Sunday 9 December 2012


இலக்கியத்தில் வேளாண்மை  - 3

இலக்கியத்தில் உள்ள வேளாண்மைப் பற்றித் தெரிந்து உழவர்கள் அதனை மேற்கொள்ளப் போகிறார்களா என்று எண்ணத் தோன்றும். உழவர்களுக்கு வேண்டியது சொற்பொழிவே பேச்சியோ அல்ல. மழைப்பொழிவு தான் வேண்டும். ஆனால் நமது பாட்டன், அதற்கு முன்பிரிந்தோர் எப்படி வேளாண்மை செய்தார்கள்? எவ்வளவு பயன் அடைந்தார்கள் ? என்று தெரிந்தால் நம் உழவுத்தொழில் எவ்வளவு மேன்மையானது , புனிதமானது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
அன்று இருந்ததோ முடி அரசு அதனால் தான்  அரசர்கள் வேளாண்மைத் தொழிலுக்கு உரியச் சிறப்பு அளித்தார்கள். அன்று நம்மை ஆண்டவர்கள் முடியரசர்களே என்றாலும் உழவுத் தொழிலின் நுணுக்கங்களை நுட்பமாக உனர்ந்து இருந்தார்கள். வேளாண்மை செய்த பலர் பெரும் தமிழறிஞர்களாக இருந்தார்கள். மன்ன்னிட்த்தில் பரிசும் பதவியும் பெற்றிருந்தார்கள். கேட்டுப் பெறவில்லை. பெருமையும், சிறப்பும் அவர்களை நாடி, தேடி வந்தன.
பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் உழவுத்தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் நன்கு கவனம் செலுத்தினார்கள். அவர்கள் கவனத்தில் குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்று புலவர்களும் அவ்வப் போழுது அரசனுக்கு அறிவுரை கூறி வந்தார்கள். இன்று அறிவுரை கூற முடியுமா? கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட அதிகாரிகள் எத்தனை பேர் உள்ளார்கள்? உழவர் தொழில் நன்கு நடைப்பெறுதற்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பது அரசரின் கடமை என்று புலவர்கள் கூறுகிறார். உழவுத்தொழில் ஓங்கிச் சிறந்து விளங்க வேண்டும் என்று கவிஞர் மன்ன்னுக்கு நினைவு படுத்துகிறார். இன்று இத்தகைய சான்றோர் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களின் பேச்சைக் கேட்க எவரும் இல்லை. குடிக்க நீரில்லை என்றால் உடம்பு அழியும் உடம்பில் உயிர் நீர் இருக்க வேண்டும். உணவு வேண்டும் அந்த உணவை யார் கொடுக்க முடியும்? உழவன் தான் கொடுக்க முடியும் ஆகவே உழு தொழில் சிறக்கத் தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மன்னனின்  கடமை. இன்று நீர் ஆதாரம் எப்படி உள்ளது? கதிர் விட்ட நெல் தண்ணீர் இன்றிக் கருகுகிறது. உழவன் கண்ணீர் வடிக்கிறான். வயல் பாளம்பளமாய் வெடித்துக் கிடக்கும் காட்சிகளை பார்க்கும் போது காண்போர் நெஞ்சம் கரைகிறது, கண்ணீர் மல்குகிறது. இதற்றுக் காரணமே தமிழன் தனது அடையாளத்தை இழந்தாதால் தான் இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பு வாழ்ந்த புலவர்கள் பாடலை இன்று நினைத்துப் பார்க்க வேண்டி உள்ளது.
நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே (புறம் -18)
 உண்டி – உணவு, யாக்கை – உடம்பு
வெறும் நீர் மட்டும் இருந்தால் போதுமானது அன்று. நிலம் வேண்டும். அந்த நிலத்தில் தேவையான உழவுத் தொழில் சிறக்க வேண்டும். உழவுத்தொழில் சிறந்தால் அனைவருக்கும் உணவு கிடைக்கும். இதனை இன்றுள்ளவர்கள் உணர்ந்து உழவர்கட்கு உதவ வேண்டும்.
வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த உழவர். உழவர்கட்கு ஏற்படும் குறைகளை நேராகச் சென்று மன்னனிடம் நயமாக எடுத்துச் சொல்கிறார். அந்த மன்னர் பெயர் சாழன் குளா முற்றத்துச் துங்சிய கிள்ளி வளவன். கிள்ளி வளவனைப் பார்த்து, ’’’’’’மன்னா மழை பெய்யுங்காலத்துப் பெய்யாமல் போய் விட்டாலும் விளைச்சல் குறந்தாலும் இயற்கைக்கு மாறுபாடன நிகழ்வு ஏற்பட்டாலும் உன்னையே பழித்துரைப்பார்கள். ஆகவே ஏழைகளைப் பாதுகாக்கும் உழவர்கள் குறை தீர்த்து வைப்பாய். அதனால் நாடு செழிக்கும், உன் ஆட்சி செழிக்கும்’’    என்று எடுத்துரைத்துப் பரிகாரம் பெற்றார்.
அன்று உழவர் சங்கம் இல்லை. ஒன்று திரண்டு குரல் கொடுக்கவில்லை. அரண்மனை நோக்கிச் சென்றார்.எத்தனையோ பகைவர்களை வென்று வீழ்த்திய மன்னனைப் பார்த்து அஞ்சாமல் குறைச்சொன்னார். மன்னன் அப்பொழுதே வரி நீக்கின்ன். உழவர்கள் வெள்ளைக்குடி நாகனார் தனக்காக மட்டும் கேட்கவில்லை. உழவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றார். மன்னன் ஆவன செய்தான். (பாடல்)

மாரி பொய்ப்பினும் வாரி குன்றிலும்
இயற்கை யல்லன செயற்கையிற் தோன்றினும்
காவலர் ப்பழிக்கும் இக்கண்ணகல் ஞாலம்
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி 
-          (புறநானுறு-பாடல் 35)   

உழவர்கட்கு அன்று மதிப்பு இருந்த்து. மரியாதை இருந்தது. மழை பெய்யாவிட்டால் மன்னர்கள் கவலை உற்றார்கள். அச்சப்பட்டார்கள்.  மக்களைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நல்ல வளம் வேண்டும் அந்த வளத்தைப் பயன் படுத்தி விளைச்சலைப் பெருக்கும் உழவர் வாழ்வில் குறை வரக்கூடாது என்று எண்ணி வாழ்ந்தார்கள். இதோ சேரன் செங்குட்டுவன்  என்னும் மன்னன் சொல்வதையும் கேளுங்கள். அக்கால மன்னர்கள் அரச பதவி ஏதோசுகத்தை அனுபவிக்க்க் கிடைத்த பதவி என்று கனவிலும் கருதவில்லை. மக்கள் குறைத் தீர்க்க முடியாத நிலை வந்து விடக்கூடாது என்று கனவிலும் நினத்து வாழ்ந்தார்கள். மழை இல்லாமல் பயிர்த் தொழில் செய்ய முடியாத நிலை வந்து விடக்கூடாது என்று எண்ணி வந்தார்கள். மன்னர் பதவி என்பது ஒரு துன்பம் தரும் பதவி என்றும் தொழுது வரவேற்க்கத் தக்கது அன்று சொல்லியும் நினைத்தும் வாழ்ந்தார்கள். மக்கள் நலனில் மன்னர் அக்கறைக் காட்டியதால் உழவர் பெருமக்களும் மற்றவர்களும் மன்னனைத் தெய்வமாகவே கருதி வந்தார்கள். தங்களுக்கு வரும் துன்பங்களை மன்னன் தீர்ப்பான் என்னும் நிறைவோடு வாழ்ந்து வந்தார்கள் செங்குட்டுவன் மன்னன் நிலைப் பற்றிச் சொல்வது நினைத்து நினைத்துப் பாராட்டப் பட வேண்டிய ஒன்று மக்கள்  மன்னன் அன்பில் நனைந்து வாழ்ந்தார்கள்.
மழை வளங் சுரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங் கோலஞ்சி
மன்பதை காக்கும் நல்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதக வில் லென ........ (சிலம்பு)

இப்படி நிறையச் செய்திகளைச் சொல்லிக் கொண்டே செல்ல்லாம். அந்தக் காலத்தில் உழவர்கட்கும், ஆள்வோருக்கும் இருந்த உறவைத் தெரிந்து கொள்ளவே சில எடுத்துக் காட்டுக்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம். 
 ஆனால் இன்று வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன. உழவர்களுக்கு சரியான உரிமை தர அரசு மறுக்கிறது. 
ஒன்று மட்டும் உண்மை . உழவன் வாழ்வு சிறக்காத வரை , அவன் குறைகளைத் தீர்க்கப் படாத வரை  நாட்டில் வளர்ச்சி இருக்காது பசியும் , பட்டினியும் தான் இருக்கும்
 ’’விவசாயம் தான் வாழ்வுக்கு மற்றவையெல்லாம் வசதிக்குதான், வாழ்வை தொலைத்து வசதியாக நினைக்கும் இன்றயச் சமூகம் நிச்சயமாக ஒரு பெரும் அழிவை சந்திக்கும்!  அப்போது தான் தெரியும்  உழவனின்  அருமை’’


 சு. ஆனந்தராசு  

0 கருத்துரைகள்: