Tuesday 5 February 2013


பழந்தமிழரின் வேளாண் அறிவு



 தமிழ் இலக்கியமும் நிலமும்

இன்றைய அறிவியல் உலகம்  நிலம், காலம்   ( TIME & SPACE ) என்று ஆர்ப்பரிக்கும் அடிப்படை உண்மையை வாழ்வியல் ஆய்விற்கு வடிவுக் கொடுத்தவர்  தொல்காப்பியர் என்பது யாவரும் அறிந்த உண்மை. தொல்காப்பியர் முப்பொருளைக் கூறுகிறார். [ முதல், கரு, உரி] இதில் முதற்பொருளைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்.

’’முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’’


என்பது தொல்காப்பியரின் ஆய்வில் எழுந்த சிந்தனையா? என்பது நமக்குத் தெரியாது. ஏனெனில் நமக்குக் கிடைத்த தமிழ் இலக்கியங்களில் இது தான் மிகவும் பழமையானது. மனிதன் வாழ்வியலுக்கு ஆதாரமான ஒரு பேருண்மை இச்சுத்திரத்தில் இருக்கிறது.
நிலம், காலம் ஆகிய இரண்டினையும் முதற்பொருள் என்ற கலைச்சொல்லால் குறிப்பிடுகிறார். மிகவ்உம் வியப்பிற்குரிய கலைசொற்கள் இவை. எல்லா உயிர்களுக்கும்  நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா? அனைத்துயிருக்கும் முந்தோன்றி மூத்த பொருளும் நிலம் அல்லவா?, உயிரை தருவது, காப்பது, தன்னுள் கரைத்துக் கொள்வது நிலம் அல்லவா? எனவே  அதனை முதற்பொருள் என்று அழைத்தார்.  உயிர்கள் நிலத்தில் வாழ்கின்றன. அதே சமயம் காலத்திற்கு  உள்ளடங்கி வாழ்கின்றன. தோற்றமும் முடிவும் கூறமுடியாதபடி கடவுளைப் போல் நிற்பது காலம். எனவே அதனையும் முதற்பொருள் என்று அழைத்தார் தொல்காப்பியர்.
நிலத்தின் அடிப்படையினை ஆராய்ந்தார் தொல்காப்பியர். அவருடைய பார்வையில் தமிழ் நிலமே காட்சி தந்தது. மலைகள் செறிந்த குறிஞ்சி, காடுகள்  நெருங்கிய முல்லை, வயல்கள் உருவான மருதம், அலைகடற் புறமான நெய்தல் என்ற நானிலங்கள் தென்பட்டன. சகாராக்கள் இல்லாத தமிழகத்தில் பாலைவனங்கள் இல்லை. ஆயினும் முல்லையும், குறிஞ்சியும், மழைவளம் குன்றும் போது சேர்ந்து போன தற்காலிக நிலையையே பாலை என்று வகுத்துள்ளார். இந்தன் பாலையைகூட நாம் மீண்டும் வளம் கொழிக்க செய்யலாம்.
இந்த ஐந்து நிலங்களும் இயற்கை வளம் மணக்க மலர்களின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். புறத்தே காட்சி தந்த நிலங்களுக்கு ஏற்பக் கற்பித நிலங்களை (IMAGINARRY LANDSCPE)  இலக்கியப்படைப்புக்கு அளித்துக் குறிப்பிட்ட உணர்ச்சி நிலைகளுக்கு உரியவை ஆக்கினர். குன்றுகளின் மகத்தான தனிமையில் காதலர் கூடி  மகிழும்  இனிமையையும், அடர்ந்த காடுகளின் கொழுகொம்பைப் பற்றவும், சுற்றவும் தவிக்கும் கொடி போல், வருவார் தலைவர்  என்று காத்திருக்கும் தலைவியின் தவிப்பையும், நண்டுகள் கொழுத்தால் வளையில் தங்காது என்ற உண்மையை நாளும்  பார்த்திருக்கும் வயல்வெளிகளில் மனையை மறந்த கணவர்களிடம் தலைவியர் கொள்ளும் ஊடலையும், வெட்டவெளி வெம்பரப்பான பாலையில் பிரிவின் கொடுமையும், அலையோசை மட்டுமே கேட்கும் விரிந்த வானும் மணற்பரப்பான கடலோரத்தில் இரங்கலையும் உணர்ச்சி மையங்களாக்கி இலக்கியமும் படைக்குமாறு விதிகளை வகுத்தார் தொல்காப்பியர்.

ஒவ்வொரு உணர்ச்சியையும் சித்தரிக்க ஏற்ற காலங்களையும் பெரும்பொழுதாகவும் (பருவங்கள்) , சிறுபொழுதாகவும் அமைத்து வைத்தார். இந்த உணர்ச்சிக் களங்களுக்குத் திணைகள் என்று பெயர் கொடுத்து ( குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை) அவற்றுக்கேற்பக் கருப்பொருளையும் அமைத்தார். ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, பறவை, மரம்,. இசைக்கருவி, தொழில், மக்கள் ஆகியவர்களையே கருப்பொருள்கள் என வகுத்துரைத்தார்.

தொல்காப்பியர்  காலத்திலிருந்து நெடும்பயணம், செய்து விட்டது சமுதாயம்.  தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டை இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்பவும் மக்களின் மாறிவரும் பண்பாட்டு நிலைக்கு ஏற்பவும் பொருத்தி பார்க்க அவசியம் நேர்ந்திருக்கிறது.
உரிப்பொருள் அளவில் இன்று பெருந்திணை உறவுகளும், கைக்கிளை உறவுகளும் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ளன. ஆண்- பெண் உறவில் புதிய பரிணாமங்களும் ஏற்பட்டுள்ளன.
தொழில் பெருக்கம், மதமாற்றங்கள், ஆட்சி அவலங்கள், இயற்கை சூழலின் அழிவு காரணமாகவும், அறிவியல் வளர்ச்சியால் புதுப்பயிர்கள் கண்டுபிடிப்புக் காரணமாகவும், பெரும் போர்களின்  விளைவாகக் காடுகள், விளை நிலங்கள் அழிவு காரணமாகவும் கருப்பொருளாகிய  மரம், செடி, கொடி, பறவைகளின் இருப்பிடங்கள் அழிந்து வருகின்றன.  தொல்காப்பியர் காலத்தில் இருந்த தெய்வங்கள் சில இப்போது இல்லை. புதிதாகக் கிருத்துவ, இசுலாமியச் சமயங்கள் பிறந்துள்ளன.
ஓரளவு முதற்பொருள் காப்பாற்றப் பட்டிருக்கிறது. என்று கூறலாம். நிலம் பெரிதும் மாறுதலைடையவில்லை. கடல், மலை,ஆறு, காடு சார்ந்த நில அமைப்பு  பல்வேறு சிதைவுகளுக்கு இடையேயும் தொடர்ந்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அடிப்படைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தொல்காப்பியரின் கோட்பாட்டை விரிவு படுத்த வேண்டும்.
 இன்று நிலவியல் சார்ந்த இலக்கிய படைப்புகள் குறித்துப் பெரிதும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறோம். தாமஸ் வெஸ்ஸெக்ஸ் ( wessex)   நாவல்களில் ஒரு கற்பித்த  நில வடிவம் முன் வைக்கப்படுகிறது. சதுப்பு நிலமும், அது சார்ந்த வேளாண் வாழ்வும், எடுத்துரைக்கப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத விதி அவர்தம் வாழ்வைச் சிதைப்பதை ஹார்டி நாவல் பொருண்மையாகச் சித்தரிக்கிறார். அந்நிலத்தின் வீழ்ச்சி, மனித உறவுகளின் வீழ்ச்சியாக அமைகிறது.
முதன் முதலாக தமிழ் இலக்கியத்தில் நிலவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தவர்கள் , தமிழரின் நிலம் சார் மனப்பாங்கை கிரேக்க காவியமான ஒடிசி யில் ஒரு வேளாண்மையாளனின் பார்வைப் பொலிந்த இயற்கைக் காட்சி தருவதைக் காட்டுகிறது.

‘’ எங்கள் இடம் கொஞ்சம் கரடு முரடான பூமிதான் பயணத்துக்குச் சிரமமானதும் கூட- ஆனால் இங்கு நிறைய தானியமும் நல்ல கள்ளும் கிடைக்கிறது. மழையும் மென்மை மிக்க வளமான பணியும் இருக்கிறது. நிறையக் காடுகள் இருக்கிறது. வருடம் முழுவதும் குடித்து மகிழ ஊற்று நீர்  இருக்கிறது’’

 (ஒடிசி xiii)  இந்தப் பயன் மிக்க இயற்கைப்பரிமாணம் சங்க இலக்கியத்திலும் இருக்கிறது. என்கிறார்.
சிந்தனையாளர் ஞானி,பழைய நோக்கை விரிவுபடுத்தி அமைக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார். இன்றைய நகர வாழ்க்கை, ஆட்சி முறை, தொழில், மதம், சாதி,கல்வி, மருத்துவம், வாணிகம் தமிழகத்தில் பிறக் குடியேறிகளின் வரவு, தாக்கம், அரசியல் கட்சிகள், பிற இயக்கங்கள், என கருப்பொருள், உரிப்பொருளை வகை செய்யலாம் எனக் கருதுகின்றார்.
பண்டைய நிலவியல் சார் இலக்கியக் கோட்பாட்டைச் செழுமை செய்ய வேண்டிய அவசியம் உருவாகி இருப்பதற்கு வேறுபல காரணங்களும் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது புலம்பெயர்ந்து வாழ்கிற மக்களின் நிலை.

1.  தொழில், பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளில் வசித்தல்.
2. சொந்த நாட்டில் வாழ முடியாத அரசியல் காரணங்களால் வெளிநாடுகளில் வசித்தல்.

நிலவியல் சார் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் புதிய பரிணாமம் இவர்கள்.
நிலத்தையும் காலத்தையும் முதற்பொருளாகச் சொன்ன தொல்காப்பியரின் மேதமை பேருருக்கொள்கிறது. இழந்த நிலம், இழந்த வாழ்க்கை, இழந்த நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர்காலம் என்ற புதிய பரிணாமங்களின் ஊடாகவும் சஞ்சரிக்கிறது தொல்காப்பியம்.

0 கருத்துரைகள்: