Saturday 3 October 2009

முல்லைப் பெரியாறு தமிழனுக்குச் சொந்தமில்லை!

முல்லைப் பெரியாறு தமிழனுக்குச் சொந்தமில்லை!





முல்லைப் பெரியாறு தமிழகத்துக்குச் சொந்தமானதல்ல. அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெறுவதற்குக்கூட தமிழனுக்கு உரிமை இல்லை என்கிற நினைப்புதான் கேரள அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.



இன்றைய தேதியில் முல்லைப் பெரியாறின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஜூன் மாதம் பருவமழை ஆரம்பித்தால்தான் அணைக்குத் தண்ணீர் வர ஆரம்பிக்கும். சரியான நேரத்தில் பருவமழை பொழிந்து அணைக்குத் தண்ணீர் வந்தால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் முதல் போகம் பயிர் செய்ய முடியும். இப்போது அணையில் தண்ணீர் இல்லாததால் முதல் போக விவசாயத்துக்கான தண்ணீர் கிடைக்காது என்கிற செய்தி கேட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் வருத்தத்தில் மூழ்கி இருக்கிறார்கள்.



தமிழக மக்கள் நியாயமாகக் கேட்கிற மாதிரி 152 அடிக்கு அணையில் நீரைத் தேக்கி வைத்திருந்தால் தமிழகத்தில் இருக்கும் ஐந்து மாவட்ட விவசாயிகளின் முதல் போக விவசாயத்துக்கு பங்கம் வந்திருக்காது. 152 அடிக்குத்தான் தேக்கி வைக்கவில்லை. உச்சநீதிமன்றம் சொன்ன அளவுக்காவது தண்ணீர் தேக்கி இருந்தால்கூட பாதி நிலத்துக்குத் தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், இரண்டையும் செய்யாமல் 136 அடிக்கு மேல் ஒரு இஞ்ச்கூட தண்ணீர் தேக்க விடமாட்டோம் என்று அடம் பிடிக்கும் கேரள அரசியல்வாதிகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.



முல்லைப் பெரியாறு அணை பற்றி ஒரு அருமையான புத்தகம் சமீபத்தில் வந்திருக்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகம் முல்லைப் பெரியாறு பற்றி அத்தனை விஷயங்களையும் புட்டுப் புட்டு வைக்கிறது.



இப்போது கேரள எல்லைக்குள் இருக்கும் முல்லைப் பெரியாறு நிலப்பகுதி உண்மையில் தமிழகத்துக்குச் சொந்தமானது. ஆங்கில அரசாங்கம் செய்த ஒரு சிறுதவறின் காரணமாக, தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் ஜென்மப் பகை உருவாகிவிட்டது. நமக்குச் சொந்தமான நிலம் எப்படி கேரள அரசாங்கத்திடம் போனது என்பதில் ஆரம்பித்து, பென்னிகுக் என்னும் ஆங்கிலேயர் முல்லைப் பெரியாறு அணையை எப்பாடுபட்டுக் கட்டினார், பிரச்னை எப்படி ஆரம்பமானது, பிரச்னையின் இன்றைய நிலை என்ன என்பது வரை மிக மிக எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியார் ஊரோடி வீரகுமார். இவர் ஒரு இயற்கை விவசாயி. முல்லைப் பெரியாறு பற்றி கிஞ்சித்தும் தெரியாதவர்கள் அலுங்காமல் குலுங்காமல் அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அவசியம் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் .



கர்நாடகவோடு காவிரிப் பிரச்னை, ஆந்திராவுடன் பாலாறில் பிரச்னை என தமிழகத்தின் மூன்று திசைகளில் உள்ள மாநிலங்கள் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தொல்லை கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு நதிகளை தேசியப் பட்டியலில் கொண்டு வருவதுதான். ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாக்கப்படாமல் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கிற ஒரு அமைப்பிடம் நீர் மேலாண்மை இருக்க வேண்டுமே ஒழிய, இந்தத் தண்ணீர் தமிழக விவசாயிக்கா, கர்நாடகா விவசாயிக்கா என்று பார்க்கக்கூடாது.
 
 


                                            முல்லைப் பெரியாறு அணை

0 கருத்துரைகள்: