறைந்த அளவு தேவை படும் சத்துகளையும்
பயிருக்கு எடுத்து அளிக்கிறது. இவ்வகை உயிர்கள் பயிருக்கு சிறிதளவு
வறட்ச்சி தாங்கும் தன்மையை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு தன்மையையும்
அளிக்கிறது. இது முக்கியமாக மர வகை பயிர்களின் பயன்பாட்டிற்கு உபயோக
படுகிறது.

பயிர் ஊக்கி(Plant growth promoting harmones) கொடுக்கும் நுண்ணியிர் உரம்

சூடோமோனாசு போன்ற
நுண்ணியிர்கள் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கிகளை உற்பத்தி செய்து
பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.இவை பயிர்களின் நோய் எதிர்ப்பு தன்மையை
கொடுக்க கூடிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த வகை நுண்ணியிர்களை
அனைத்து வகை பயிர்களுக்கும் உபயோகபடுத்தலாம்.
இது தவர வேறு சில பயிருக்கு பயன் தரும் நுண்ணியிரிகள், பயிர்களின் வளர்ச்சிக்கு உரமாக பயன் படுத்த அராய்ச்சி அளவில் உள்ளது .

Saturday 5 December 2009

உலக இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு

உலக இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு



ஆர்.எஸ்.நாராயணன்

மனிதன் பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை இயற்கையில் தானாகவே விளைந்த விதைகள், கனிகள் ஆகியவற்றை உண்டு வாழ்ந்த நாளிலிருந்து 19ஆம் நூற்றாண்டில் வேதியியல் அல்லது ரசாயனங்கள் கண்டுபிடித்த காலம் வரையில் உலகம் முழுவதும் இயற்கை விஞ்ஞானம் நீடித்து வந்தது. புதிய கற்காலத்தில் வேளாண்மையில் மண்ணைப் பண்படுத்தக் கற்கருவிகளும், மரக்கருவிகளும் பயன்பட்டன. பின்னர் உலோகக் காலம் அதாவது பித்தளை – இரும்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உணவு சேகரிப்பிலிருந்து உணவின் உற்பத்தியும், உணவு உற்பத்தியில் உபரி உணவும் சேர்ந்த பிறகு தொழில் – வணிகம் செழித்து உலக நாகரிகங்கள் அரும்பின. கிரீஸ், ரோம், ஆசியா மைனர் என்று சொல்லப்பட்ட துருக்கி, ஈராக், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் புராதன நகரங்கள் தோன்றின. இன்றைய வேளாண்மை சுமார் 10,000 ஆண்டுக்கால வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்கு 19, 20 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சோதனைகள் வேளாண்மையில் அறிமுகமான ரசாயனங்கள் ஆகும். வேளாண்மை என்றால் அது இயற்கை வழி வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மைதான் என்ற இயல்பு மாறி இதில் இரண்டு பிரிவு வந்தது. எவ்வளவுதான் ரசாயனம் வந்தாலும் பாரம்பரிய வேளாண்மையை அதன் இயற்கைத் தன்மையுடன் போற்றிவரும் சிலருடன், ரசாயனத்தைக் கைவிட்டு இயற்கைக்குப் பலர் மாறினாலும் இயற்கை விவசாயம் செய்வோர் சிறுபான்மையினராகவும், ரசாயன விவசாயம் செய்வோர் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல; உலகளாவியதாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் இவ்வாறு பெரும்பான்மையான விவசாயிகள் இயற்கை வழியைக் கைவிட்டது ஏன்? இயற்கை விவசாயத்தில் உற்பத்தி குறைவு, மக்கள் தொகை, பசி – பஞ்சம் என்ற காரணங்களும் அல்ல. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்பேச்சுகள் எழுந்தன. எது நிஜம்?




உலகில் மண்ணிலும், விண்ணிலும் ரசாயனத்தை அறிமுகம் செய்யக் காரணமானவர் பேரன் யொஸ்டஸ் வான் லீபெக் (Baron Justus Von Liebig) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். இவர் 1840இல் “வேளாண்மையிலும் உடற்கூறிலும் ரசாயனத்தின் பயன்பாடு” (Chemistry in its Application to Agriculture and Physiology) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.


பல வகையான உணவுத் தாவரங்களை எரித்துப் பற்பமாக்கி அந்தப் பற்பத்தில் (பஸ்பம்) எஞ்சியுள்ள தாதுப்புகளை அளவிட்டு, ஒரு செடி நன்கு வளரச் செயற்கையில் உற்பத்தி செய்த தாது உப்புகளை நீரில் கரைத்து அல்லது ஈர நிலையில் மண்ணில் இட்டுப் பயிரில் ஏற்றலாம் என்று முன்மொழிந்தார்.

மிகவும் அடிப்படையாகப் பயிருக்கு நைட்ரஜன் என்ற தழைச்சத்து, பாஸ்வரம் என்ற மணிச்சத்து, பொட்டாசியம் என்ற சாம்பல் சத்து மிக அதிக அளவிலும், நுண்ணிய அளவில் கால்சியம், கந்தகம், குளோரின், துத்தநாகம், தாமிரம், வெள்ளீயம், பித்தளை, வெங்கலம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவை தேவை என்று அடுக்கிக்கொண்டு போகலாம். பேரூட்டங்களான நைட்ரஜன், பாஸ்வரம், பொட்டாசியம் கலவையை ஆங்கிலத்தில் சுருக்கமாக, என்.பி.கே (NPK) கலவை என்று ஆங்கிலத்தமிழில் நாம் பேசுவதுண்டு. இந்த என்.பி.கே. கலவையுடன் சிறிது சுண்ணாம்பும் (ஜிப்சம்) சேர்த்து மண்ணில் இட்டுப் பரிசோதித்துப் பார்த்தபோது நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி எதுவுமே யோசிக்காமல் முக்கியமாக வெடிமருந்து தயாரிக்கும் ரசாயன நிறுவன முதலாளிகள் லீபெக்கைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கொண்டாட்டம் போட்டனர். கண்டமேனிக்கு மண்மேல் ரசாயனங்கள் கொட்டப்பட்டன.

சொல்லப்போனால், லீபெக்கின் கண்டுபிடிப்புகளான சூப்பர் பாஸ்பேட், பென்சீன், ஆல்க்கலி போன்றவை போன்றவை வெடிகுண்டுகளுக்குரிய தாதுப்புகள் ஆகும். போரும் அமைதியும் வெடிஉப்பு உற்பத்தியாளர்களை வாழவைத்தன. போர்க் காலங்களில் வெடிகுண்டு வீசுவதால் லாபம். அமைதிக் காலங்களில் அதையே ரசாயன உரங்களாக மண்ணில் இட்டால் கூடுதல் லாபம். ஆனால், மனிதனின் உடல்நலத்திற்கும், உயிர்ச்சூழலுக்கும், பல்லுயிர் வளங்களுக்கும் நஷ்டம். முதல் உலகப்போருக்கு முன்னும் பின்னுமாக செயற்கையான ரசாயன உரப்பயன் மேலை நாடுகளில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்தது.

உலக மக்கள் ரசாயன உரப் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை உடனடியாக உணரவில்லை. எனினும், தீர்க்கதரிசிகளாக வாழ்ந்த புகழ்பெற்ற மருத்துவர்களும், மண்ணுயிர் நிபுணர்களும், நுண்ணுயிர் வல்லுனர்களும் லீபெக்கின் சாம்பல் தத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். லீபெக்கின் அடிப்படையான ஆராய்ச்சியில் உயிருள்ள பசுமைத் தாவரத்தை எரித்துக் கிடைத்த சாம்பலில் உள்ள உப்பை மட்டும் கணக்குப் பண்ணும் இவர் செயலுக்கு “சாம்பல் தத்துவம்” என்று பெயரிட்ட அமெரிக்காவில் மிசௌரி பல்கலைக்கழகப் பேராசிரியர் விலியம் அல்பிரைஹ்டை (Dr. William A. Albrecht) வரலாறு மறந்துவிடாது. (1)

“சாம்பல் என்றாலே அது மரணத்தின் அறிகுறி. லீபெக்கின் தத்துவம் மரணத்தின் தத்துவம்” என்று 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் குரல் கொடுத்த அல்பிரைஹ்டை உலகம் மறந்துவிட்டது. மண்ணியல் பற்றி நுண்ணிய ஆய்வுகள் செய்த பல ருஷ்ய விஞ்ஞானிகளும் புறக்கணிக்கப்பட்டனர். ருஷ்ய விஞ்ஞானிகளின் மண்ணியல் ஆய்வுக் கட்டுரைகள் விலைபோகாமல் இருந்தவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்ட ஜெரோம்.ஐ.ரோடேல் (Jerome Irving Rodale) பிரிட்டிஷ் இந்தியாவில் பணிபுரிந்த மருத்துவர் மக்காரிசன் (Robert McCarrison), வேளாண் விஞ்ஞானி ஆல்பர்ட் ஹாவார்ட் (Dr. Albert Howard), ஜப்பானிய காந்தி ஃபூகோகா (Masanobu Fukuoka) போன்ற பல நூற்றுக்கணக்கான இயற்கை விவசாய முன்னோடிகள் இந்த சாம்பல் தத்துவம் மண் வளத்தை அழித்துவிடும் என்று எச்சரித்தனர்.

உலகப் போர்களும், உள்நாட்டுப் போர்களும் விளைவித்த பல்வேறு தீமைகளில் வளம் இழந்த வேளாண்மையும் ஒன்று. லீபெக் வளர்த்த என்.பி.கே. என்ற சாம்பல் தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக ருஷ்யாவில் நல்ல விளைச்சலுக்கு ஹ்யூமஸ் (Humus) என்று சொல்லப்படும் மண்ணில் உள்ள மக்குப் பொருள்களே என்ற ஆய்வு முடிவை அங்குள்ள சில விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மூலம் வெளியிட்டனர். அவற்றைப் பின்னர் நாம் கவனிக்கும் முன்பு, மிகவும் தர்க்கரீதியாக லீபெக் தத்துவத்திற்குத் தக்க பதிலை வழங்கியவர் இந்தியாவில் வேளாண்மை ஆய்வுகளை நிகழ்த்திய ஆல்பர்ட் ஹோவார்டே ஆவார்.

ஆல்பர்ட் ஹாவார்ட் (Albert Howard) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல், வேளாண்மை, மண்ணியல், காளானியல் (Mycology) ஆகிய பாடங்களில் தேர்ச்சியுற்ற பேராசிரியர். இவர் மேற்கிந்தியத் தீவில் பார்படோஸ் நகரில் உள்ள இம்பீரியல் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சரில் ஒரு விரிவுரையாளராக வாழ்வைத் தொடங்கியவர். அங்கு முதலாவதாக லீபெக்கின் என்.பி.கே. தத்துவத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்த மருத்துவர் மக்காரிசனின் நட்பு கிடைத்தது. ராபர்ட் மக்காரிசன் (Robert McCarrison) புகழ்மிக்க மருத்துவர். இம்பீரியல் இந்திய அரசில் ஊட்டச்சத்து ஆய்வுத்துறைத் தலைவராகவும், நீலகிரி மாவட்டத்தில் கூனூரில் உள்ள லூயி பாஸ்ச்சர் நிறுவனத்தின் தலைவராகவும் முப்பது ஆண்டுக் காலம் பணிபுரிந்ததைப் பாராட்டி பிரிட்டிஷ் மகாராணியிடம் வீரப்பதக்க விருது (Knighthood) பெற்றவர். இவர் சிலகாலம் ஆப்கானிஸ்தானில் ஹுன்சாஸ் பழங்குடி மக்களின் உணவுப் பழக்கவழக்கம், உடற்கூறு பற்றி ஆராய்ந்தவர். ஹுன்சாஸ் பழங்குடிகள் அலெக்சாந்தர் படையெடுப்பின்போது கூடவந்த கிரேக்கப் படைவீரர்கள் மீண்டும் அவருடன் திரும்பாமல் ஆப்கானிஸ்தானில் தங்கி அம்மரபில் வந்தவர்கள். அவர்கள் ஒரு நாளில் 120 மைல் நடக்கக்கூடியவர்கள். 100 வயதுக்குமேல் வாழ்ந்தவர்கள். எந்த வைத்தியமும் செய்துகொள்ளாதவர்கள். குறிப்பாக வயிற்றுநோய், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் ஹுன்சாஸ் மக்களுக்கு வந்தது கிடையாது என்று மக்காரிசனின் மருத்துக் குறிப்பு கூறுகிறது.(2)

“உணவே மருந்து” என்ற குரல் இன்று ஓங்கி ஒலிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல; அன்றைய இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மக்கள் நோய் நொடியில்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான காரணம் பாரம்பரிய உணவு முறை என்பதை மக்காரிசன் பகுத்துரைத்தவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “வயிற்றுப் போக்கு, குடல் நோய்களும் தவறான உணவும்” என்ற தலைப்பில் – அதாவது “Faulty Food in Relation to Gastro Intestinal Disorders” – என்ற பொருள் பற்றி பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள உடற்கூறு ஆய்வியல் துறையில் இவர் ஆற்றிய சொற்பொழிவு லீபெக்கின் தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. “வளமான வாழ்வுக்குத் தக்க அளவு ரசாயன ஊட்டங்களை ஏற்க வேண்டும்” என்பது லீபெக்கின் வாதம். ஆனால் சரியான உணவே போதும் என்பது மக்காரிசனின் வாதம். மக்காரிசன் கூறிய அடிப்படையில் இந்தியாவில் வேளாண்மையில் ஆய்வு செய்வதைத் தொடர்ந்தவர் ஹாவர்ட். எனினும், இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் எதுவெனில் இந்தியாவில் மக்காரிசனின் ஆய்வுக் கட்டுரைகளும் அரசாங்க வெளியீடு கோப்புக் குப்பைகளில் புதையுண்டதுபோக, எஞ்சியதிலிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் குறைவானவை.

மேற்கிந்தியத் தீவில் பணிபுரிந்த ஹாவார்டின் முக்கியப்பணி அந்த நாட்டின் வர்த்தகப் பயிர்களான கரும்பு, கோகோ, ஜாதிக்காய், ஆரவல்லி என்ற ஆரோரூட் (Arrowroot), பட்டாணி, வாழை, எலுமிச்சை ஆகியவற்றின் சாகுபடியை மேம்படுத்துதலாகும். கரும்புப் பயிருக்கு ஏற்படும் பூஞ்சாண நோய் பற்றியும் ஆராய்ந்து மருந்து வழங்குதலும் ஒன்று. அவர் ஆராய்ச்சி செய்ய சோதனைக்கூடம் இருந்தது. ஆனால் சோதனை வயல் / தோட்டம் வழங்கப்படவில்லை. ஆகவே, அவர் நேரிடையாக விவசாயிகளின் வயல்களுக்குச் சென்று கவனித்துத் தக்க யோசனைகளை வழங்கினார். “சோதனைக்கூடங்களில் சோதனைக் குழாய்களுடன் சங்கமமாகிவிட்டால் அறிவு மழுங்கிவிடும் என்றும், நேரிடையாகக் களத்தில் இறங்கி விவசாயிகளின் நுட்பங்களைக் கவனித்தால் அறிவு வளர்ந்துவிடும்” என்பது அவர் கருத்து.

பயிர்களுக்குரிய நோய்க்குறிகள் மண்ணில் புலப்படுவதை ஹாவார்ட் கண்டறிந்தார். தான் செய்யக்கூடிய ஆராய்ச்சிக்கு விரிந்த அளவில் தோட்டமும் வயலும் வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவருக்கு இந்திய வாய்ப்பு வந்தது. இந்திய விவசாயத்தை மேம்படுத்தவும், இந்திய விவசாயத்தில் ரசாயனத்தைப் புகுத்தி உற்பத்தியை உயர்த்தவேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் தகுதி வாய்ந்த விஞ்ஞானி ஒருவரை பிரிட்டிஷ் இந்தியாவில் அன்று வைஸ்ராயாக இருந்த (Viceroy) கர்சான் (Curzon) தேடிக்கொண்டிருந்தார். தில்லிக்கு அருகில் உள்ள புசாவில் 75 ஏக்கர் நிலத்துடன் இணைந்த வேளாண்மை ஆய்வுக்கூடத்தைக் கர்சான் தொடங்குவதாக இருந்தார். 1905இல் இந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல் வல்லுனர் பதவி ஹாவார்டுக்குக் கிடைத்தது. இந்திய விவசாயத்தில் ரசாயனத்தைப் புகுத்தவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு விரும்பியது. ஹாவார்டோ இந்திய விவசாயத்தில் உற்பத்தியை உயர்த்த ரசாயனம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தியாவிலிருந்துதான் லீபெக்கின் என்.பி.கே. தத்துவத்திற்குத் தர்க்கரீதியாகத் தக்க பதிலை ஹாவார்டு இவ்வாறு வழங்கினார்.

லீபெக்கின் தத்துவத்தில் ஒரு பயிர் விளைந்து நல்ல மகசூல் பெறவேண்டுமானால், நன்கு விளைந்த அதே பயிரைச் சுட்டெரித்துப் பின், அந்தச் சாம்பலில் உள்ள தாதுப்புகளை அளவிட்டு அதை மண்ணில் இட்டால் போதுமானது. இரண்டாவது இயற்கை விவசாயிகள் கூறும் மக்குப்பொருள் என்ற ஹ்யூமஸ் முக்கியம் இல்லை. மக்குப்பொருளில் உள்ள கார்பனை மண் மூலம் பெறவேண்டியதில்லை. பச்சை இலைகள் காற்று வடிவில் உள்ள கார்பனை சுவாசித்து ஏற்பதால் மண்ணில் கரிமம் வேண்டும் என்று காத்திருக்காமல் அப்பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்களை ரசாயன வடிவில் நீரில் கரையக்கூடிய உப்பாக வழங்கவேண்டும் என்று கூறுவதோடு நிற்காமல் ஹ்யூமஸ் மக்குப்பொருள் என்ற கரிமச்சத்து தண்ணீரில் கரையாது என்றும், ஒரு அறுவடைக்குப்பின் மண்ணில் மக்கு எஞ்சுகிறது என்ற உண்மையையும் பொய்யென்று லீபெக் வாதிட்டார்.

வேளாண்மை வேதியியல் (Agriculture Chemistry) என்ற துறையில் லீபெக்கின் பங்கைப் பாராட்டிய ஹாவார்ட் முதல் நிலையை ஏற்றுக்கொண்டாலும், இரண்டாவது நிலை மிகவும் தவறு என்று கூறினார். ஒரு தாவரத்திற்குத் தேவையான ஊட்டத்தை உப்பு வடிவில் வழங்கும் செயல் மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் பாதிக்கும் என்று நிரூபித்தார். லீபெக்கைப் பற்றி அன்று ஹாவார்டு கூறிய ஒரு கருத்து இந்தியாவில் ஏட்டுச் சுரக்காய்களாக வாழும் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. பயிர் வளர்ச்சிக்கு மக்குப்பொருளான ஹ்யூமஸ் தேவையில்லை என்று கூறுவதும், சோதனைக்கூட முடிவே இறுதியான முடிவு என்பதும், உழவியல் நுட்ப அறிவோ, வேளாண்மை அனுபவ அறிவோ லீபெக்கிடம் இல்லை என்று எடுத்துக்காட்டுகிறது என்று ஹாவார்ட் கூறுகிறார். விவசாய வளர்ச்சிக்கு சோதனைக்கூட அறிவு வயலுக்குச் செல்லவேண்டும் என்பதைவிட வயலில் அனுபவ அடிப்படையில் விவசாயிகளின் பாரம்பரிய அறிவு சோதனைக்கூடத்தை அடையவேண்டும் என்பது மிக முக்கியம் என்று ஹாவார்ட் கருதுகிறார். ஒரு தாவரத்திற்கு வேண்டிய அவ்வளவு தாதுப்புச் சத்துகளும் மண்ணில் உண்டு என்றும், உண்மையில் மக்குச்சத்து என்ற ஹுமஸ் மண்ணில் கரைந்து உலோக உப்புச்சத்துகளை நுண்ணிய வழியில் கரைத்து வேர் உறிஞ்சிகளுக்கு எடுத்துக்கொடுக்க நுண்ணியிரிகள் உதவுகின்றன என்பதால், ஹ்யூமஸ் என்ற மக்குப்பொருள் நீரில் கரையாது என்பதும், ஒரு அறுவடைக்குப்பின் மண்ணில் மக்குப்பொருள் எஞ்சாது என்பதும் நிரூபிக்கப்படாதவை என்று கூறும் ஹாவார்ட், அனுபவபூர்வமாக லீபெக்கின் தத்துவத்தையும் பொய்யென்று நிரூபித்துக் காட்டிவிட்டார்.

ஏறத்தாழ 30 ஆண்டுக்காலம் இந்திய விவசாயிகளோடு நெருங்கிப் பழகிய ஹாவார்ட் ஏராளமான பாரம்பரிய உழவியல் நுட்பங்களைப் பயின்று மெருகேற்றி விவசாயிகளுக்குத் திரும்பி வழங்கினார். மக்குப்பொருளில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆற்றல், மண்ணில் உள்ள உயிரியல் ரசாயனங்கள் குறித்து இவர் முப்பதாண்டுக் காலம் நிகழ்த்திய ஆய்வு முடிவில் இவர் வரைந்த சொல்சித்திரம் “வேளாண்மை உயில்”. இதைப் பற்றியும் 1935க்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் இந்திய உழவியல் நுட்பங்களைக்கொண்டு இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட விவரங்களுடன் 1905இலிருந்து 1935 வரை இவர் நிகழ்த்திய ஆய்வுகள் பற்றியும், சமகால் ருஷிய வழங்கல் பற்றியும் இனிவரும் இதழ்களில் கவனிக்கும் முன்பு, லீபெக்கின் பெருந்தன்மை பற்றியும் ஒரு வரி எழுதலாம். “மண்ணில் ரசாயன உரங்களை இடுவது மண் வளத்தைக் கெடுத்துவிடும்’, என்றும், ’பயிர் ஆரோக்கியமாக வளர ஹ்யூமஸ் என்ற மக்கு அவசியமே” என்று லீபெக் ஒரு மரண வாக்குமூலம் வழங்கினாலும்கூட அது காலம் கடந்து வந்து விட்டது. ரசாயன உர உற்பத்தி நிறுவனங்களின் பணப் பசிக்கு மண் இரையானது. இது உலகளாவியதாக இருந்தது.

_____________________________________________________________

1. பேராசிரியர் விலியம் ஆல்ப்ரைஹ்ட் உடைய பல பிரசுரங்களை இந்தப் பக்கங்களில் காணலாம். https://www.earthmentor.com/principles_of_balance/doctor_albrecht_papers/

2. ஹூன்சாஸ் மக்கள் பற்றியும் அவர்களுடைய நீண்ட ஆயுளும் நிரம்பிய ஆரோக்கியமும் நிறைந்த வாழ்வு பற்றிய ஒரு ருசிகரமான வலைத் தளக் கட்டுரையை இங்கே காணலாம். http://thepdi.com/hunza_health_secrets.htm

ஆசிரியர் குறிப்பு: திரு. ஆர். எஸ்.நாராயணன் தமிழ் வாசகர்களில் பலருக்கு நன்கு அறிமுகமானவர். தினமணி செய்தித்தாளில் செறிவான நெடிய பல மையப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விவசாயம், தோட்டக்கலை, வேளாண் பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். மைய வேளாண்மை அமைச்சரகத்தின் ஒரு பிரிவில் 31 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக விவசாயம் பற்றிப் பேசும் ஊடக வெளியீடுகளில் இவர் ‘இயற்கை விஞ்ஞானி’ என்று அறியப்படுகிறார். இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள், நாடு காக்கும் நல்ல திட்டம், இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி போன்ற விவசாயம் தொடர்பான புத்தகங்களை எழுதியிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்து அம்பாதுறையில் விவசாயியாக, எழுத்தாளராக,சூழல் மேம்பாட்டுக்கு உழைப்பவராக நன்மையைப் பரப்பியபடி வசித்து வருகிறார்.

காட்டுவிலங்குகளை எட்டி ஓடவைக்கும் முட்டைக்கரைசல் தொழில்நுட்பம்

காட்டுவிலங்குகளை எட்டி ஓடவைக்கும் முட்டைக்கரைசல் தொழில்நுட்பம்


காட்டு மாடுகள், யானைகளின் தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு இந்த யுக்தி நல்ல பலனைத் தருகிறது.
 
 
கோழிக்குஞ்சு பொரிப்பகங்களில் கிடைக்கிற வீணான முட்டையைப் பயன்படுத்தினாலே போதும். பழைய பொரிக்காத, உடைந்த, நீர்த்துப்போன எந்த முட்டைகளையும் இதற்கு பயன்படுத்தலாம். சாப்பிடப்பயன்படுத்திய முட்டையின் கழிவுகளையும்கூட இதற்கு பயன்படுத்தலாம். முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ள வேண்டும். ஓடுகளைத் தனியாகப் பிரித்து உடைத்து தூளாக்கி செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். பாத்திரத்தில் கொட்டிய முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள்கரு இரண்டையும் கையால் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையில் 100 மிலி எடுத்துக்கொள்ள வேண்டும். (இரண்டு முட்டைகளிலேயே 100 மிலி கலவை கிடைத்துவிடும்). கெட்டுப்போய் நாற்றமடிக்கும் முட்டை என்றால் 100 மிலி போதும். நல்ல முட்டையாக இருந்தால் 200 மில்லி எடுத்துக்கொள்ளலாம். அதில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து வேலி ஓரம் உள்ள செடிகள், மரங்கள் மேல் ஸ்ப்ரேயர் மூலமாக தெளிக்க வேண்டும். செடி கொடிகளின் மேல் அடிக்கும் நாற்றத்தினாலேயே விலங்குகள் பக்கத்திலேயே வராது.
நமக்கு எவ்வளவு நிலமிருக்கோ அதன் தேவைக்கேற்ப தயாரித்து பயன்படுத்தலாம். தொந்தரவு அதிகமாக இருந்தால் தோட்டத்து பயிர்கள் மேலேயும் இதை தெளிக்கலாம். இந்த நாற்றம் 1 மாதம் வரை கூட இருக்கும். தொடர்புக்கு: டி.நரஹரி, மொபைல்: 94448 10639.
வெட்டிவேர் - ஒரு வெற்றி வேர்

தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத் தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள். வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி என்று வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மகத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர் செய்வது என்று பார்ப்போம். இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம். மணல் பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.




இன்றைய நிலவரப்படி ஒரு டன் ஐம்பதாயி ரம் ரூபாய் வரை விலைபோகின்றது. மூலிகை எண்ணெய் தயாரிப்பவர்களும், வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக் கொள்ள தயாராக உள்ளார்கள். செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரைமட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம். மேலே உள்ள பச்சை இலைகள் மாட்டுத்தீவனம். பன்னிரெண்டு மாதங்களில் இருந்து பதினான்கு மாதங் களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.




ஒரு ஏக்கருக்கு பன்னிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிடவேண்டியதுதான். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்த முறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம். ரசாயன உரம் தேவையில்லை. பூச்சி மருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது. பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ அல்லது வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சி விரட்டியாகவும் செயல்படும். வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம்.






நாங்கள் எங்கள் நிலத்தில் போன வருடம் ஒரு ஏக்கரில் சோதனை முறையில் வெட்டிவேர் பயிரிட்டு பார்த்தோம். எங்கள் நிலம் காரத்தன்மை அதிகம் கொண்ட களிமண் நிலம். களிமண்ணின் கெட்டித் தன்மையைப் போக்குவதுதான் நாங்கள் பயிரிட்டதன் முக்கிய நோக்கம். எங்கள் நோக்கம் சரிவர நிறைவேறிவிட்டது. மண்புழு செய்யும் வேலையை ஒவ்வொரு வெட்டிவேர் செடியும் செய்துவிட்டது. இந்த வருடம் பயிரிடும்போது கண்டிப்பாக போன வருடத்தைவிட அதிக மகசூல் கிடைக்கும். காரணம் நிலம் கடினத்தன்மை போய் காற்றோட்டம் உள்ளதாகிவிட்டது.





அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும். மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து களை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு பதிமூன்றாம் மாதத்தில் அறுவடைதான்.




இத்தகைய மகத்துவம் வாய்ந்த வெட்டிவேரை உலகம் முழுவதிலும் விவசாயிகள் உணர்ந்து இருக்கிறார்கள். இதற்கு ஆங்கிலத்திலும் "வெட்டிவேர்' என்றுதான் பெயர். இணையதள வசதி உள்ளவர்கள் www.veturver.org என்கின்ற முகவரியில் வெட்டிவேரைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ளலாம். இப்போது சொல்லுங்கள் இது வெற்றிவேர்தானே? தொடர்புக்கு: ஆர்.ராஜலட்சுமி, மொபைல்: 93810 78770.