Saturday 3 October 2009

பஞ்சகவ்யம் - விவசாயிகளின் நிவாரணி!

             பஞ்சகவ்யம் - விவசாயிகளின் நிவாரணி!






``ஜீபும்பா! எந்தப் பயிரும் வளர்வதற்குத் திராணியற்ற இந்த நிலத்தில் இனி நெற்பயிரும் பருப்பும் கத்திரியும் வெண்டையும் வாழையும் பூஞ்சோலையும் மாவும் தென்னையும் பலாவும் வளர்ந்து செழிக்கட்டும்' என்று நம்பிக்கையோடு பஞ்சகவ்யத்தைத் தெளியுங்கள்! உங்கள் வயலில் நீங்கள் இதுவரை பார்த்திராத அதிசயத்தை அடுத்து வரும் சில வாரங்களில் பார்க்க ஆரம்பிப்பீர்கள்''




இப்படிச் சொல்வது நானல்ல, தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள்.



`பஞ்சகவ்யமா? அப்படி என்றால் என்ன? அதைக் கண்டுபிடித்தது யார்?' என்று விசாரித்தபோது `கரூருக்குப் பக்கத்தில் கொடுமுடி என்கிற ஊரில் நடராஜன் என்று ஒருவர் இருக்கிறார். ஆங்கில மருத்துவர். அவரிடம் போய் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்' என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் நடராஜன் அய்யா வீட்டின் கதவைத் தட்டினோம். பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்தது நீங்கள் தானா? என்று கேட்டோம். பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.


``நான் தான் பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்தேன் என்பது கொஞ்சம் மிகையான கூற்று. 1998-ஆம் ஆண்டில் பெங்களூரில் நடந்த மூலிகைக் கண்காட்சிக்குப் போனபோது Organic Farming - Source Book என்று ஒரு புத்தகத்தைப் பார்த்தென். பிரேசில் நாட்டு விஞ்ஞானி ஒருவர் எழுதியது. பசுவின் பாலையும் சிறுநீரையும் 21 நாட்கள் ஊறவைத்து நுண்ணாட்டச் சத்து கலந்து அதில் இரண்டு சதவிகித கரைசலைத் தண்ணீருடன் சேர்த்து திராட்சை தோட்டத்திற்கு அடித்தபோது நல்ல பலன் தந்ததாக எழுதியிருந்தார்.



நாமும் இது போல செய்து பார்க்கலாமே என்றிருந்த நேரத்தில் மகா சிவராத்திரி வந்தது. கோயிலுக்குப் போய் சாமியை தரிசிக்கச் சென்றேன். பூஜைக்குப் பின் பிரசாதம் கொடுத்தார்கள். சுவாமிகளே! என்ன இது? என்று கேட்டேன். பஞ்சகவ்யம் என்றார். இதை ஏன் கொடுக்கிறீர்கள் என்றேன். இது வந்த நோயைப் போக்கும். இனிவரும் நோயை வராமல் தடுக்கும்'' என்றார்.



பசுவைன் சாணியையும் கோமியத்தையும் மட்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக பசு கொடுக்கும் ஐந்து பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். என் வீட்டிலேயே பஞ்சகவ்யம் தயாரித்தேன். அதை சில பயிர்களின் மீது அடித்தும் பார்த்தேன். அதன்பிறகு நடந்தது அற்புதம்.



இன்றைக்குத் தமிழகம் முழுக்க பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பஞ்சகவ்யத்தை பயன்படுத்துகின்றனர். ஏழை விவசாயிகளுக்குக் கிடைத்த போக்கிஷம் என்று புகழ்கின்றனர். இதுதான் நான் பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்த கதை'' என்று முடித்தார்.



பஞ்சகவ்யத்தை எப்படித் தயாரிப்பது? இந்த இயற்கை உரத்தைத் தெளித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை பிறகு சொல்லவா?


`பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை கிடைக்கும்?' - இந்தக் கேள்வியை பஞ்சகவ்யத்தைக் கண்டுபிடித்த டாக்டர் நடராஜனிடம் கேட்டோம்.




அவர் சொன்னார்: ``இப்படி, அப்படி என்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான பலன்கள் பல கிடைத்திருக்கிறது விவசாயிகளுக்கு. குறிப்பாக, ஆயிரமாயிரமாக செய்துவந்த உரச்செலவு சுத்தமாக இல்லாமல் போயிருக்கிறது. மகசூலும் கணிசமாகக் கூடியிருக்கிறது'' என்று சொன்னவர் எந்தெந்த செடியில் என்னென்ன நன்மை விளைந்திருக்கிறது என்பதையும் சொன்னார்.









மா



பூ பூக்கும் காலத்தில் மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் மறைக்கிற மாதிரி பூ பூக்கும். எவ்வளவு காற்று அடித்தாலும் பூ கொட்டாது. பூ பூத்து, நிறைய பிஞ்சுகள் விடும். பிஞ்சுகள் நன்கு காய்த்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மாவைப் பொருத்தவரை ஒரு ஆண்டு அதிக விளைச்சல் தந்தால், அடுத்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்பார்கள். பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் இந்தப் பிரச்னைகளுக்கு எளிதில் முடிவு கட்டிவிடலாம்.



எலுமிச்சை



எலுமிச்சை செடிகளுக்கு பஞ்சகவ்யத்தை ஊற்றினால், ஆண்டு முழுக்க பூக்களும் பிஞ்சுகளும் பழங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். விளைச்சல் பெருகுவதோடு பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக நாட்கள் புத்தம் புதிசாக இருக்கும் பஞ்சகவ்யத்தில் வளரும் எலுமிச்சையில் சாறு அதிகம். ஊறுகாய்க்கு பிரமாதமாக இருக்கும். (இது மாதிரியான எலுமிச்சை புளியங்குடி அண்ணாச்சி அந்தோணிசாமியிடம் கிடைக்கிறது! )



முருங்கை



முருங்கை மரத்துக்கு பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் நிறைய பூ பூத்துக் குலுங்கும். இதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் செஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள மல்லாண்டி கலைமணியின் தோட்டத்திற்குப் போய் பார்க்கலாம்.



``கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, வாழை, கரும்பு, மஞ்சள், வெற்றிலை, மல்லிகை, கத்தரி, தென்னை, நிலக்கடலை, எள், நெற்பயிர் என்று பலவற்றிலும் அடித்துப் பார்த்துவிட்டோம். அத்தனையிலும் அற்புதமான மகசூல்'' என்று சந்தோஷமாகச் சொன்னார் டாக்டர் நடராஜன்.



பஞ்சகவ்யத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்கிற கேள்விக்கான பதிலை நாளை பார்ப்போமா?


`பஞ்சகவ்யத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?'





``செங்கல்பட்டு இயற்கை விவசாயி பி.பி.முகுந்தன், கள் சேர்த்தும் சேர்க்காமலும் இரண்டு விதமாக பஞ்சகவ்யத்தைத் தயார் செய்து, அங்குள்ள உயிரியில் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் உள்ள முதன்மை விஞ்ஞானி சோலையப்பனிடம் ஆராய்ச்சி செய்யக் கொடுத்தார். அதை ஆராய்ந்து பார்த்ததில், அவர்களே பிரமித்துப் போகும் அளவுக்கு அதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக மிக அதிகமாக இருப்பதையும் அந்த நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடன் இருப்பதையும் கண்டார்கள்.



பஞ்சகவ்யத்தில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் பத்து கோடி இருந்தது. தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசடோபேக்டர் பல லட்சக்கணக்கில் இருந்தது. மணிச்சத்தைக் கரைத்துக் கொடுக்கக்கூடிய










பாஸ்போபேக்டீரியா ஐந்து கோடிக்கும் அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் சூடோமோனஸ் ஆறு கோடிக்கு மேல் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிசயித்துப் போனார்கள்.


















பயிர்கள் வளர்வதற்குத் தேவையான் 13 வகையான பேரூட்ட, நுண்ணூட்டச் சத்துக்களும் தேவையான அளவில் உள்ளன. எனவே, எல்லா வகையான பயிர்களுக்கும் தாராளமாகப் பயன்படுத்தலாம்'' என்றார் அவர்.


















பஞ்சகவ்யத்தை எப்படித் தயாரிப்பது என்பதையும் எப்படி பயன்படுத்துவது என்பதையும் `பணம் குவிக்கும் பஞ்சகவ்யா' என்கிற புத்தகத்தில் விளக்கமாக எழுதியிருக்கிறார் டாக்டர் நடராஜன். கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து பதிப்புகளைக் கண்டுவிட்டது இந்தப் புத்தகம். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது.









சில ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சகவ்யத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஆந்திர அமைச்சர் ஒருவர், அந்த மாநில அரசாங்கத்துக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்த பருத்திச் சாவைத் தடுக்க பஞ்சகவ்யத்தை பயன்படுத்தலாமா என்று கேட்டு, டாக்டர் நடராஜனின் வீட்டுக்கே வந்துவிட்டாராம்.


டாக்டர் நடராஜன் கண்டுபிடித்தது பஞ்சகவ்யம் அல்ல! தமிழ்நாட்டு விவசாயிகளின் பஞ்சத்தைப் போக்க பஞ்சாமிர்தம்!








டாக்டர் நடராஜனைத் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:




டாக்டர் கே.நடராஜன்,

தலைவர், கிராமப்புற சமுதாய செயல்மையம்,

ஆர்.எஸ். மருத்துவமனை வளாகம்,

கொடுமுடி, ஈரோடு-638 151.



போன்: 04204-222369, 222469.

0 கருத்துரைகள்: